Thursday, February 28, 2008

பெரியாரின் பரம்பரையினர் நாம்

சுயநலம் என்பது தன்னுடைய நலம். சுயமரியாதை - தன்னுடைய மரியாதை. அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தன் நலத்தைக் காப்பாற்றக்கூடாது, மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மரியாதையைக் காப்பாற்றினால் தான் அவன் பொதுநலவாதியாக இருக்க முடியும். மரியாதையை விட்டு விட்டு, நலத்தைக் காப்பாற்றிக் கொள்கிறவன் சுயமரியாதைக்காரனாக இருக்க முடியாது. எனவேதான் சுயமரியாதை என்பது வேறு, சுயநலம் என்பது வேறு, இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொண்டால், சுயநலத்தை விடுகின்ற மனிதனால்தான் சுயமரியாதையோடு வாழ முடியும். சுயமரியாதை உள்ளவன்தான் வீரனாகச் சாவான்; சுயமரியாதையை இழந்தவன் கோழையாகத்தான் சாவான். நீ கோழையாக இருக்க விரும்புகிறாயா? வீரனாகச் சாக விரும்புகிறாயா? என்று கேட்டால், உண்மையான தமிழன் நான் வீரனாக சாக விரும்புகிறேன் என்று சொல்லுவான். அவன்தான் சுயமரியாதைக் காரன். நான் கோழையாக இருந்தாலும் பரவாயில்லை, நான் வாழ்ந்தால் போதும் என்று சொல்கிறவன் சுயமரியாதைக்காரன் அல்ல. இதைத்தான் நம்முடைய நெஞ்சிலே ஆணித்தரமாகப் பதிய வைத்தார் தந்தை பெரியார். நம்முடைய குருநாதர் அவர். நம்முடைய ஆசிரியர் அவர். நம்முடைய ஆசான் அவர். தமிழ்நாட்டின் பண்பாட்டை, வீரத்தை, வைராக்கியத்தை, நெஞ்சுரத்தை நமக்குக் கற்பித்துத் தந்தவர். நம்முடைய ஊனோடும், உயிரோடும், உணர்ச்சியோடும் கலந்து ஊட்டியவர். அப்படிப்பட்ட பெரியாரின் பரம்பரையினர் நாம். பெரியாருடைய வழித் தோன்றல்கள் நாம். நாம் யாருக்கும் தலைவணங்க மாட்டோம். நாம் வீரர்களாக வாழ்வோம். தீரர்களாக வாழ்வோம். மானம் உள்ள மனிதர்களாக வாழ்வோம். மானத்தோடு வாழ்வோம். மரியாதையோடு வாழ்வோம். சுயமரியாதையோடு வாழ்வோம். சுயமரி யாதையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்போம். அப்படிப்பட்ட ஒரு உணர்வை, அப்படிப்பட்ட ஒரு சூளுரையை இந்த நாளில் ஏற்போம்.

-------டாக்டர் கலைஞர் (முரசொலி 23.2.2008 நாளிதழில் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து)

Wednesday, February 27, 2008

மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல

மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது, பொழுது போக்கிற்கான செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களில் எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான், மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப் பற்றி புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.

மதமாற்றத்தை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். இது, சமூகம் மற்றும் மதம் சம்பந்தப்பட்டது; பொருளியல் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. இதை எப்படிப் புரிந்து கொண்டாலும், தீண்டாமையின் தன்மையையும் அது எப்படித் தோன்றியது என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைப் புரிந்து கொள்ளா விட்டால், நான் அறிவித்திருக்கும் மதமாற்றத்தின் உண்மையான பொருளை நீங்கள் உணர முடியாமல் போய்விடும்.

தீண்டாமையைப் பற்றியும் அது நடைமுறை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், உங்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள். ஆனால், உங்களில் ஒரு சிலரே, இதுபோன்ற வன்கொடுமைகள் எல்லாம் ஏன் நடக்கிறது என்று சிந்தித்திருப்பீர்கள். சாதி இந்துக்களின் கொடுங்கோன்மைக்கு மூல காரணமாக இருப்பது எது? என்னைப் பொறுத்தவரை, இதை நீங்கள் புரிந்து கொள்வது மிக மிக அவசியம் என்று கருதுகிறேன்.

இது, இரு எதிரிகளுக்கிடையே நடைபெறும் சண்டை அல்ல. தீண்டாமைப் பிரச்சினை என்பது வகுப்புப் போராட்டத்துடன் தொடர்புடையது. இது, சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். இது, ஒரு மனிதனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி அல்ல. இது, ஒரு வகுப்பு இன்னொரு வகுப்புக்கு எதிராக இழைக்கும் அநீதியாகும். இந்த வகுப்புப் போராட்டம், சமூக அந்தஸ்துடன் தொடர்புடையது. ஒரு வகுப்பு மற்றொரு வகுப்புடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று இப்போராட்டம் உணர்த்துகிறது. ஒரு வகுப்பு மற்ற வகுப்புடன் சமமான நிலையைக் கோரும் போதுதான் இப்போராட்டம் தொடங்குகிறது.

அவர்களுடைய கோபத்திற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது மிக எளிது. அவர்களுக்கு சமமாக நீங்கள் நடந்து கொள்வது, அவர்களைப் புண்படுத்துகிறது. தீண்டாமை என்பது குறுகிய அல்லது தற்காலிகமானது அல்ல. இது, நிரந்தரமான ஒன்று. இது, தலைமுறை தலைமுறையாக இருக்கக்கூடியது; ஒரு மனிதன் இறந்த பிறகும் தீண்டாமை தொடருகிறது. ஏனெனில், சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதமே சாதி இந்துக்களின் நம்பிக்கையின்படி என்றுமே மாற்ற முடியாத ஒன்றாகும்.

காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்க முடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.

இது குறித்து நீங்கள் சிந்திக்கவில்லை என்றால் வேறு வழியே இல்லை. சாதி இந்துக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அடிமைகளாக வாழவிரும்புகிறவர்கள் இப்பிரச்சினை குறித்து எப்போதுமே கவலைப்படுவதில்லை. ஆனால், சுயமரியாதைமிக்க சமத்துவமிக்க வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் இது குறித்து சிந்தித்தாக வேண்டும்.

இப்போராட்டத்தை சமாளிப்பது எப்படி? என்னைப் பொருத்தவரை, இக்கேள்விக்கு விடை காண்பது கடினமல்ல. எந்தவொரு போராட்டத்திலும், யாருக்கு வலிமை அதிகம் இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றுவிடுவர் என்பதை இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். வலிமையற்றவர், வெற்றிபெறும் வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. இது அனுபவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி இப்போராட்டத்தில் வெற்றிபெற, உங்களுக்குப் போதிய பலம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.


1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரை.

Tuesday, February 26, 2008

தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

கேள்வி:
அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்திவிட முடியுமா?

பதில்:
நான் ராஜீவ் கொலையை ரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், ‘இஸ்மாயில்’ என்று பச்சைக் குத்திக் கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேவின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் என் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை?

இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை.

அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்தபோது, இந்திராகாந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச் சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா?
மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, ‘உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?’ என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. ‘ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய்விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு’ என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீகாந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை. உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?

-------14-2-2008 "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் அ.தி.மு.க.முன்னாள் அவைத்தலைவர் திரு."புலமைப்பித்தன்" அவர்கள் அளித்த நேர்காணலில் ஒரு பகுதி

Monday, February 25, 2008

எனக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது.

கேள்வி: தங்களைப் போல் 95 வயது வரையிலும்
வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில்: எப்போதும் ஆக்டிவ்வாக (சுறுசுறுப்பாக)
இருக்க வேண்டும்.

கேள்வி: இந்த வயதிலும் தாங்கள் பல மைல்கள்
சுற்றுப்பயணம் செய்கிறீர்களே, உடல் நலம்
பாதிக்காதா?

பதில்: வயதிற்கும், இதற்கும் எந்த வித சம்பந்தமும்
இல்லை. என்னைப் பொறுத்த வரை சும்மா
இருக்கப் பிடிக்காது. சுற்றுப்பயணம்
செய்தால் தான் நன்றாக இருக்கிறது.

கேள்வி: எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

பதில்: சாதாரணமாக இரவு 8, 9 மணிக்குத் தூங்கி
விடுவேன். பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள்
இருந்தால் இரவு 11 மணிக்கு 12 மணிக்குமேல்
தூங்குவேன். எப்படியும் 8 மணி நேரம்
தூங்கிவிடுவேன்.

கேள்வி: தங்கள் உணவு பழக்கம் என்னென்ன?

பதில்: எப்பொழுதும் காலை 6 மணிக்கு எழுந்து
விடுவேன். 8 மணிக்கு 2 இட்டிலி ஒரு
வாழைப்பழம் சாப்பிடுவேன்.
(முன்பெல்லாம் 4, 3 வாழைப் பழங்கள் சாப்பிட
முடிந்தது) அதன் பிறகு பார்வையாளர்களைச்
சந்திப்பேன். இடையிடையே சிறிது காப்பி,
பால், அருந்துவேன். மதியம் 12, 1 மணிக்குள்
ஒரு கரண்டி சாதம் சிறிதளவு மாமிசம்,
தயிர், குருமா, ஒரு வாழைப்பழம்
இதுதான் ஆகாரம், மாமிசம்
சாப்பிடாவிட்டால் அவ்வளவு திருப்திகரமாக
இருக்காது.

கேள்வி: மாமிசம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி
பாதிக்கப்படவில்லையா?

பதில்: என்னைப் பொறுத்த வரை மற்ற உணவு
பதார்த்தங்கள் விட மாமிசம் சாப்பிட்டால்
ஜீரணமாகி விடுகிறது. அதனால் எந்தவித
தொந்திரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால்
தான் தொந்தரவு. இரவு 7 மணியிலிருந்து
8 மணிக்குள் 2 இட்லி, ஒரு வாழைப்பழம்,
ஒரு டம்ளர் பால், அத்துடன் சரி.
காப்பியும் பாலும் தான் முக்கிய உணவு

கேள்வி: பொதுக் கூட்டங்கள், மற்ற நிகழ்ச்சிகள் உள்ள
நாட்களில் என்ன செய்வீர்கள்?
பதில்: பொதுக் கூட்டங்கள், இரவு 10, 11 மணிக்கு
முடிந்ததும் அதன் பின்புதான் சாப்பிடுவேன்.

கேள்வி: ஒரு நாள் பொழுதை எப்படி கழிக்கிறீர்கள்?
பதில்: முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் படிப்பேன்;
எழுதுவேன்.
ஆனால் இப்போது படிக்க கஷ்டமாக இருக்கிறது.
எழுதுவதற்கு சலிப்பாக இருக்கிறது.
அத்துடன் முன்பு மாதிரி மூளை தெளிவாக
இல்லை கஷ்டப்பட்டு சிந்திக்க வேண்டியிருக்கிறது.
முன்பெல்லாம் ஒன்றைப்பற்றி தொடர்ச்சியாக
வரும், ஆனால் இப்பொழுது நினைவாற்றல்
குறைந்து வருகிறது.

கேள்வி: மது அருந்தும் பழக்கம் பற்றித் தங்கள் கருத்து
என்ன?

பதில்: இது நாள் வரை நான்மதுவை அருந்தியதே
இல்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை
பலருக்கு வாங்கிக்கொடுத்து இருக்கிறேன்.
மது அருந்துவதால் கெடுதில்லை.
அளவுக்கு மேல் போனால் தான் எதுவும்
கெடுதலே தவிர, அளவோடு இருந்தால்
எந்த வித கெடுதலும் இல்லை.

கேள்வி: முன்பெல்லாம் மாலை நேரங்களில் கார் மூலம்
உலாவப் போவீர்களே, இப்போது போவதுண்டா?

பதில்: என்றைக்காவது ஒரு நாள் போவேன்.
முன்பு போல் இப்போது போக முடிவதில்லை.
பொழுது போகவே கஷ்டமாகத்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட சமயங்களில் போவதுண்டு.

கேள்வி: கிளர்ச்சி, போராட்டம் நடத்த வேண்டும்
என்கிறீர்களே அது எப்படியிருக்கும்?

பதில்: என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம்,
ஆனால், நான் எதிலும் நேரடியாகவே
ஈடுபட நினைக்கிறேன். நான் என்ன
சொல்லுகிறேனோ, அதை நானே முன்னின்று
செய்தால் தான் நன்றாக இருக்கும். ஒதுங்கிக்
கொள்வது என்பது எனக்கு பிடிக்காது.

கேள்வி: ஒரு குறிப்பிட்ட இனத்தார் மீது தங்களுக்கு
வெறுப்பு ஏற்பட காரணம், தாங்கள் அரசியலில்
ஈடுபட்ட சமயத்தில் முதன் முதலாக ஒரு விருந்தில்
தாங்கள் அலட்சியமாக நடத்தப்பட்டது
என்று தான் சொல்லப்படுகிறது.

பதில்:
எனக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது.
நான் எதையும் லட்சியம் செய்யாமல் முரட்டுத்
தனமாக யதேச்சையாகத் திரிந்தவன்.
அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட
அனுபவங்களும் சமுதாயத்தில் இருந்த
மூடப்பழக்க வழக்கங்களும் தான் காரணமே
தவிர, வேறு காரணம் எதுவுமில்லை. ஆனால்,
அந்தக்காலத்தில் விருந்துகளில் கூட
நம்மை மிக இழிவாகவும், தரக்குறைவாகவும்
நடத்தி ஒதுக்கியே வந்தார்கள்.

-----தந்தைபெரியார் -"மாலைமுரசு" நாளிதழுக்கு அளித்த பேட்டி-16.9.1973

பெரியார் வாழ்க!

வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக் கென்றும் இளையார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமிப் பெரியார் வாழ்க!
சமயவெறி தணிக என்றார்;
சாதிவெறி தணிக என்றார்;
சகோதரர் போல்
அமைக என அறிவித்தார்!
பெண்களெலாம் நல்லுரிமை
அடைக என்றார்!
எமை அகத்தும் புறதினிலும்
திருந்துதற்கே எம்பெருமான்
சொன்ன தெல்லாம்,
இமயமலை இல்லையென்று
சொன்னதுபோல் எண்ணினோம்;
பின் தெளிந்தோம்!
பயிர் போன்றோர் உழவருக்கு!
பால்போன்றோர் குழந்தைகட்கு!
பசும்பாற் காட்டித்
தயிர் போன்றார் பசித்தவர்க்கு!
தாய்போன்றோர் ஏழையர்க்கு!
தகுந்தவர்க்குச்
செயிர் தீர்த்த தவம் போன்றார்!
செந்தமிழ் நாட்டிற் பிறந்த
மக்கட்கெல்லாம்,
உயிர் போன்றார்! இங்கு வந்தார்;
யாம் கொண்ட மகிழ்ச்சிக் கோர்
உவமை உண்டோ?

------------ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

Sunday, February 24, 2008

அவர் பெரிய ரிஷி….ஈசுவரன் மாதிரி!

தந்தை பெரியாரும் தலைவர் கலைஞரும் நீண்ட தூரம் கார்ப்பயணம் செய்தவர்கள். நிறைய மைல்கள் பயணம் செய்த இந்தியத் தலைவர்கள் வரிசையில் முதல் மூவர் என்ற இடத்தில் இருப்பார்கள்.

காந்தியாரைத் தவிர்த்து வேறெந்த இந்தியத் தலைவரும் இவ்வளவு நீண்ட தூர சாலைப் பயணத்தை மேற்கொண்டிருப்பார்களா என்பது அய்யமே!

பெரியார் இந்தியாவிற்குள் தில்லி வரையிலும் கூடச் சீருந்தில்தான் பயணம் செய்தார்.

தந்தை பெரியார் இப்படி எழுபது ஆண்டுகளும், கலைஞர் அறுபது ஆண்டுகளும் பயணம் செய்துள்ளனர்.

இருவருடனும் பயணம் செய்வது இனிய பெருமைக்குரிய அனுபவம் மட்டுமன்று, அஃது ஒருவகைப் பாடசாலை -பயிற்சி வகுப்பு, இதுவரை இருவரும் மேடையில் சொல்லாத - எழுதாத பல செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் இடம்.

இருவருமே இரவுப் பயணங்களில் அனேகமாய்த் தூங்க மாட்டார்கள். காரோட்டியை விட வழிதடத்தில் கவனமாய் இருப்பார்கள். இருவருக்கும் தமிழ் நாட்டின் முக்கிய வழித்தடங்கள் அத்துபடி. வண்டியின் வேகம் சற்று அதிகமாய் கூடினாலும் குறைந்தாலும் ஓட்டுநரை முறைப்படுத்திக் கொண்டே வருவார்கள்.

நீண்ட பயணங்களில் கையில் கொண்டு வரும் நொறுக்குத் தீனியை வண்டியில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொண்டு தாமும் சாப்பிடுவார்கள்.

சாப்பிடும் முன்னும் பின்னும் கை கழுவுவது - பரிமாறுகிறவர்கள், பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதிலெல்லாம் கலைஞர் ரொம்பவும் கவனமாய் இருப்பார். பெரியாருக்குத் தூய்மையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். வண்டியை வழியில் நிறுத்தி யார் எதைக் கொடுத்தாலும், பெரியார் - தூய்மையாய் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யமாட்டார். பெரியார் அடிக்கடி சொல்வார் “என் நாக்கும், மூக்கும், ஏற்றுக் கொள்ளும் எதையும் -எங்கேயும் சாப்பிடுவேன்.” என்பார்.

கலைஞரின் மகிழுந்து புறப்பட்டால் அனாவசிமாய் எங்கும் நிற்காது. பெரியார் அப்படியல்ல; வழியிலுள்ள நெருக்கமான நண்பர்களின கடைகள்-வீடுகள் இருந்தால் நின்று பேசிவிட்டுத்தான் போவார். வ்ண்டியில் மணியம்மை இருந்தால் நிற்குமிடங்களின் எண்ணிக்கை சற்றுக் கூடும். வண்டியில் பாரமும் சற்று அதிகமாகும்! (ஆங்காங்கே தோழர்களின் கடைகளில் பொருள்களை ஆர்வத்துடன் விலை விசாரிப்பார், பொருள்கள் வண்டிக்கு வந்துவிடும். பெரியார் விரும்பாமல், என்னதான் தடுத்தாலும் அது நடக்கும்!)

பெரியாருக்குக் கண் மிகவும் கூர்மை; மூக்கு அதைவிடக் கூர்மை?

தென் மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது வண்டி ஒரு சிற்றூரைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. பெரியார் திடீரென “வண்டியை நிறுத்து…. வண்டியை நிறுத்து இங்கே வடை சுடுகிறான்… நல்ல வாசனை வருது.. ” என்றார்.

இமயவரம்பன் பெரியாரின் காதுக்கு கேட்காமல் ஓட்டுநரிடம் “பேசாம ஓட்டய்யா.. கண்ட எடத்திலே எதையாவது தின்று ஏதாவது கோளாறாயிடும்” என்றார். பெரியார் ஒரு சின்னக் குச்சியால் வண்டி ஓட்டுநரின் தலையில் தட்டினார்.

“நிறுத்து..நிறுத்து” என்றார்.

வடை வாங்கி வரும்படி விரட்டினார். இது போன்ற நேரங்களில் வண்டி சில நிமிடங்கள் நிற்கும். வழியில் வரும் புகை பிடிக்கின்ற தோழர்களுக்கு இஃது ஒரு வாய்ப்பு.

ஒரு புளிய மரத்தினடியில் ஒரு வயதான பெண்மணி வடை சுட்டுக்கொண்டிருந்தார். வடை பெரியாருக்குதான் என்று தெரிந்தவுடன் தானே அப்பெண்மனி வடைகளை எடுத்துக்கொண்டு அருகில் வந்து பெரியாரிடம் தந்தார். பெரியார் ஒரு வடையைச் சுடச்சுடச் சாப்பிட்டுவிட்டுப் பாராட்டினார்.

“ரொம்ப நல்லா இருக்கு.. ரொம்ப…ரொம்ப… ” என்றார். வடைக்காரப் பெண்மணி “அய்யா வெல்ல ஆப்பம் சாப்பிடுறீயளா… காலையிலே சுட்டது..கொஞ்சம் ஆறி இருக்கும்” என்றார்.

“பரவாயில்லை… கொண்டாங்க..கொண்டாங்க….”என்றார்.

கொண்டு வந்தார். நல்ல, தண்ணீர் கலக்காத தேங்காய்ப்பால் ஆப்பத்தைத் தொட்டுச் சாப்பிட பெரியார் ருசித்து இரண்டு மூன்று ஆப்பங்களைச் சாப்பிட்டார். அதையும் பாராட்டினார். அந்தப் பெண்மணியிடமே, “இவங்க எந்தக் கலப்படமும் செய்ய மாட்டாங்க.. பாவம் இவங்களுக்கு அந்த நுட்பமெல்லாம் தெரியாது” என்று சிரித்துக்கொண்டார்.

இமய வரம்பன் முனகிக்கொண்டே இருந்தார். பெரியார் இமயவரம்பனின் முனகலுக்குப் பொதுப்படையாய்ப் பதில் சொன்னார்.

“இவுங்க செய்யுறது ‘ஹோம்லி’ யா இருக்கும் ஆறிப்போனாலும் ரொம்ப சுவையா இருக்கு” என்றார்.

பணத்தை கொடுக்கப் போனோம். அவர் வாங்க மறுத்துவிட்டார். உடன் வந்த நண்பர் சற்று அதட்டலாகச் சத்தம் போட்டார். “இந்தா கிழவி… சும்மா பந்தா பண்ணாம வாங்கிக்க..” என்றார்

ஆப்பக்காரப் பெண்மணி தீர்க்கமாயப் பதில் சொன்னார் “தம்பி…. பேசாமப் போங்க… அவருகிட்டேயெல்லாம் பணம் வாங்கப்படாது…அவரு பெரிய ரிஷி மாதிரி… ஈஷ்வரன் மாதிரி.. உனக்கெல்லாம் அவரப் பத்தி ஒண்ணும் தெரியாது” என்றார்.

நாங்கள் விக்கித்துப்போய்விட்டோம். பெரியாரோடு ‘அணுக்கமாய் ஆண்டுக்கணக்கில் இருக்கும் அன்பர்கள்’ என்ற எங்கள் ‘ஆணவம்?’ அடிப்பட்டு போய்விட்டது.

தோல்வியோடு அய்யாவிடம் போனோம். வாங்க மறுத்ததை மட்டும் சொன்னோம். அய்யா ‘வற்புறுத்திக் கொடுத்துவிட்டு வர வேண்டியது தானே ‘ என்று கடிந்து கொண்டார்.

நடந்ததை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே சொன்னோம்.’ரிஷி..ஈஸ்வரன் .. என்கிறாரா’ பெரியார் சில நிமிடங்கள் வெட்ட வெளியையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘உம்..இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ..’ என்றவர் சரி..சரி…புறப்படு’ என்றார்.

----------- நன்றி: www.thanthaiperiyar.org

தளை அறு!

கடவுள் கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள் என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்

உடமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்;
'கடையர்' 'செல்வர்' என்ற தொல்லை
கடவுள்பேர் இழைத்ததே!

உடைசுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடமைமுற்றும் படையைஏவி
அடையும்மன்னர் நிலைமையும்

கடவுளாணையாயின் அந்த
உடைவெளுக்கும் தோழரைக்
கடவுள்தான் முன்னேற்றுமோ? தன்
கழுதைதான் முன்னேற்றுமோ?

ஊரிலேனும் நாட்டிலேனும்
உலகிலேனும் எண்ணினால்
நீர்நிறைந்த கடலையொக்கும்
நேர் உழைப்ப வர்தொகை!

நீர்மிதந்த ஓடமொக்கும்
நிறைமுதல்கொள் வோர்தொகை;
நேரிற்சூறை மோதுமாயின்
தோணிஓட்டம் மேவுமோ?

தொழிலறிந்த ஏழை மக்கள்
தொழில் புரிந்து செல்வர்பால்
அழிவிலாமு தல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்

பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள் தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழை மக்கள்
சோற்றிலே மண் போடுவார்!

நடவுசெய்த தோழர்கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்

கடவுளாணை என்றுரைத்த
கயவர் கூட்டமீதிலே
கடவுள்என்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.


--------------- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Friday, February 22, 2008

பார்ப்பனியம் இருக்கும் வரை கம்யூனிசம் வளரவே முடியாது!

இன்றைய தொழிலாளி ஏன் தொழிலாளியாய் இருக்கிறான் என்றால் -அவன் சூத்திரனாக, நாலாவது ஜாதி மகனாகப் பிறந்ததனால்தான் தொழிலாளியாக இருக்கிறானே தவிர, வேறு என்ன காரணத்தினால் அவன் தொழிலாளியாக இருக்கிறான்? எந்தப் பார்ப்பானாவது மண் வெட்டுகிறானா? மண்வெட்டி பிடித்து வேலை செய்கிறானா? இல்லையே? ஏன்? அவர்கள் உழைக்கக் கூடாத ஜாதியிலே பிறந்தவர்கள்! உட்கார்ந்து சாப்பிடக் கூடிய ஜாதியிலே பிறந்தவர்கள் பிராமணர்கள் ஆவார்கள்.

நாம் உழைக்கப் பிறந்தவர்கள்; உழைத்து இன்னொருத்தருக்காகப் போடுவதற்காகவே பிறந்தவர்கள். கீழ் ஜாதிக்காரர்கள், சூத்திரர்கள் ஆவார்கள். இந்தப்படி அதாவது நாம் தொழிலாளியாக ஆவதற்கு, நம்மீது ஏற்பட்டிருக்கும் இழி ஜாதி தன்மை காரணமாக இருக்கிறபோது -அதை எடுத்துச் சொல்லாமல் சும்மா தொழிலாளி, தொழிலாளி என்ற சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? இந்தக் கம்யூனிஸ்டு வீரர்களைத்தானே கேட்கிறேன். இன்றைய பேதங்களின் இந்த அடிப்படையைப் பற்றி அவர்கள் சொல்ல வேண்டாமா? அதை விட்டுவிட்டு, இந்தப் பேதங்களை, பேதத்தின் காரணங்களை எடுத்துச் சொல்லுகிறவர்களைப் பார்த்து -இது பிற்போக்குச் சக்தி, வகுப்பு வாதம் என்று சொல்லுவது என்றால் என்ன நியாயம்?

மற்ற நாடுகளைப் போல் நம்முடைய நாட்டிலேயும் நாங்கள் காரியம் செய்கிறோம் என்று கம்யூனிஸ்டுகள் சொல்லுவார்களேயானால், அது தவறு. மற்ற நாடுகளுக்கும் இந்த நாட்டுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. மற்ற நாடுகளில் இந்த நாட்டைப் போல பார்ப்பான் இல்லை, பறையன் இல்லை. இந்தப் பார்ப்பான், பறையன் என்ற பேதத்துக்கு ஆதாரமான கடவுளும் இல்லை; மதமும் இல்லை; சாஸ்திரமும் இல்லை; நடப்பும் இல்லை. இந்த மாதிரியாக இந்த நாட்டு மனித சமுதாயத்தில் பார்ப்பான் என்று ஒரு ஜாதி உயர்ந்த ஜாதியாகவும்; பறையன் என்று ஒரு ஜாதி தாழ்ந்த ஜாதியாகவும் இருக்கிறது என்ற நிலைமையே மற்ற நாட்டுக்காரர்களுக்குத் தெரியாது.

இந்த நாட்டின் சமுதாயத்துறை மற்றும் நடப்பு முதலியவைகள் இன்றைக்கு இருக்கிறவர்களுக்கே தெரியாது என்றால், அந்தக் காலத்தில் இந்த மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் இந்த நாட்டின் நிலைமையைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்? அவர்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, இந்நாட்டில் இப்படி ஒரு அமைப்பு இருக்கும், ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் பிறப்பு ஜாதியின் பேரால் பெருத்த வசதி பெறுவார்கள்; இன்னொரு ஜாதியார் பிறப்பு ஜாதியின் பேரால் பெருமளவில் தொல்லைப்படுவார்கள் என்று அவர்கள் கற்பனை செய்து நினைத்துக்கூட இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் சொன்னபடிதான் இங்கு நடக்க வேண்டும் என்று சொல்லுவது, எவ்வளவு பித்தலாட்டமான காரியம் என்று நினைத்துப் பாருங்கள்.

இன்றைக்கு இருக்கிற ஸ்டாலினையே (முன்னாள் ரஷ்ய நாட்டின் குடியரசுத் தலைவர்) பார்ப்பான், பறையன் என்று உச்சரிக்கச் சொல்லுங்கள். அவரால் இந்த உச்சரிப்பைக்கூட சரியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் நாட்டில் இப்படி இல்லை. தோழர்களே! இன்னொன்று சொல்லுகிறேன். கொஞ்ச நாளைக்கு முன் ஸ்டாலின் ஒரு சமயம் பேசுகையில், “இந்தியாவைப் பொறுத்தவரையில் சமுதாயத் துறையில் முதலில் வேலை செய்து, சமுதாய முற்போக்கு அடையச் செய்தால்தான் கம்யூனிசம் ஏற்படுத்த முடியும்” என்று சொல்லியிருக்கிறார். நான் இந்தப்படி சொல்லுகிறபோது, நம்முடைய அருமை கம்யூனிஸ்டு தோழர்கள் -எனக்குக் கம்யூனிசமே தெரியாது என்று சொன்னார்கள். இப்போது ஸ்டாலினே இந்தப்படி சொல்லியிருக்கிறார். இனிமேல் கம்யூனிஸ்டுகள் என்ன சொல்லுவார்களோ?

இந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோஷியலிஸ்டு கட்சியும் யார் ஆதிக்கத்திலே, யார் தலைமையிலே இருக்கின்றன? இந்த நாட்டுப் பார்ப்பனர்கள்தான் இன்று கம்யூனிசமும் சோஷலிசமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களா நமக்குக் கம்யூனிசம் சொல்லித் தருவது? அவர்கள் கற்றுக் கொடுக்கிற கம்யூனிசந்தான் பேதமில்லாத வாழ்க்கையைச் செய்யுமா? இப்படி மனம் அறிந்த காரியத்தை நீ மறைத்துக் கொண்டு பார்ப்பான், பறையன் என்று சொல்வது பிற்போக்கு சக்தி, வகுப்புவாதம் என்று சொல்லுவாயானால் -அதைப் பித்தலாட்டம் என்று சொல்லுவதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

இன்றைக்கு இருக்கிற கம்யூனிசவாதிகள் என்போர்கள் பச்சையாகச் சொல்லட்டுமே “பார்ப்பனர்கள் உயர் ஜாதி என்பது தவறு” அது போலவே மற்றவர்கள் தாழ்ந்த சாதியென்பது தவறு என்று. இந்தப்படியான தன்மைக்கு ஆதாரமாய் இருப்பவைகளையெல்லாம் நெருப்பிலே போட்டுப் பொசுக்க வேண்டும் என்று சொல்லட்டுமே! நான் வரவேற்கிறேன். அதை விட்டுவிட்டு, இந்தப் பிரச்சினை பற்றியே பேசக்கூடாது என்ற சொல்லிவிட்டால், என்ன சாதித்துவிட முடியும்? என்றைக்குக் கம்யூனிசத்தை இங்கே கொண்டு வந்துவிட முடியும்?

-------------- பெரம்பூர் பொதுக் கூட்டத்தில் 2.1.1953 அன்று தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை

Thursday, February 21, 2008

கறுப்புக் கயிறு கட்டுவது ஏன்?

மனு எழுதிய ஸ்மிருதியில் (தர்ம சாஸ்திரத்தில்) காணப்படும் சமத்துவம் இல்லாமை என்பது, கடந்த கால வரலாறு என்றும், இந்துவான ஒருவன் நிகழ்காலத்தில் நடந்து கொள்வதற்கும், மனு தர்மத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிடலாம். இப்படி வாதிடுவதைவிடப் பெரிய தவறு எதுவும் இல்லை என்று சொல்லுவேன். மனுவின் சட்டம் கடந்த காலத்தது அல்ல. நிகழ் காலத்தின் ஒரு கடந்த வரலாறு என்பதுடன் அது நிகழவில்லை. அது வாழ்ந்து கொண்டிருக்கும் பழைமை; நிகழ்காலப் பிரச்சினைக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அவ்வளவு முக்கியத்துவம் கடந்தகால மனு நீதிக்கு உண்டு.

மனுவினால் விதிக்கப்பட்ட சமம் இல்லாத தன்மை, பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு இந்நாட்டின் சட்டமாக இருந்தது என்பது அந்நியர் பலர் அறியாத ஒன்றாக இருக்கலாம். சில எடுத்துக்காட்டுகள் நிலையைப் புரிந்து கொள்ள உதவும்.

பேஷ்வாக்களின் ஆட்சியில், அவர்களின் தலைநகரான பூனா (புனெ) நகருக்குள், பிற்பகல் 3 மணிக்குப் பின்பும், முற்பகல் 9 மணிக்கு முன்பும் தீண்டப்படாதவர்கள் நுழையக் கூடாது. ஏனென்றால் காலை 9 மணிக்கு முன்பும், பிற்பகல் 3 மணிக்குப் பின்பும் அவர்களின் நிழல் நீளமாக இருக்கும். அந்த நிழல் பார்ப்பனர் மீது பட்டால் அவர்கள் தீட்டாகிவிடுவார்கள்.

மகாராஷ்டிராவில் தீண்டப்படாதவர்கள், கழுத்தில் அல்லது மணிக்கட்டில் கறுப்புக் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். அவர்களைப் பிறர் உடனடியாக அடையாளம் காண்பதற்காக அவ்வாறு விதிக்கப்பட்டது.

பம்பாய் மாநிலத்தில் பொற்கொல்லர்கள் (சோனார்கள்) வேட்டியைப் பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டக் கூடாது, “நமஸ்காரம்” எனும் மரியாதைச் சொல்லைக் கூறக் கூடாது. (குறிப்பு: இங்கு அண்ணல் அம்பேத்கர், பம்பாய் கோட்டையில் இருந்து செயல்பட்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசின் தீர்மானத்தையும், அந்தத் தீர்மானப்படி பொற்கொல்லர்கள் நடக்க வேண்டும் என அரசுச் செயலாளர், அந்த சாதித் தலைவர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தையும் தந்துள்ளார். தீர்மானம் 1779 ஜூலை 28 இல் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடிதம் 1779 ஆகஸ்டு 9 இல் எழுதப்பட்டது. பொற்கொல்லர்கள் நமஸ்காரம் எனச் சொல்லுவதால், தங்களுக்கு இந்து மதப்படி உள்ள உரிமை பாதிக்கப்படும் எனத் திரும்பத் திரும்பப் பார்ப்பனர்கள் புகார் கூறியதால், அப்படி ஒரு தீர்மானம் பம்பாய் மாநில அரசால் நிறைவேற்றப்பட்டது)

மராத்திய ஆட்சியில் பார்ப்பனர் அல்லாத மற்ற எவரேனும் வேத மந்திரம் ஓதினால் அவருடைய நாக்கு வெட்டப்படும். உண்மையிலேயே சோனார்கள் (பொற்கொல்லர்கள்) பலருடைய நாக்கு அவ்வாறு பேஷ்வாவின் கட்டளையால் வெட்டப்பட்டது. தீண்டப்படாதவன் மிக உயர்ந்த குத்தகை கொடுக்க வேண்டும்.

மனு வாழ்ந்தது, கிறித்துவுக்குச் சில காலத்திற்கு முந்தி அல்லது பிந்தி இருக்கலாம். ஆனால், இந்து அரசர்கள் ஆண்ட அண்மைக் காலம் வரை, சமத்துவம் அற்ற மனு நீதிதான் சட்டமாகும் -
-------------------- டாக்டர் அம்பேத்கர்.

------நன்றி:"பெரியார்முழக்கம்"

ஜோதிட நம்பிக்கை என்றுதான் ஒழியுமோ?

மைசூர் இராஜ்யத்தை அரசாண்ட திப்பு சுல்தானுக்கும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் 1799 ஆம் வருடம் மே திங்கள் 4 ஆம் தேதி சண்டை நடந்தது. அந்தச் சண்டையில், அன்று சாயங்காலம் திப்பு சுல்தான் குண்டினால் கொல்லப்பட்டு இறந்தார்.

அவர் சண்டைக்குப் புறப்படுமுன் அன்று காலையில் சோதிடர்களை வரவழைத்து சகுனம் கேட்டார். இந்தச் சோதிடர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். அவர்கள், அன்றைய தினம் கெட்ட நாள் ஆகையால் திப்பு சண்டை செய்யக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், ‘தோஷ நிவர்த்தி’ செய்தால் அந்தக் குற்றம் நீங்கிப் போய்விடும் என்றும், பிறகு சண்டை செய்யலாம் என்றும் சொன்னார்கள். திப்பு சுல்தான் ‘தோஷத்தை’ எப்படி நிவர்த்தி செய்வது என்று கேட்டபோது சுபகாரியப் புலிகளாகிய அந்தப் பார்ப்பன சோதிடர்கள் கறுப்பு நிறமுள்ள எருமை, கறுப்பு எருது, கறுப்பு ஆடு, கறுப்புத் துணி, கறுப்புத் தலைப்பாகை, 90 ரூபாய் (இது மாத்திரம் வெள்ளை நிறம்), எண்ணெய் நிறைந்த இரும்புக் குடம் இவைகளைத் தானம் செய்தால், அந்தக் கெட்டநாள் நல்ல நாளாய் மாறிவிடும் என்று சொன்னார்கள்.

திப்பு சுல்தான் அவர்கள் சொல்லியபடியே மாடு, எருமை, துணி, ரூபாய் முதலியவைகளை அந்தப் பார்ப்பனருக்குத் தானம் செய்தார். எண்ணெய்க் குடத்தை தானம் செய்வதற்கு முன், எண்ணெய் குடத்தில் திப்பு தன் முகச் சாயலைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். அவரும் எண்ணெய்க் குடத்தில் தன் முகச் சாயலைப் பார்த்து தோஷத்தை நீக்கிக்கொண்டதாக நினைத்துக் கொண்டார். பிறகு, பார்ப்பனர்கள் தங்கள் புரட்டு வார்த்தையினால் கிடைத்த வெகுமதிகளை வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

இவ்வளவு சோதிடம் பார்த்தும், தோஷத்தை நீக்கியும் பார்ப்பனருக்கு தானம் செய்தும் அந்தக் கெட்ட நாள் நல்ல நாளாக மாறவே இல்லை. கெட்ட நாள் கெட்ட நாளாகவே இருந்து விட்டது. எப்படி என்றால் சோதிடம் பார்த்து தோஷத்தை நீக்கிக் கொண்ட அன்றைய தினம் சாயங்காலமே திப்பு குண்டுபட்டு இறந்து போனார். இங்கிலீஷ்காரர்கள் அன்றைய தினமே திப்பு ராஜ்யத்தையும், சொத்துக்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள். ஜோதிடப் புரட்டர்களின் வார்த்தை பொய்யாகிவிட்டது. சோதிடப் புரட்டர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகக் கெட்ட நாள், நல்ல நாள், தோஷம், பரிகாரம் என்று ஜனங்களை மயக்கி தங்களுக்குப் பெரும் பழியைத் தேடிக் கொள்கிறார்கள். இவைகைள எல்லாம் பாமர ஜனங்கள் நம்பி கைப்பொருளை இழந்து நஷ்டமடைகிறார்கள்.

திப்பு சுல்தான் மகமதியராய் இருந்தும் இந்தச் சோதிடப் புரட்டர் வார்த்தைக்கு ஏமாந்தார் என்றால், மூட நம்பிக்கை நிறைந்த இந்துக்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இந்த ஜோதிட நம்பிக்கை, ஜனங்களிடமிருந்து என்றுதான் ஒழியுமோ?

------------- “குடிஅரசு” 8-5- 1932 இதழில் திரு.மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதியது

Wednesday, February 20, 2008

வாளினை எடடா!

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்

-------------- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

கிராமங்களில் சாதி ஒழிய

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்? அதேமாதிரி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.

அப்படிக்கு இல்லாமல் சாதியே ஒழிய வேண்டுமென்று சொல்லும் வார்த்தையில் அர்த்தமில்லை. அவர்களுக்கு இன்று ஜட்ஜ் வேலை கொடுக்க வில்லையா? ஜில்லா கலெக்டர் வேலை கொடுக்க வில்லையா? மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அதில் எல்லாம் என்ன ஓட்டை கண்டார்கள்? ஏதோ பொறுக்கித் தின்கிற வேலையாக இருந்தாலும், அவர்கள் பொறுக்குவதை இவர்கள் பொறுக்கித் தின்றுவிட்டுப் போகிறார்கள். இதில் என்ன அதிகத் தவறு? சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ, அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில் பூசாரி வேலையைக்கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிட மாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே.

நம் வளர்ச்சியைப் பெருக்க எது வந்தால் ஆகுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஒரு மொழி இருக்க வேண்டும். கடவுள் பேசும் மொழி என்று சொன்னால், அதைக் கேட்டு முட்டாளாகவே இருக்கிறானே! இதற்கு என்ன சமாதானம்? நம் உயர்ந்த மேதாவி - புலவன் எல்லாம் இலக்கியப் புராணங்களைப் படித்து முட்டாள்களாகத்தானே இருக்கிறார்கள். ராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்கள். புலவர்களுக்கு மானம், வெட்கம் கிடையாது. தங்கள் மணிபர்சு நிரம்ப வேண்டும் என்பதுதான். சாதி இருப்புக்குப் புலவர்களே காரணம்.

எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும், கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் எதில் சாதி ஒழிந்திருக்கிறது? நாயன்மார்கள், ஆழ்வார்கள், பரமஹம்சர்கள், மகாத்மாக்கள், வெங்காயம் இவர்கள் எல்லாம் இருந்தார்களே! எந்த ஆழ்வார், எந்த நாயன்மார், எந்த மகரிஷி சாதி ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள்? சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியதெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது. சாதி வேண்டும் என்பதெல்லாம் வெளியே தெரிகிறது; பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆகவே, பகுத்தறிவு பலமடைய வேண்டும். ஆராய்ச்சி, அறிவு என்ன சொல்கிறது? அதற்கு என்ன அவசியம்? இந்தத் தலைமுறைக்கு முற்போக்கு அடைவோமா என்று சிந்தித்துப் பார்த்தால், தானாகவே வந்துவிடும். நான் சொன்னதையெல்லாம் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் கருத்து. இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும். அறிவுக்குத் தடையில்லாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ தோன்றியதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சிந்தித்து விஷயங்களை அறிந்து நான் சொல்லியதில் எது சரி? எது தப்பு? என்று ஆராய்ந்து, எது சரியென்று படுகிறதோ அதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உணர்ச்சி வந்தால்தான் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.


------------ வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.4.1964 அன்று தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை

சமதர்மவாதிகள் தன் நெற்றியைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்

ஜனநாயகம் என்றால் மக்களாட்சி என்பதுதான் உண்மையான கருத்து. அப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கு மக்கள் அறிவாளிகளாகவும், ஓரளவிற்காவது யோக்கியர்களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

நமது ஜனநாயக மக்கள் இயற்கையில் மூடநம்பிக்கையுடைய காட்டுமிராண்டி மக்களென்ப தோடு அல்லாமல் கல்வி-எழுதப் படிக்கவே அறியாத நிலையில் தற்குறிகளாக, பகுத்தறிவென்பதே இன்னதென்றறியாத பாமர மக்களாக ஏராளமான பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குப் படிப்பில்லை என்பது மாத்திரமல்லாமல், பிடிவாத மூடநம்பிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மற்றபடி மக்கள், ஒழுக்கமென்பது மதம், அரசியல் காரணங்களால் ஒழுக்கத்தைப் பற்றிய கவலையே யில்லாமல் எந்தக் காரணத்தைக் கொண்டாவது பதவி பெற வேண்டும் என்பதையும், வயிறு வளர்க்க வேண்டுமென்பதையும், மூச்சாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மக்களுக்கு, வயிறு வளர்ப்பது, காசு சம்பாதிப்பது தான் ஜனநாயகம் என்பது கொள்கையாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட இவர்களிடையில் சமதர்மம் என்றால், அரசாங்கமும், மக்களும் சிறிதும் சுயநலமில்லாமல் எல்லாத்துறையிலும், எல்லா மக்ளுக்கு மொத்த சமநலம் ஏற்பட உழைக்க வேண்டியது என்கிற குணம் எப்படி ஏற்படமுடியம்?

ஒரே மனிதன் வைத்தியனாகவும், புரோகி-தனாகவும் இருக்க நேர்ந்தால் அவனுக்கு வியாதியஸ்தனைப் பிழைக்கவைப்பதைவிடச் சாகடிப்பதில் தானே ஆசையிருக்கும்? ஏனென்-றால், வியாதியஸ்தன் செத்தால் பசு தானம், கருமம், கருமாதி காரியம், திதி, திவசம் முதலாகிய காரியங்களில் செத்த விநாடி முதல் நீண்ட நாட்கள் வரை பயனடைய முடியும்.
வியாதியஸ்தன் குணம் பெற்றால் வைத்தியனுக்கு, வியாதி குணமாகித் தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது கொடுக்கப்படும் இரண்டு ரூபாயோ; நான்கு ரூபாயோ வரும்படியோடு விஷயம் முடிவு பெற்றுவிடும்.

ஆதலால், பதவி வேட்டைக்காரர்களும், பண வேட்டைக்காரர்களும், ஒரு நாளும் சம தர்மத்தை விரும்பமாட்டார்கள்.

மக்களைச் சமதர்மத்துக்குப் பக்குவப்-படுத்தும் பணிபற்றிச் சிந்திக்கத் தக்கதாகும் என்பது என் கருத்தானாலும், அதுவும் அவசரமான காரியமென்றே சொல்லுவேன்.

மூடநம்பிக்கை என்பவைகளில் முக்கியமானவை மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்-கையும் முதன்மையான வையாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு மனிதன் சிவனையோ, விஷ்ணுவையோ, இராமனையோ, கிருஷ்ணனையோ, கந்தனையோ, சுப்பனையோ இருப்பதாகவும், அவர்களைக் கடவுளர்களாகவும் நம்பிக்கொண்டு சாம்பலையோ, மண்ணையோ நெற்றியில் பட்டையடித்துக் கொள்வதன் மூலம் பக்தி செலுத்திக் கொண்டு, நான் சமதர்மவாதி என்று சொல்லுவா-னேயானால் அவன் உண்மையான, யோக்கிய-மான சமதர்மவாதியாக இருக்க முடியுமா? கொள்ள முடியுமா? முடியும் என்று கருது-கிறர்கள் அறிவாளிகளாக இருக்க முடியுமா?

ஒரு மனிதன்-முதலாவதாகத் தனது நெற்றியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் படியான அறிவில்லாத ஒரு மனிதன்-எப்படிச் சமதர்மத்திற்கேற்ற அறிவுடைய வனாகக் கருதப்பட முடியும்? அறிவின்மை என்பதைக் காட்டுவது-தானே நெற்றிக்குறி? நெற்றிக்குறியென்றால் மூளைக்குறி என்று தானே பொருள்?

நான் நெற்றிக்குறி என்று சொல்லுவதில் குறி மாத்திரமல்ல; அவற்றுள் அடங்கியிருக்கும் தத்துவங்களையே குறிகொண்டு சொல்லுகிறேன். அதாவது, மத சம்பந்தமான முட்டாள்-தனம், மூட நம்பிக்கைகள் யாவற்றையும் கசக்கிப் பிழிந்து, காய்ச்சிச் சுண்ட வைத்து இறக்கிய சத்துதான் நெற்றிக்குறி! அதற்கு வேறு பொருள் என்ன சொல்ல முடியும்?
சமதர்மம் பேசும் காங்கிரசுக்காரர்களோ, மற்ற கட்சிக்காரர்களோ, மதக் கருத்தென்ன? நெற்றிக்குறிக் கருத்தென்ன? என்பதைச் சிந்திக்கிறார்களா?

நான் ஒரு உண்மைச் சமதர்மவாதியென்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் கழகத்-தாரும், என்னை உண்மையாய்ப் பின்பற்றுகிறவருங்கூட சமதர்மப் போக்குக்காரர்கள் என்றே சொல்லுவேன். எங்கள் எல்லோருடைய நெற்றியும் சுத்தமாக இருக்கும்.
ஆகவே, உண்மையான சமதர்மவாதிகள் தன்னை-தன் அறிவை, தன் நெற்றியைச் சுத்தப்-படுத்திக்கொள்ள வேண்டும்.


-----------தந்தைபெரியார்- "விடுதலை" தலையங்கம்-15.12.1969

Tuesday, February 19, 2008

இவர்தான் பெரியார்

( தந்தைபெரியார் அவர்கள் தன்னிலை விளக்கமாக தன்னைப்பற்றி அவ்வப்போது கூறியவைகளை கீழே கொடுத்துள்ளோம்.)

நான் யார்?

எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்ப-மாகும்; குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்-பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்-களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றபோதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன். காரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்-படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம் வேதம், இதிகாசம் முதலியவகைளயும் நம்பிப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் - நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்-பட்டர்களாகவும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது. அம்மாதிரி, அவைகளில் இருந்து வெளி-யேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது - அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்-தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாகி இருந்தாலும் - அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக் கொண்ட-வர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன்.

(கான்பூரில் 29, 30, 31.12.1944இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.1.1945)

நான் எப்படி?

நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவை-களால் பரிசீலனை செய்து, ஒப்புக்கூடிய-வைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.

(திருப்பூரில் சொற்பொழிவு, புரட்சி, 17.12.1933)

நான் சொல்வது கட்டளையா?

நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் - நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்தது-மானவைகளைத்தான் - அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன். ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடு-வீர்களானால், அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்-தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.
ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மை-யென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.

(விடுதலை, கட்டுரை 8.10.1951)

என் துணிவு

நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான்! அப்படி, இப்படி! என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடு-கின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ள-வர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்-கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.
நான் கண்டதை - அறிந்ததை மக்கள் எதிர்ப்பு-க்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.
(சாமிமலையில், 24.1.1960இல் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960)

நான் ஒரு தொண்டன்

நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டி-லேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டு-கோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனே யொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.

சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940

Sunday, February 17, 2008

வாஞ்சிநாதனின் நயவஞ்சகம்

எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும் , பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பதுதான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம்.
ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது , ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.

இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்.அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.

ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை
பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்.
அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.
வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.

நியாயமாப்பார்த்தா தீண்டாமையை எதிர்த்து போராடி அதில் ஒரு சாதிவெறி பிடித்த மனிதனால் உயிர் இழந்த ஆங்கிலேய பிரபுவுக்கு நாம் அஞ்சலிதான் செலுத்த வேண்டும்

ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு . ஆசிரியர் : மாற்கு.

-------- நன்றி: www.indianchaplin.blogspot.com

வருமானவரி பற்றிய விளக்கம்

இந்த மாதம் அர்சு ஊழியர்கள் சம்பளப்பட்டியலுடன் அவரவர்களது வருமானம் பற்றிய விபர அறிக்கையை தாக்கல் செய்தால்தான் இம்மாதம் ஊதியம் பெறமுடியும் என்ற நிலையில் அது பற்றிய விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சிலர் எவை எவை வருமானத்துக்கு உட்பட்டவை என்பது பற்றி விரிவாக விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.வருங்கால வைப்பு நிதி வட்டி வருமானத்தில் வருமா வராதா? என்பது உட்பட காரசார விவாத்திற்கிடையில் "வருமானவரி"விலக்கு எதுக்கெல்லாம் உண்டு என்பது பற்றி "நாணயம் விகடன்" இதழ் வெளியிட்டுள்ளது.அதை நமது அன்பர்களின் பயன் கருதி அதை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

இந்திய வருமான வரிச் சட்டத்தின் (1961)படி, உருவானதுதான் 80---சி பிரிவு. இதன்கீழ் ஒரு நிதி ஆண்டில், பல்வேறு முதலீட்டுத் திட்டங்களின் மூலம் அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்குப் பெறமுடியும்.

பணியாளர்கள் பிராவிடன்ட் ஃபண்ட்

அரசுத்துறை ஊழியர்கள் அவர்களுக்கான அரசு பிராவிடன்ட் ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு வரிச்சலுகை உண்டு. பொதுத்துறை, தனியார் நிறுவனங்-களில் பணிபுரிபவர்களுக்குச் சம்பளத் தொகை-யில் 12%, பணியாளர் பிராவிடன்ட் ஃபண்டாக (E.P.F. -Employees Provident Fund) பிடிக்கப்படுகிறது. வருமான வரி கட்டுவதிலிருந்து இந்தத் தொகைக்கு முழுவிலக்குப் பெறலாம். தனியார் நிறுவனம் என்கிறபோது, பிடிக்கப்படும் தொகைக்கு இணையாக நிறுவனமும் பணம் செலுத்தும் என்பதால், இது பணியாளர்களுக்கு இரட்டை லாபத்தை அளிப்பதாக இருக்கிறது.

இந்த முதலீடு மற்றும் சேமிப்பு, வரிச் சலுகையை அளிப்பதோடு, வரி கட்டுபவர் மற்றும் அவரது குடும்-பத்துக்கு நிதிப் பாதுகாப்பையும் அளிப்பதாக இருக்கிறது. மேலும், விரும்பும்பட்சத்தில் தனியார் நிறு-வன ஊழியர், இந்த 12%-க்கு இணையாக மேலும் 12%-ஐ தன் சம்பளத்தில் பிடித்துக்கொள்ள நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளலாம். இந்தக் கூடுதல் தொகைக்கு நிறுவனம் தன் பங்காக எதையும் செலுத்தாது. அதே நேரத்தில், இந்தக் கூடுதல் முதலீட்டுக்கு வரிச்சலுகை கிடைக்கும். இதுபோன்ற சலுகை அரசு ஊழியர்-களுக்கும் இருக்கிறது. இப்படிச் சேரும் பி.எஃப். தொகையை விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த முதலீட்டுக்கு தற்போது 8.5% வட்டி தரப்-படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இதற்கான ரசீதை பி.எஃப். அலுவலகம் அளிக்கிறது. இதைப் பெற்று பணியாளர்கள், தங்களிடம் பிடிக்கப்படும் தொகை கட்டப்படுகிறது என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.

தனியார் துறை பணியாளர்களைப் பொறுத்தவரை, சம்பளம் 6,500 ரூபாய்க்கு மேற்படும்போது, பிராவிடன்ட் ஃபண்டுக்கு பணம் செலுத்துவது கட்டாயமில்லை. ஆனால், எல்லோரும் செலுத்துவது நல்லது. இந்த முதலீடு மற்றும் அதன் மூலமான லாபத்துக்கும் வரி கிடையாது!

பொது பிராவிடன்ட் ஃபண்ட்

பணியில் இல்லாத சுய தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற திட்டம் பொது பிராவிடன்ட் ஃபண்ட் (P.P.F- Public Provident Fund). இந்தத் திட்டத்தில், ஏற்கெனவே நிறுவனத்தால் பி.எஃப். பிடிக்கப்படும் பணியாளர்களும் முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி 8%. இதில் முதலீடு செய்யும் அனைவரும் வருமான வரிச் சலுகையைப் பெறலாம்.

இந்த முதலீட்டை தபால் அலுவலகம், பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளலாம். நிதி ஆண்டில் குறைந்த-பட்சம் 100 ரூபாய், அதிகபட்சம் 70,000 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்து, வரிவிலக்குப் பெறலாம். இந்தக் கணக்கை தனிநபர்கள், மைனர்கள், ஹெச்.யூ.எஃப். பெயரில் தொடங்கலாம். தனி நபர்கள், தங்கள் பெயர், மனைவி பெயர், குழந்தைகளின் பெயரில் செலுத்-தப்படும் பி.பி.எஃப். தொகைக்கு வரு-மான வரிவிலக்குப் பெறலாம்.

பி.பி.எஃப். முதலீட்டில் கிடைக்கும் லாபத்துக்கும் வரி கிடையாது. நிதி ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே (ஏப்ரல்) முதலீடு செய்ய ஆரம்பித்தால், முழு ஆண்டுக்கும் வரி இல்லாத வட்டி லாபத்தை அனு-பவிக்க முடியும். பி.பி.எஃப். முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு முன் முடிக்க முடியாது. அதே நேரத்-தில், ஆறு ஆண்டுகள் கழித்து முதலீட்டில் ஒரு பகுதியை நிபந்தனைகளுக்கு உட்பட்டு எடுத்துக்-கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதேபோல், இத்தொகை-யிலிருந்து கடனும் வாங்கமுடியும்.

ஆறாவது ஆண்டிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து பி.பி.எஃப். திட்டத்தில் மறு முதலீடு செய்வது மூலம் வருமான வரிச்சலுகையைப் பெறுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்

பொதுவாக, இந்தியாவைப் பொறுத்தவரை ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் (Life Insurance Policies) என்பது முதலீடு, குடும்-பத்தினர் பாதுகாப்பு, வரிச் சேமிப்பு கருவி என மூன்-றும் கலந்ததாக இருக்கிறது. இதனால், பாலிசி முடி-வில் பணப்பலன் கிடைக்கும் எண்டோவ்மென்ட் பாலிசிகள்தான் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன.

பாலிசி இறுதியில் பணப் பலன் எதுவும் இல்லாத டேர்ம் பாலிசியை எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால், இந்த இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கும் வரிச் சலுகை உண்டு. பாலிசி க்ளைம் மூலம் கிடைக்கும் தொகை அல்லது பணப் பலனுக்கு வருமான வரி கிடையாது. மேலும், தன் பெயரில், மனைவி பெயரில், பிள்ளைகள் பெயரில், ஹெச்.யூ.எஃப். பெயரில் எடுத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியத்துக்கும் தனிநபர் விலக்குப் பெறலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பாலிசித் தொகையில் 20%-க்கு மேல் பிரீமியம் இருந்தால், வரு-மான வரிவிலக்குப் பெறமுடியாது.

இந்த பாலிசிகளை அட-மானம் வைத்து கடன் வாங்குவது மூலம் சொத்து வாங்குவது, கல்வி, திருமணம் போன்றவற்றுக்கான தேவையை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். பர்சனல் லோனுக்கான வட்டியோடு ஒப்பிடும்போது, இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான கடன் வட்டி குறைவாகவே இருக்கிறது.

யூலிப்

பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டமான யூலிப் முதலீட்டாளருக்கு ஆயுள் காப்பீட்டை அளிப்பதோடு, வருமானத்தையும் அளித்து வருகின்றன. இந்த பாலிசிகள் முற்றி-லும் பங்குச் சந்தை சார்ந்தது, முற்றிலும் கடன் சார்ந்தது, இரண்டும் கலந்தது என்பன போன்று பல வாய்ப்புகளுடன் இருக்கின்றன. முதலீட்டாளர் தன் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரிஸ்க்குக்கு ஏற்ப ரிட்டர்ன் இருக்கும். நிதி முதலீடு, பங்குச் சந்தை பற்றி ஓரளவுக்கு விவரம் தெரிந்தவர்கள் மட்டும் இந்த யூலிப் பாலிசிகளை எடுப்பது நல்லது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, இந்த யூலிப் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் யூனிட்களின் என்.ஏ.வி. மதிப்பைக் கவனித்துவருவது அவசியம்!

தேசிய சேமிப்புப் பத்திரங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வரிச் சேமிப்புக்காக இந்தியர்கள் அதிக முதலீடு செய்தது தேசிய சேமிப்புப் பத்திரங்களில்தான் (National Saving Certificates). வட்டி விகிதக் குறைவுக்கு பிறகு அதில் முதலீடுசெய்வது கணிசமாகக் குறைந்துவிட்டது. 8% வட்டி வருமானம் அளிக்கும் இதில் செய்யப்படும் முதலீட்டை ஆறு ஆண்டுகள் கழித்துதான் எடுக்கமுடியும். வட்டி வருமானத்துக்கு வரி கட்டவேண்டும் என்பதும் இதனைப் பலரும் விரும்பாததற்கு முக்கியக் காரணம். இதில் தனிநபர்கள் மற்றும் ஹெச்.யூ.எஃப்-கள் முதலீடுசெய்து வரிச்சலுகை பெறலாம்.

வருமான வரியைச் சேமிக்க 80-சி பிரிவின் கீழ் இருக்கும் இதர திட்டங்கள் பற்றி...!

வரி சேமிப்பு வங்கி டெபாசிட்கள்


வங்கிகளில் செய்யப்படும் ஐந்தாண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. இத்திட்டத்தை அனைத்து வங்கிகளும் கொண்டுள்ளன. வட்டிவிகிதம் சுமார் 8.5% தொடங்கி 10.5% வரை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. டெபாசிட் மூலமான வட்டிக்கு வரி செலுத்தவேண்டும். இதில், தேசிய சேமிப்புப் பத்திர முதலீட்டைவிட வட்டி அதிகமாகக் கிடைக்கும். பி.எஃப். முதலீட்டைவிட, அதிக வட்டி வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும், வட்டி வருமானத்துக்கு வரிகட்டவேண்டும் என்பது பாதகமான அம்சம்!

வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிடும் இ.எல்.எஸ்.எஸ் (E.L.S.S) ஃபண்டுகளில் முதலீடு செய்தாலும் வரிச்சலுகையைப் பெறமுடியும். இதனை தனி நபர்கள் மற்றும் ஹெச்.யூ.எஃப். பெயரில் மேற்கொள்ளலாம். இந்த முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்கமுடியாது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியில் 65% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்பதால், மேலே கூறப்-பட்ட முதலீட்டுத் திட்டங்களைவிட, அதிக ரிட்டர்னைக் கொடுத்துவருகிறது. அதேநேரத்தில், பங்குச் சந்தைக்கான ரிஸ்க்கையும் கொண்டிருக்கிறது. இந்த ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி கிடையாது. மேலும் முதலீட்டை மூன்றாண்டு கழித்து எடுக்கும்போது நீண்டகால மூலதன ஆதாய வரி, பூஜ்ய சதவிகிதம்தான்.

வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துதல்

வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தப்படும், அசலில் ஒரு நிதி ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை, வரிச்சலுகை பெறலாம். வீடு அல்லது ஃப்ளாட் வாங்கும்போது மனைக்குக் கட்டும் முத்திரைத்-தாள் கட்டணத்துக்கும் வரிச்சலுகை இருக்கிறது. இதனைப் பத்திரப்பதிவு நடந்த நிதி ஆண்டில் கோரிப் பெறவேண்டும். வீட்டை மாற்றிக் கட்டுதல், புதுப்பித்தல், பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கான கடனுக்கு வரிச்சலுகை கிடையாது. மேலும், மனை வாங்குவதற்கும் வரிச் சலுகை இல்லை.

வீட்டுக் கடனுக்கான வட்டியில், ஓராண்-டில் 1.5 லட்சம் ரூபாய்வரை, வரிச்சலுகை பெறலாம்.

இதர சேமிப்புத் திட்டங்கள்

இந்த வாய்ப்புகளைப் போலவே, தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior citizen Savings Scheme) மற்றும் தபால் அலுவலக டைம் டெபாசிட் (Post Office Time Deposit) ஆகிய இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கும் 80-சியின் கீழ் வருமான வரிச்சலுகை உண்டு என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 55-60 வயதுக்கு உட்பட்ட விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.) பெற்றவர்கள், 60 வயதான மூத்த குடிமக்கள் சேர்ந்து பயன்பெறலாம். பொதுத்துறை வங்கிகளிலும் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

ஆண்டுக்கு 9% வருமானம் அளிக்கும் இந்த முதலீடு ஐந்தாண்டுகளுக்கானது. ஒரு ஆண்டில் குறைந்தபட்ச முதலீடு ஆயிரம் ரூபாய். அதிகபட்ச முதலீடு 15 லட்சம் ரூபாய். ஆனால், அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்குத்தான் வரி-விலக்குப் பெற முடி-யும். இத்திட்டத்தின் மூலமான வட்டி வருமானத்-துக்கு வரி பிடித்தம் இருக்-கிறது.

இந்தத் திட்டம் வங்கிகளின் வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் உடன் ஒப்பிடும்போது, சற்று லாபகரமானது என்று சொல்லாம்.

தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் குறைந்த-பட்ச முதலீடு 200 ரூபாய். அதிகபட்சத்துக்கு எல்லை இல்லை. இந்தத் திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என முதிர்வுக் காலம் இருக்கிறது. இவற்-றுக்கு முறையே 6.25%, 6.5%, 7.25% மற்றும் 7.5% வட்டி தரப்படுகிறது. ஐந்து ஆண்டுகால முதலீட்டுக்கு மட்-டுமே வரிச்சலுகை தரப்படுகிறது. இந்தத் திட்டத்தை விட, வழக்கமான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு லாபகரமானதாக இருக்கும்.

கல்விக் கட்டணம்

கல்விக்காகச் செலவிடுவதை ஒரு முதலீடாக மத்திய அரசு கருதுவதால், அதற்கும் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. தனிநபர், அவருடைய துணை, குழந்தைகள் அல்லது ஹெச்.யூ.எஃப். உறுப்பினர் போன்றோருக்கு கட்டும் கல்விக் கட்டணத்துக்கு வரிச்சலுகை இருக்கிறது. மேலே குறிப்பிட்டவர்கள் இந்தியாவில் ஏதாவது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி அமைப்பில் முழு நேரமாகப் படிப்பதற்காகச் செலுத்தும் கல்விக் கட்-டணத்துக்கு வரிவிலக்குக் கோரலாம். தனிநபரின் இரு குழந்தைகளுக்குத்தான் இவ்வாறு வரிச்சலுகை கிடைக்கும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல... மாதச் சம்பளக்காரர்களுக்கும் பிப்ரவரி மாதத்திலேயே ஜுரம் அடிக்க ஆரம்பித்துவிடும். அவர்களுக்கு தேர்வு ஜுரம் என்றால், மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமான வரி ஜுரம்! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற அளவுக்குக் குழம்பிப் போயிருக்கிறார்கள். வருமான வரிச் சட்டப் பிரிவு 80 சி-யின் கீழ் வரும் முதலீட்டுத் திட்டங்கள் தவிர, வேறு சில முதலீடு மற்றும் செலவுகளுக்கும் வருமானவரி விலக்குப் பெறமுடியும். அவை பற்றிய விவரங்கள்..!

மருத்துவக் காப்பீடு 80 D

மருத்துவச் செலவு மிகவும் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், மாதச் சம்பளக்காரர்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது அவசியமாகியிருக்கிறது. வருமானவரிச் சட்டப் பிரிவு 80 D-ன் கீழ், தனி நபர் அல்லது ஹெச்.யூ.எஃப்-க்காக ஓராண்டில் இந்த பாலிசிக்குச் செலுத்தப்படும் பிரீமியத்தில், 15,000 ரூபாய்க்கு வருமானவரியிலிருந்து விலக்குப் பெறலாம். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 20,000 ரூபாய் அனுமதிக்கப்படுகிறது.

தனிநபர் ஒருவர், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செலுத்தும் மெடிக்ளைம் பாலிசிக்கான பிரிமீயத்துக்கும் வரிவிலக்குப் பெறமுடியும். சில பெரிய நிறுவனங்கள், தங்களின் ஊழியருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தங்களின் சொந்தச் செலவிலேயே மருத்துவக் காப்பீட்டை எடுத்துத் தருகிறார்கள். அதுபோன்ற நிலையில், அலுவலகம் எடுத்துள்ள பாலிசியின் மூலம் எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்ற விவரத்தை அறிந்து, அதில் இல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெறும் பாலிசியை எடுத்து, அதற்கான பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம். வரிவிலக்குப் பெற பிரீமிய ரசீதின் நகலை பணிபுரியும் நிறுவனத்திடம் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவச் சிகிச்கைக்கான செலவு - 80 DD

தனிநபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ (Dependant) அல்லது ஒரு ஹெச்.யூ.எஃப். குடும்பத்தில் யாராவது உறுப்பினரோ செயல்பட முடியாத அளவுக்கு உடலில் ஊனமுற்று (Disability) அதற்கான சிகிச்சைக்காகச் செலவு செய்தால், அதற்கும் வரிச்சலுகை பெறலாம். இந்தவகையில் ஓராண்டில் 50,000 ரூபாய் வரை வரிவிலக்கு கிடைக்கும். மிகவும் தீவிரமான ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், 75,000 ரூபாய் வரை வரிச்சலுகை பெறலாம். வரி கட்டுபவரைச் சார்ந்திருக்கும் (Dependant) அவருடைய மனைவி/கணவன், குழந்தைகள், பெற்றோர், சகோதர-சகோதரிகள் போன்ற-வர்களுக்கான மருத்துவச் சிசிச்சைக்கும் இந்தச் சலுகை உண்டு. 80% அல்லது அதற்கு மேல் செயல்பட இயலாமல் இருப்பவரைத்தான் செயல்-பட இயலாதவர் என்று சட்டம் சொல்கிறது. எனவே வரிச்சலுகை பெற, அங்கீகரிக்கப்பட்ட மருத்-துவ அதிகாரியிடமிருந்து, அதற்குரிய படிவத்தில் சான்-றிதழ் வாங்கி கொடுக்கும்பட்சத்தில்தான் இந்த வரிச்-சலுகையைப் பெறமுடியும்.

தீவிர நோய்களுக்கான சிகிச்சை - 80 DDB


மத்திய நேரடி வரி வாரியம், சில தீவிர நோய்களுக்குப் பெறப்படும் சிகிச்சைக்கான செலவுகளுக்கு வரிவிலக்கு பெறலாம் எனச் சொல்லியுள்ளது. அந்த வகை நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஓராண்டில் அதிகபட்சம் 40,000 ரூபாய்க்கு வரிச்சலுகை பெறமுடியும். இதுவே, மூத்த குடிமக்கள் என்கிறபோது, 60,000 ரூபாய் வரை சலுகை இருக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள், எய்ட்ஸ், கேன்சர், சிறுநீரகக் கோளாறு போன்றவை தீவிர நோய்கள் பட்டியலில் இருக்கின்றன. இப்பிரிவில் வரிச்சலுகை பெற, வருமான வரி தாக்கல் படிவத்துடன் அரசு மருத்துவரிடமிருந்து பெற்ற சான்றிதழையும் இணைத்துக் கொடுப்பது அவசியம்.

கல்விக் கடனுக்கான வட்டி - 80 E

தனி நபர் ஒருவர் தனக்காகவோ, உறவினர்களுக்காகவோ இந்தியாவில் உயர்கல்வி படிப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வங்கியிடமிருந்து வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டியை திரும்பச் செலுத்துவதில் 80 E பிரிவின் கீழ் வரிச்-சலுகை பெறலாம். உயர்கல்வி என்பது பட்டப்-படிப்பு, பட்டமேற்படிப்பு (பொறியியல், மருத்துவம், மேலாண்மை) போன்றவற்றைக் குறிக்கும். வட்டி கட்டத் தொடங்கியதிலிருந்து 7 ஆண்டு வரை, வட்டி கட்டி முடிக்கும் வரைக்கான காலம்... இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை வரிச்சலுகை உண்டு.

உடல் ஊனமுற்றவர்களுக்கு வரிச்சலுகை - 80 U

வரி கட்டும் ஒருவர் உடல் ஊனமுற்று இருந்தால், அவரின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரித் தள்ளுபடி பெறமுடியும். மிகவும் தீவிரமான உடல் ஊனமானால் இந்தத் தொகை 75,000 ரூபா-யாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வரித் தள்ளுபடியைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரி-யிடமிருந்து அதற்-குரிய ஆவணத்தில் சான்-றிதழ் பெறுவது அவசியம்!

-------------- ----------------நன்றி : நாணயம் விகடன்

Saturday, February 16, 2008

பார்ப்பனர்களால் எந்த முன்னேற்றத்துக்கும் இடையூறுதான்!

நம்முடைய கோவை மாவட்டம், நம் இயக்கத்தைப் பொறுத்தவரையில் பிற்பட்டதாக உள்ளதை எண்ணி உண்மையில் வெட்கப் படுகிறேன். காரணம், ஒருக்கால் நான் பிறந்த ஜில்லா என்ற காரணமாகத்தான் இருக்க வேண்டும். நான் காங்கிரசில் இருக்கும்போது, காந்தியார் ஈரோட்டை எடுத்துக்காட்டித்தான் பேசுவார். சங்கரன் நாயர் அவர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடும்படி காந்தியாரிடம் சொன்னபோது, ‘அது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் உள்ளது. அதுவும் கண்ணம்மாள், நாகம்மாள் கையில் உள்ளது' என்று சொன்னார். இது, ‘இந்து'வில் வந்தது.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அன்று அந்த நிலையில் இருந்தது. முதலில் ஒரு பெண் மறியலுக்கு வந்து கைதானார் என்றால், அது ஈரோட்டில்தான். 144 உத்தரவு போட்டு 3 நாளில் வாபஸ் பெற்றுக் கொண்டார்கள் என்றால், அதுவும் ஈரோட்டில்தான் நடந்தது. அப்படியிருந்த ஊர் இன்று இந்த நிலையில் உள்ளது.

சர்வ வல்லமையும் படைத்த பார்ப்பானை எதிர்க்க, எங்களைத் தவிர வேறு ஆளில்லை. நாங்கள் பார்ப்பானை ஒழிக்கிறவர்கள். ஒழிக்கிறோமோ இல்லையோ, ஒழிக்க வேண்டும் என்கிற உறுதியுடன் இருப்பவர்கள். அதோடு கூட நிற்பதில்லையே! பார்ப்பான் உண்டாக்கிய ராமனை எரித்தோம்; அவன் உண்டாக்கிய பிள்ளையாரை உடைத்தோம்; அவன் கடவுளை உடைத்தோம். அதற்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பது இதைப் பார்க்கும் போதல்லவா தெரிகிறது? யாரும் செய்யாத அந்தக் காரியத்தை நம் கழகம் செய்வதால், அது பெருமையே தவிர வேறு என்ன? எதற்கு இன்று சிறைக்குப் போகிறார்கள்? வேறு எந்த இயக்கம், ஒரே நாளில் 4000 பேரைச் சிறைக்கு அனுப்பியது?

சாதி ஒழிய வேண்டுமென்றால், ஜனநாயகத்தின் தலைவர் நேரு சொல்கிறார், ‘பிடிக்காவிட்டால் மூட்டை முடிச்சைக் கட்டு' என்கிறார். நீ யார்? உனக்கு என்ன உரிமை? என்ன உன் யோக்கியதை? உன் பரம்பரை என்ன? நீ எங்களை வெளியே போ என்றால், அதற்குப் பெயர் ஜனநாயகமா? ஜனநாயகம் என்றால், கேளேன் சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்றால், மக்களைக் கேளேன்! ஏனப்பா சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்று கேள். 100 க்கு 51 பேர் சாதி இருக்க வேண்டும் என்றால், நாங்கள் சூத்திரன், சக்கிலி, பறையன் என்று நெற்றியில் பச்சைக் குத்திக் கொள்கிறோம்; 51 பேர் ஒழிய வேண்டுமென்றால், ஒழிய வேண்டியதுதானே? அதுதானே ஜனநாயகம்? சாதி ஒழிய வேண்டும் என்றால், நாட்டைவிட்டு ஓடு என்பதா ஜனநாயகம்?...

ஒரு அதிகாரி என்னிடம் வந்து கேட்டார், ‘என்ன நீ இதில் இத்தனை வேண்டும், அதில் இத்தனை வேண்டும் என்று சப்தம் போடுகிறாயே? ஆபிசில் பார்த்தால் எல்லாம் பார்ப்பானாகவே இருக்கிறானே, எப்படி என்று கண்டுபிடித்தாயா?' என்றார். எப்படியப்பா என்றேன்? அவர் சொன்னார்: ‘ஒரு ஆபிசில் எவனையாவது லீவு எடுக்கச் சொல்லிவிட்டு, அந்த இடத்திற்குத் தற்காலிகமாக ஆள் வேண்டும் என்கிறான். அவன் தற்காலிகம் என்றால் நீயே போட்டுக்கொள் என்பான். இவன் பார்ப்பானாகவே போட்டு நிரப்பி வைப்பான்.

3 வருடம் தற்காலிகமாக வேலை பார்த்துவிட்டால், வேலை காரியமாகிவிடுகிறது.' இப்படிப் பித்தலாட்டம் செய்து நுழைக்கிறான். நீதி நிர்வாகத்தைப் பிரித்தான். என்ன ஆயிற்று? நீதியில் முழுக்கவும் பார்ப்பானே வந்து, வக்கீல் பசங்களில் பொறுக்கிப் போட்டு விடுகிறான். இப்படிப்பட்ட அக்கிரமம் நடப்பதை யார் கேட்க நாதி? இந்நாட்டுப் பத்திரிகைகள் அத்தனையும் அயோக்கியத்தனம் செய்கின்றன. நிலைமை அப்படி ஆகிவிட்டது; பார்ப்பான் தயவில்லாமல் பத்திரிகை வாழாது. ரேடியோ அவனிடம். இப்படிப் பத்திரிகை ஒரு நாட்டில் கேடாக இருந்தால், அந்த நாடு எப்படி உருப்படும்?...

நம் தமிழ் நாட்டில் ‘இது நம் நாடு' என்கிற நினைப்பே இல்லையே! எங்கோ ஓசியில் இருப்பதாகத்தானே எண்ணுகிறார்கள்? சாதி ஒழிய வேண்டுமென்று இத்தனை பேர் சிறைக்குப் போனோம்; பலர் செத்தார்கள்; யாராவது கவலைப்பட்டார்களா? நாமே கல்லுடைக்கிறோம், கக்கூஸ் எடுக்கிறோம், நமக்கு வேலையென்றால் பியூன் வேலை, போலிஸ் வேலை. நம்முடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். படித்த பின் மண்வெட்டி எடுக்க மாட்டான்; வேலையில்லையென்றால் அடுத்த காட்சி என்ன? சினிமாவுக்குப் போக வேண்டியதுதானா? இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

இப்போது மந்திரிகள், கலப்பு மணம்தான் சாதி ஒழிய வழி என்ற போது சும்மா இருந்தார்கள். காங்கிரசில் சொன்னான், சாதி ஒழிய கலப்பு மணம் வேண்டும் என்றான். அதுக்கு எழுதுகிறான் ஒரு பார்ப்பான்: ‘கலப்புமணம் செய்யலாம் என்று காங்கிரஸ் சொல்லுவது தப்பு. ரத்தம் கெட்டுப் போகும்.' இவர்கள் ரத்தம் சுத்தமான ரத்தமாம்! அது கெட்டுப்போகுமாம்! ‘கலப்பு மணம் பேசுவதற்குதான் பெருமை; காரியத்திற்கு ஆகாது. ராஜாஜி பெண்ணைக் காந்தி மகனுக்குத் தந்தார்; அது உருப்படவில்லை; நேரு எவனுக்கோ கொடுத்தார் அதுவும் உருப்படவில்லை. எனவே, கலப்பு மணம் கூடாது' என்று ‘இந்து' பத்திரிகையில் எழுதுகிறான். ஆகவே, நீங்கள் சிந்திக்க வேண்டும். பார்ப்பனர்களால் எந்த முன்னேற்றத்துக்கும் இடையூறுதான்!



------------ தந்தைபெரியார் அவர்கள் ஈரோட்டில் 19.6.1958 அன்று ஆற்றிய சொற்பொழிவு: ‘விடுதலை' 25.6.1958

Friday, February 15, 2008

தீண்டாமையைப் போக்க இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்

நான் இந்து மதத்தைப்பற்றியோ, இஸ்லாம் மதத்தைப்பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள் தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம்,
சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள்
இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால்
லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பது தான்.
இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை.
அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது
தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்
கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை.
இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான்
ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத்தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம்
மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம்
அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக
வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம்
என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன்
தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும்,
ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும்
சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.
இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது.

இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 - கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில்
சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர்
என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி
நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச்
சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச்
சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை
போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல்
போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில்,
மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித்
திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள்
என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ'
"கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச்
சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப்
போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம்
செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது
என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும்
சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில்
வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்;
செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால்
துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம்
கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில்
என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ, துன்பமோ ஏதாவது
உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம்
உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய்
இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன?
பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள்
ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத்
தழுவக் கூடாது?

கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

--------தந்தைபெரியார் அவர்கள் சாத்தான்குளத்தில் 28.07.1931 அன்று ஆற்றிய உரை. "குடி அரசு" 02.08.1931

"கலியாணம்'' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும்

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

---------தந்தைபெரியார்-"விடுதலை"- 28.6.1973

Wednesday, February 13, 2008

பெரியார் பார்வையில் தேசியம்

தோழர்களே! கடவுள் மதம் ஜாதீயம் தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.

தேசியம் என்பதும் முற் கூறியவற்றைப் போன்று ஒரு போலி உணர்ச்சிதான். ஏனென்றால், தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.

தேசம் என்றால் எது? உலகப்பரப்பு அய்ந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்துக்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன.தேசம் என்பவற்றில் சில கண்டத்தை விட பெரிதாகவும், பல மதங்களாகவும் பல பிறவிகளாகவும், பல மொழி, பல நாகரிகம், பல கலை ஆகவும் இருக்கின்றன. இவை தவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும், மாகாணத்திலும் பலமாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்ப்பிரிவுகளும், பல பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வகட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசியக் கொள்கை என்றும், தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாதது என்றும் இவற்றில் எதையும் காப்பாற்ற உயிர்விட்டாவது முயற்சிக்கவேண்டுமென்றும் கருதிக் கொண்டிருப்பவையாகும்.

இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய்ப் பார்க்கிறோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்தஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ்நிலை - மேல்நிலை, கஷ்டப்படுகிறவன் - கஷ்டப்படுத்துகிறவன், முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தைப் பிரித்தக்கொண்டு தங்களுக்கெனத் தனித்த தேசம், தேசியம் என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வது என்பது எனக்குப் புரியவில்லை, நமது தேசம் என்ற விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதுதான் மற்ற எந்தக் கண்டம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும் தாழ்மைப் படுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகிறார்களோ அவ்வளவு நிலையில்தான் மற்ற தேசத்தார் என்கிற மக்களும் இருந்து வருகின்றார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்தவிதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கிறோமோ, அவ்விதமான துயரம் கொண்ட மக்கள் அந்நிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலேயே எந்தவிதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும், செல்வவான்களாகவும், அரசாங்க ஆதிக்கக்காரர்களாகவும் குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொதுஜனங்களைப் பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கிப் பட்டினிபோட்டு வதைத்து தாங்கள் பெருஞ்செல்வம் சேர்த்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ, அது போலதான் அந்நிய தேசமென்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் ஒரு பிரிவார் பிறவியின் பேரால் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் என்ன கொள்கைகளைக் கொண்டு, எந்த இலட்சியத்தைக் கொண்டு உலகப்பரபில் ஒரு அளவை மாத்திரம் பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று கேட்கின்றேன்.

துருக்கி தேசத்துக்கும் இந்திய தேசத்துக்கும் சண்டை வந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்குத் தேசாபிமானம் இந்தியாவுக்கா ? துருக்கிக்கா ? ஹைதராபாத்துக்கும் மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால், ஹைதராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே, ‘தேசம்’ ‘தேசாபிமானம்’ என்கின்ற வார்த்தைகளும் கடவுள், மதம் என்பது போன்ற ஒரு வகுப்பாருடைய சுயநலத்திற்க்கு ஏற்ற ஒரு சூழ்ச்சிவார்த்தை என்ற சொல்ல வேண்டி இருப்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை. முடிவாகக் கூறும் பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் ம ற்றத் தேச முதலாளிகளுடன் சண்டைபோட்டுத் தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக்கொள்ள ஏழைமக்களை - பாமரர்களைப் பலிகொடுப்பதற்காகக் கற்ப்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

உதாரணமாக, இங்கிலாந்து தேச முதலாளிகள் அமெரிக்கா தேசமுதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்றுத் தங்கள் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால் அல்லது அமெரிக்க முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேச முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை கொள்ள முயற்சிப்பதாயிருந்தால், இங்கிலாந்து தேச முதலாளிகள் இங்கிலாந்து தேச ஏழை மக்களையும் பாமரமக்களையும் பார்த்து, “ஓ இங்கிலாந்து தேசிய வீரர்களே, தேசாபிமானிகளே, தேசத்துக்கு நெருக்கடி வந்துவிட்டது; இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள்; ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்!” என்று கூப்பாடு போடுவார்கள்.கூலிகளை அமர்த்தியும் வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைக்காரர்களுக்கு எலும்பு போட்டும் பிரச்சாரம் செய்விப்பார்கள். இது போலவே அமெரிக்க முதலாளியும் தன் தேசம் நெருக்கடியில் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மாதா அங்குள்ள பாமரர்களையும், வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் பட்டினி கிடக்கும் ஏழை மக்களையும் தங்கள் கடமையைச் செய்ய அழைப்பதாகவும் கூவிக்கொண்டு கூலிகொடுத்துப் பிரச்சாரம் செய்வார்கள். இரண்டு தேச ஏழைகளும் மற்றும் சாப்பாட்டிற்க்கு அறவே வேறு வழியில்லாத மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போய் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொள்ளுவார்கள். சிறைப் பிடிப்பதன் மூலம் இரு தேசச் சிறைகளையும் நிரப்பி விடுவார்கள். கணக்குப் பார்த்தால், இரு கட்சிகளிலும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் விட்டிருப்பார்கள். பிறகு இருவரும் இராஜியாகப் போயோ யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.

ஜெயம் பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும் அல்லது தங்கள் முதல் என்றும் குறையாத மாதிரியில் பத்திரமேற்பட்டிருக்கும். ஆனால் சுட்டுக் கொண்டு செத்தவர்களுக்குச் சுடுகாடும், அவர்கள் பெண்ஜாதிகளுக்குச் சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன் என்பதை யோசிதததுப் பாருங்கள். அமெரிக்கா குடி அரசு நடாத்துவதற்க்கும் அந்நிய ஆட்சியைத் துரத்துவதற்க்கும் அமெரிக்க ஏழைமக்கள், தொழிலாளி மக்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள், எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள் என்று அமெரிக்க விடுதலைச் சரித்திரத்தைப் புரட்டிப்பாருங்கள். இன்று அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்களும், வியாபாரிகளும், விவசாயப் பெருக்கும் இருந்து வருகின்றன. ஆனால் ஏழைகள் படும் கஷ்டமும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள் அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்து வருவது வேறு எந்த நாட்டிற்க்கும் குறைந்ததல்ல.

அது போலவே இந்தியத் தேசியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல ஏழைப் பாமர மக்களை தூண்டிவிட்டு அடிபடச் செய்து சிறையை நிரப்பி உரிமையும் பதவியும் அதிகாரமும் பெற்ற முதலாளிகள் பணத்தையும் சோம்பேறி வாழ்க்கைப் பிறவிகள் உத்தியோகங்களையும் பெற்றுத் தங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பெருக்கிக் கொண்டதைத் தவிர இந்த இந்தியத் தேசியத்தால் ஏழை மக்கள், பாமரமக்கள் அடைந்த - அடையப்போகும் நன்மை என்னவென்பதைப் பாருங்கள்.

தோழர்களே ! அமெரிக்கத் தேசாபிமானத்தின் தன்மையும் அதன் பயனையும் சிந்தித்துப் பாருங்கள். அமெரிக்க அந்நியப் பயனையும் சிந்தித்துப்பாருங்கள். அமெரிக்கா அந்நிய ஆட்சியை ஒழித்தாலும், ஓர் அரசனையே விரட்டிவிட்டுக் “குடிகளின் ஆட்சி” ஏற்படுத்திக் கொண்டதாலும், ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்ப்பட்டது என்பதை மற்றொருதரம் யோசித்துப் பாருங்கள்.

இந்த இலங்கையில் இருந்துகொண்டு இந்தியத் தேசாபிமானம் பேசும் தேசிய வீரர்களைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஏறக்குறைய அத்தனை பேரும் 100 -க்கு 90-பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து வந்து இலங்கை தேசத்தைச் சுரண்டிக்கொண்டு போக இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர்களாய் - அடிமைகளுமாய் இருப்பவர்களுமாவர்.

இலேவாதேவிக்காரர்கள் பெரிதும் மாதம் 100-க்கு 12-வரை வட்டிவாங்கி ஏழைமக்களையும் இலங்கை வாசிகளையும் பாப்பாராக்கிக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், விவசாயக்காரர் பெரிதும் இலங்கைப் பூமிகளை ஏராளாமாய்க் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்துப் பொருள் சேர்த்துக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து இலங்கைச் செல்வத்தைக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆட்சியில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டுப் பணம் சுரண்டிக்கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம்பிடித்த வன்னெஞ்சப் பார்ப்பானார்களுமாகக் கூடிக்கொண்டு இந்தியத் தேசாபிமானக் கூப்பாடு போடுகின்றார்கள்.

வெள்ளைக்காரனான அந்நியன் 100-க்கு வருஷம் 6-வட்டிக்கு கொடுத்தால், கருப்பனான அந்நியன் 100-க்கு மாதம் 6-வட்டிக்கு கொடுக்கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால், கருப்பன் ஏழைகளிடம்-கூலிகளிடம் வட்டிவாங்கிக் கொடுமைப்படுத்துகிறான்.

இந்தப்படி மக்களைச் சந்தித்துக் கொள்ளை அடிபவர்களே (வெள்ளையரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம், மதாபிமானம், தேச அபிமானம் பேசுகிறார்கள்.

ஆகவே, இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம் என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்துவிடுங்கள். அவை ஒரு நாளும் க ஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்கா. மற்றபடி அவை உலகில் ஏழை, பணக்காரன் என்று இரண்டு வகுப்புகள் இருக்கவும் ஏழைகளை தொழிலாளிகளைப் பணக்காரரும் சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும்தான் பயன்படும்.

தோழர்களே! முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி, மனிதத்தன்மை மானம் இல்லாமல், செத்திருப்பதையும் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினியையும், கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஸ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள்.அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூகம் சமஉரிமை -சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.

1932 இலங்கையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை

ஒரு நாள் வருவார் மருத்துவர் இராமதாசு!

பா.ம.க நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாசு அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுதியுள்ள பதில் குறித்து `தமிழ்ஓசை (10.2.2008) ஏட்டில் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது.
அதற்கான பதிலைப் பொறுப்போடு தெரிவிக்க வேண்டியது நமது கடமையாகும்.
1. ``சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதுதான் நமக்கு முக்கியம் என்றும் எந்த வழியாக என்பது முக்கியமல்ல என்றும் கருத்து வெளியிட்டார் மருத்துவர் இராமதாசு. இந்தக் கருத்தை அவர் வெளியிட்டபோது, இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல என்றும், முதலமைச்சர் கலைஞரும், இத்தகைய கருத்தை ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார் என்றும் விளக்கமளித்திருக்கிறார். இதனை முதலமைச்சர் கலைஞர் மறுக்கவில்லை.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியபோது, இந்தக் கருத்தை, தான் வெளியிட்டது உண்மைதான் என்றும் ஆனாலும் இப்போது 60 விழுக்காடு அளவுக்குத் திட்ட வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில், வேறு வழிபற்றி சிந்திப்பது சாத்தியமல்ல என அதிகாரிகள் கூறுகிறார்கள் என்ற விளக்கத்தையும் கலைஞர் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் வெளியிட்ட கருத்தையே நான் எதிரொலித்தேன் என்று பா.ம.க, நிறுவனர் சொன்னதற்குக் கலைஞர் இவ்வாறு விளக்கம் அளித்துவிட்டதற்குப் பின்னர் இந்த விவகாரம் முற்றுப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தேவையில்லாமல் வெளியிட்ட ஒரு கருத்தும், அதைத் தொடர்ந்து அவரை ஆசிரியராகக் கொண்ட விடுதலை நாளேடு தீட்டிய தலையங்கமும் இப்போது, சேதுக் கால்வாய்த் திட்டத்தைவிட பெரும் விவாதப் பொருளாக மாறி விட்டிருக்கிறது. இதற்கான முழுப் பொறுப்பையும் வீரமணியே ஏற்க வேண்டும் என்று தோழர் பாலா எழுதியுள்ளார்.
இந்தப் பகுதியில் தன் முரண்பாடும், காலப் பிழையும் கட்டுண்டு இருப்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
வேறு வழியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி முதலில் தாம் தெரிவித்த கருத்தினை பிறகு மாற்றிக் கொண்டு விட்டதாகவும், வேறு பாதையில் நிறைவேற்ற சாத்தியமில்லையென்றும் முதல் அமைச்சர் தெளிவாகக் கூறியிருப்பதை கட்டுரையாளர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விவரம் மருத்துவர் இராமதாசு அவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்ததாகவே வைத்துக் கொள்வோம். அப்படியிருக்கும்பொழுது வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றிக் கூற வேண்டிய அவசியம் என்ன? அதுவும் மதவாதச் சக்திகள் வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் நேரத்தில், உச்சநீதிமன்றம் வரை செல்லும் சமயத்தில், அவர்கள் விரும்பும் - வலியுறுத்தும் கருத்துக்குத் துணை போவது போல பா.ம.க., நிறுவனர் கருத்துக் கூறலாமா? என்பதுதான் திராவிடர் கழகத் தலைவரின் கேள்வியாகும். அவர் தெரிவித்த கருத்து சரியானதுதான் என்பதற்குச் சாட்சியம் - தமிழக பா.ஜ.க.,தலைவர் திரு.இல. கணேசன் அவர்கள் எங்கள் கருத்தை ராமதாசும் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறியிருப்பதாகும்.
(தினத்தந்தி, 6.2.2008, பக்கம் 9).
கடைசியாக முதல்வர் தெரிவித்த கருத்தினைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு கட்டத்தில் முதல் அமைச்சர் சொன்ன கருத்தைத் தாம் குறிப்பிடுவதாக மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் குறிப்பிட்டு இருப்பது தேவையற்றதும் காலப் பிழையுமாகும். 2007 செப்டம்பரில் முதல் அமைச்சர் கூறிய கருத்தை மாற்றிக் கொண்டு 2007 அக்டோபரிலேயே மாற்றிக் கூறிவிட்டார்.
என்.டி.டி.வியில் ஒரு படிமேலே சென்றுகூட கருத்தினை திட்டவட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சேகர் குப்தா (என்.டி.டி.வி. சார்பில்) வாஜ்பேய் ஒப்புதல் அளித்தார் என்று சொல்கிறீர்கள். இப்போது அது மதப் பிரச்சினையாக ஆகியிருக்கிறது. ஏனென்றால் ஏராளமானவர் இந்தப் பாலத்தை ராமர் கட்டினார் என்று நம்புகிறார்கள். அந்தப் பாலத்தை உடைத்து பாதை அமைக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.
கலைஞர் பதில்: அது தேவையே இல்லை. அதை உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. உடைப்பது ராமர் கட்டிய பாலம் அல்ல. நான் இன்னும் சொல்கிறேன். அப்படியே இருந்தாலும் என்ன, அதனை அகற்றக் கூடாதா? நாட்டு மக்களின் நலனுக்காக அதை அகற்றிவிட்டு புதுப் பாலம் கட்டக் கூடாதா?
(`முரசொலி 29.10.2007 பக்கம் 1)
``வேறு அய்ந்து பாதைகளும் ஏற்கத்தக்கதல்ல என்று விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சுற்றுப்புறச் சூழல் ரீதியாகவும் ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு விட்டது என்ற கருத்தையும் முதல்வர் கலைஞர் வரையறுத்தும் கூறி விட்டாரே!
(ஆதாரம்: `முரசொலி 2.10.2007 பக்கம் 12)
இவ்வளவுக்குப் பிறகும் முதல் அமைச்சர் சொன்னதைத் தான் நான் சொல்கிறேன் என்று ஒரு கட்சியின் நிறுவனர் கூறுவது பொருத்தமானது தானா - சரியானதுதானா என்பதை மீண்டும் மக்கள் முன் வைக்கிறோம்.
`தமிழ் ஓசை கட்டுரையாளர் தோழர் பாலாவின் கூற்றுப்படியே கூற வேண்டும் என்றால் 2007 அக்டோபரிலேயே முடிந்து விட்ட ஒன்றை, 2008 பிப்ரவரியில் கிளப்பி விவாதப் பொருளாக ஆக்கியதற்காக மருத்துவர் ச. இராமதாசு அவர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் விவாதப் பொருளாக ஆக்கப்படாதது போலவும், வீரமணி அவர்கள் பதில் சொன்னதன் மூலமாகத்தான் அது அவ்வாறு ஆக்கப்பட்டுள்ளதாகவும் எழுதியிருப்பது சரியான நகைச்சுவைப் பகுதியாகும்.
இன்னும் அதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளனர் என்பதெல்லாம் ஒரு பத்திரிகையாளருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?
2) பெரியாரின் சீடர் இராசாராம் மறைந்துவிட்டதைப் பொருட்படுத்தாமல் சென்னையில் செய்தியாளர்களை அவசர அவசமாக அழைத்து வீரமணி பேட்டி கொடுத்து விட்டாராம் - இப்படி ஒரு குற்றச்சாற்று.
82 வயது நிறைந்த ஒருவர் மறைந்த நிலையில், அதற்குரிய இரங்கல் அறிக்கை கொடுத்து, நேரில் சென்று மரியாதையும் செய்து, செய்தியாளர் கூட்டத்தைத் தொடங்குமுன் இரங்கலும் தெரிவித்துதான் கருத்தினைக் கூறத் தொடங்கினார் திராவிடர் கழகத் தலைவர் என்கிற செய்தியை முதலாவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் மறைந்து விட்டார் என்பதற்காக பத்திரிகையாளர்களைச் சந்திக்கக் கூடாது, கருத்துகளைக் கூறக் கூடாது, ஒப்பாரி வைத்து மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பது நூறு சதவிகித மூடநம்பிக்கையாகும். திரு. இராசாராம் அவர்கள் மறைவைக் காரணம் காட்டி ``தமிழ் ஓசைக்கு விடுமுறை அளித்துத் துக்கம் கொண்டாடினார்களா என்று தெரியவில்லை.
அவசர அவசரமாகச் செய்தியாளர் கூட்டம் கூட்டப் பெறவும் இல்லை. 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே அழைப்புக் கொடுத்துத்தான் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. எதிலும் அரைகுறையாக - அவசர அவசரமாக எழுதக் கூடாது.
3) எங்களுக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை. உங்களது ஆலோசனைகள் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை என்று மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் எழுதியுள்ளார்.
அதற்குப் பதில் அளிக்கும் வகையில்தான் நீங்கள் மட்டும் நாள்தோறும் அறிக்கைகள், பேட்டிகள்மூலம் மற்றவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே. அறிவுரை கூறும் மொத்தக் குத்தகையையும் தாங்கள் மட்டும் ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டுள்ளீர்களா? என்று திராவிடர் கழகத் தலைவர் பதில் எழுதியிருந்தார். அதற்குத் தோழர் பாலா என்ன பதில் கூறுகிறார் - நாள்தோறும் அறிக்கைகள், பேட்டிகள் வீரமணியை நோக்கியா? அவரது திராவிடர் கழகத்தை நோக்கியா? அல்லது மற்ற அரசியல் கட்சிகளை நோக்கியா? என்று கேள்வி கேட்கிறார்.
அப்படியென்றால் அவர் பேட்டிகளும், அறிக்கைகளும் அண்டார்டிகாவைப்பற்றியா? - கோழி வளர்ப்பைப் பற்றியா? ஒன்றும் விளங்கவில்லையே!
இப்படி எழுதிவிட்டு அவரே அடுத்து எழுதுகிறார்.
அரசின் திட்டங்களையும், அரசு வெளியிடுகின்ற அறிவிப்புகளையும் விமர்சிப்பதற்கும், தேவைப்பட்டால் கருத்துகளையும், அறிவுரைகளையும் கூறுவதற்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் பா.ம.க.விற்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று எழுதுகிறார்.
இதைத்தான் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி கேட்கிறார். அடுத்தவர்களை விமர்சிக்கவும், அறிவுரைகள் கூறவும் பா.ம.க.வுக்கு மட்டும் அனைத்து உரிமைகளும் உண்டு; மற்றவர்களுக்குக் கிடையாது என்றால் -
அறிவுரை கூறும், விமர்சிக்கும் அத்தனை உரிமைகளையும் பா.ம.க. மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துள்ளது என்பதுதானே இதன் பொருள். ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாக அல்லவா பதில் இருக்கிறது.
அதுவும் மிக முக்கியமான சேது சமுத்திரத் திட்டம் என்பது பொதுப் பிரச்சினையல்லவா - அதுபற்றி சொல்லப்படும்போது, விமர்சனம் வரத்தானே செய்யும்?
பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களைத் தாங்கும் சக்தி வேண்டாமா? அவ்வளவு பலகீனமா?
`இதே மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் பெரியார் வழி நடக்கும் தொண்டர்களுக்கு (தினப்புரட்சி 22.2.1991) என்று பகிரங்கக் கடிதம் எழுதவில்லையா?
தி.க. தலைமைக்கு மூளை வீரியம் குறைவு எனும் அளவுக்குக்கூட எழுதி இருந்தாரே!
திராவிடர் கழகத் தலைவர் தக்க முறையில் பதில் எழுதினாரே தவிர, ஆத்திரப்படவில்லையே! யாருக்கு மூளை உண்டு, வீரியம் குறைவு என்பதை அறிவோடு மக்கள் தெரிந்து கொள்வார்கள் - அவ்வளவுதான். மானமிகு வீரமணி எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று மருத்துவர் பேசியது எல்லாம் உண்டே! மூளை வீரியத்துடன்தானே பேசியிருப்பார்?
திமுகவில் உள்ள சுயமரியாதை உள்ளவர்கள் பா.ம.க.வுக்கு வர வேண்டும் என்றுகூட அவர் எழுதியதுண்டே! இது என்ன உரை? அறிவுரையா? ஆசி உரையா? அருள் வாக்கா? தமிழ்ஓசை எழுத்தாளருக்குத்தான் வெளிச்சம்.
மருத்துவரின் விமர்சனங்களை அறிவுரைகளை நடுநிலையாளர்கள் அனைவரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்களாம் - மனம் புழுங்கிப் போயிருப்பவர்களில் வீரமணியும் ஒருவராம்! இப்படியும் தமிழ் ஓசையில்!
இத்தனைப் பேர் பாராட்டிப் பேசியிருக்கும்பொழுது வீரமணி ஒருவர் மட்டும் மாறுபட்டுச் சொல்வதால் குடியா மூழ்கிப் போகும்? அனைவருமே தன்னை மட்டும் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு வகையான பலகீனம் தானே!
தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவது வாடிக்கைதானே என்று திராவிடர் கழகத் தலைவர் எழுதி விட்டாராம்! யார்தான் அப்படி அணி மாறவில்லை? கூட்டணிக்குக் கொள்கையெல்லாம் தேவையில்லை என்று விளக்கம் அளிக்க முன் வந்துள்ளார்.
எனக்கு இவர் பேட்டி கொடுக்கவில்லை, அதனால் அணி மாறுகிறேன்; இவர் தனது தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்தும் பேசச் சொல்லியிருக்கிறார் - அதனால் இவருடன் தான் கூட்டு; அவர் 20 இடங்கள்தான் தருவேன் என்கிறார். இவரோ 25 இடங்கள் தருகிறார். அதனால்தான் இவருடன் கூட்டு என்பது எல்லாம் எவ்வளவு பரிகசிப்புக்கு உரியது!
ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறார். யாரிடம் தான் கொள்கை இருக்கிறது எங்கள் கட்சி உட்பட என்று பட்டவர்த்தனமாக ஒரு முறை ஒப்புக்கொண்ட (ஆனந்த விகடன் 13.9.1998) வெள்ளை மனம் மருத்துவருடையது என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம் - ஏன் பாராட்டக் கூடச் செய்யலாம்!
இப்பொழுது கூட்டணிக்குக் கொள்கை தேவையில்லை என்று எழுதுகிறாரே - தேர்தல் கூட்டணி பற்றி மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் நிலைப்பாடு என்ன? இதோ மருத்துவர் பேசுகிறார்.
``தேர்தல் கூட்டு, முற்போக்குக் கூட்டணி என்று அரசியல் கட்சிகள் கூறுவதெல்லாம் சுத்த கயவாளித்தனம், மக்களை மோசடி செய்யும் வேலை. தேர்தலில் கூட்டு ஏன்? ஒரு கட்சிக்கும், அதன் கொள்கைக்கும் எவ்வளவு மக்கள் ஆதரவும், நம்பிக்கையும் உள்ளதோ, அவர்கள்தான் அரசு அமைக்க வேண்டும். இதைக் கண்டுபிடிக்க நடத்தப்படுவதுதான் தேர்தல். இதைத் தெளிவுபடுத்த கட்சிகள் தனித்தனியாக நின்றால்தான் யாருக்கு உண்மையான மக்கள் ஆதரவு என்பது தெரியும். தனித்துப் போட்டியிட முடியாத கட்சிகளை அதன் தலைமைகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது அல்லது கட்சியைக் கலைத்துவிட வேண்டும். மற்ற பெரிய கட்சிகளின் தயவில் சட்ட சபைக்குள்ளும், பார்லிமெண்டுக்குள்ளும் நுழைய மட்டுமே இந்தத் தேர்தல் கூட்டு பயனளிக்கிறது. இந்தத் தேர்தல் கூட்டு என்கிற மோசடியை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்கிறது. வெற்றி வாய்ப்புப் பறிபோனாலும் தேர்தல் கூட்டணியை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
(பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான
`தினபுரட்சி 9.6.1990) இப்படியெல்லாம் தேர்தல் கூட்டணி பற்றி சொன்னவர்தான் பா.ம.க. நிறுவனர். இருந்தும் இதுபோன்ற பிரச்சினையில் ஒரு தலைவருக்குப் போய் வக்காலத்து வாங்கி எழுதுகிறாரே - தோழர் பாலா? பரிதாபகரமாக இருக்கின்றது.
1967-இல் இருந்துதான் தமிழ்நாட்டில் கூட்டணி வந்தது என்று எழுதியுள்ளார். அதுவும்கூட தவறு 1952-ஆம் ஆண்டிலேயே அய்க்கிய முன்னணிகள் உருவாகி விட்டன. தேர்தல் கூட்டணியில் கொள்கைக்கு இடமில்லை என்றால் மதச் சார்பற்ற கூட்டணி என்கிற சொல்லாடல்கள் எல்லாம் எங்கிருந்து குதித்தன? இனி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டு இல்லை என்று மருத்துவர் கூறியுள்ளதன் தாத்பர்யம் என்ன? தோழர் பாலா விளக்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற உயர்ந்த பொருள் உள்ள கருத்தினைத் தம் குறுகலான இடத்திற்குக் கொண்டு செல்வது வருந்தத்தக்கது.
அந்த மாறுதல் என்பது அறிவியல் ரீதியானது. சிந்தனையானது. முற்போக்குத் திசையைக் கொண்டது. பிற்போக்குக் குட்டையில் வீழ்வது அல்ல! எடுத்துக் கொண்ட வழக்குக்கு வாதாடுவது வக்கீல் தொழிலுக்கு லாயக்கே தவிர அறிவார்ந்த சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது.
பா.ம.க.,மீது அத்தனை வெறுப்பு; மனப் புழுக்கம் வீரமணிக்கு இருக்கிறது என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவை நிதானமற்றவை என்பது சிந்திப்பவர்களுக்குத் தெரியும்.
என்ன புழுக்கம் - என்ன வெறுப்பு? திராவிடர் கழகத்துக்கும் பா.ம.க.வுக்கும் பதவிப் போட்டியா - பா.ம.க.வுக்கு இத்தனை இடம் கொடுக்கும்பொழுது தி.க.,வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு குறைவான இடங்கள் என்ற ஏமாற்றமா?
ராமன் பாலத்தைக் காப்பாற்றும் சக்திகளுக்குத் துணை போகாதீர்கள் என்ற வேண்டுகோளுக்காகவா இவ்வளவு ஆத்திரம் - எரிச்சல் மொழிகள்?
இதே மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் திராவிடர் கழகம் பற்றியும் பா.ம.க. பற்றியும் சொன்ன கருத்துகளைக் கூறித் தூக்கத்தைக் கலைக்க விரும்புகிறோம்.
``திராவிடர் கழகத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இது ஓட்டுப் பொறுக்குகிற கட்சி. அவ்வளவுதான். ஓட்டுப் பொறுக்குகிற வேலையையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, திராவிடர் கழகத்தின் பின்னாலே வருவதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறோம்.
(6.11.1993 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமூகநீதி ஆதரவு - மதவெறி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில் ஆற்றிய உரை)
இப்பொழுது மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் - மத்தியில் அமைச்சர்கள் என்கிற அதிகாரத் தொனியில் பேசியிருந்தாலும், ஓட்டுப் பொறுக்குவதை ஒதுக்கி வைத்து விட்டு, ஏதோ ஒரு கால கட்டத்தில் திராவிடர் கழகத்தின் பின்னாலே வரக் கூடியவர்தான் என்கிற எண்ணத்தில், சமாதானத்தில் அவரின் கோபம் கொப்பளிக்கும் - முன் - பின் - மறந்த வார்த்தைகளைப் பொருட்படுத்தப் போவதில்லை! அத்தகையவர்களை நம்பி நண்பர்கள் பேனா தூக்குவதை நிறுத்திக் கொள்வது நல்லது!

----------- "விடுதலை" 11-2-08 இதழில் "மின்சாரம்" எழுதிய கட்டுரை

Tuesday, February 12, 2008

சூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா?

நாங்கள் இவ்விதக் காரியத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் முதலாவதாக, எங்களுக்குள்ள இழிநிலையும் சூத்திர, பஞ்சமன் என்ற இழிவுப் பட்டம் நீங்க வேண்டும் என்பதற்கேயாகும். ஆனால், இவ்வித இழிவையும் கீழ்சாதிப் பட்டத்தையும் எண்ணி இதை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் நாங்கள்தான். வேறு யாரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், இவ்வித இழி நிலைமை நீங்க வேண்டுமென்பது, தனிப்பட்ட என்னுடைய சுயநலத்திற்கு மட்டுமல்ல; இதனால் எனக்கு மட்டும் இழிவு கிடையாது. சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுகிற திராவிட மக்கள் அத்தனை பேருக்கும் உள்ள இழிவைப் போக்கவேயாகும்.

இன்று மந்திரியாக இருக்கும் சூத்திரன், மந்திரி என்பதால் சூத்திரன் என்ற இழிநிலை போகாது. இன்று மந்திரியாக இருக்கிற பறையர், மந்திரியாக இருப்பதால் அவருடைய பறையர் என்ற பட்டம் போகாது. வேலை முடிந்ததும் ஊருக்குப் போகிற அவர்கள், தங்கள் தங்கள் பறைச்சேரிக்குத்தான் போவார்கள். இன்று சூத்திரர்களும், பஞ்சமர்களும், மந்திரியாகவும், சட்டசபை மெம்பராகவும் (உறுப்பினராகவும்) வந்தார்கள் என்றால், நாங்கள் கூப்பாடு போட்டதால்தான் முடிந்தது. இன்றைக்குப் பறையரும், பள்ளரும் ஓரளவு கல்வி கற்க போதிய வசதியும் சலுகையும் அளிக்கப்பட்டு, அதனால் படிக்கவும் முடிந்தது என்றால், அதுவும் எங்களது முயற்சியினால்தான். எனவே, இவர்கள் யாரைக் கொண்டு முன்னுக்கு வர முடிந்ததோ, அவர்களையே எதிரிகளாக நினைக்கின்றனர். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், எங்களை வகுப்புவாதி என்கின்றனர்.

"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே ""நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே ""பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து ""ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.

ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.

ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்'' என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை. தனக்குத் தெரியுமானாலும், அக்கட்சியின் தலைவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், அதுபற்றிக் கூறுவதே கிடையாது. ஏதாவது உதாரணம் சொல்ல லெனின் சொல்லவில்லையே, மார்க்ஸ் சொல்லவில்லையே? என்றால், லெனின் இருந்த நாட்டில் பார்ப்பான் பறையன் இருந்தானா? இவர்கள் இருக்கவுமில்லை; அதைப்பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், இங்கு நேரிலேயே பார்க்கிறோமே பார்ப்பானையும் பறையனையும்! அதுமட்டுமா? சாஸ்திரத்தில் பார்க்கிறோம், சட்டத்தில் பார்க்கிறோம். ஆகவேதான் இங்கு இவைகளை ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எனவேதான், நாங்கள் கோருவது எல்லாம் மக்களுக்குச் சோற்றுக்கும், உத்தியோகத்திற்கும் மாத்திரமின்றி, பரம்பரை இழிவு நீங்க வேண்டும் என்பதேதான். அந்நியன் இந்நாட்டைச் சுரண்டாது, வேறு இங்குள்ள எவராவது ஆட்சி செய்தாலும் போதும். பார்ப்பனர்களின் அட்டூழியம், ஜாதி முறையும் ஒழிந்து, ராமாயணத்தில் ஒரு ஜதை செருப்பு ஆண்டதாகக் கூறப்படுகிறதைப் போல் எங்களை ஒரு ஜதை செருப்பு ஆட்சிபுரிந்தாலும் சரியே. மக்கள் சுயமரியாதை கொண்டவர்களாக, மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும். மனித ஜாதி என்ற ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும்.




13.4.1955 அன்று,தந்தைபெரியார் அவர்கள் திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. "விடுதலை' 20.4.1955

பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் - அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாடுகளிலும் எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது. பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லப்படுவதுண்டு. இவை எல்லாம் கடவுளை வணங்கித் தங்களுக்கு நன்மை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்துகொள்வது, ஜீவப் பலி கொடுப்பது, கோவில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பேராசை’ என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

படித்துப் ‘பாஸ்’ செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால்; பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால்; மோட்சத்துக்குப் போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால் இவைகளெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாகும்.

பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை.
மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளைச் சுத்த முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. எந்த மனிதனும் தகுதியினால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனடைய எதிர்பாராமல் - காரியத்தைச் செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்றுந் தானே சொல்லவேண்டும்?

தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் ‘லைசென்சு’ (அனுமதிச் சீட்டு) கொடுப்பது போலாகிறது. விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க அரிவாள் எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

ஏனென்றால், சகல காரியங்களும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு, கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்திற்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்திருக்கும் ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். சாதாரணமாக, மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது.

அதாவது, ‘எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்’ அல்லது ‘உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்; அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய்’ என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது. இவர்கள் எல்லோரும் - அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளைப் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மையுடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்.

சிலர் சொல்லுகிறார்கள், “மனிதன் பாபி; அவர்கள் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீரவேண்டும்” என்று. “நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும்” என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?

ஆகவே, ‘கடவுள்’ கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோசனத்தையும் கொடுக்காமல் போய்விடும். மனிதன் பூசையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்காகப் பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை. குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்காகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.

இந்த இரண்டு காரியங்களும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆத்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும் எண்ணமும், ‘சித்திரபுத்திரனுக்கோ’ ‘கடவுளுக்கோ’ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காகப் பலன் கொடுக்கத் ‘தீர்ப்பு நாளும்’, ‘எமதர்ம ராஜாவும்’ இருந்தே இருக்கிறார்கள். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பவை - மேற்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனமானவைகளைச் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகின்றன என்பவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.


-----தந்தைபெரியார்-‘பகுத்தறிவு’ மலர் 1, இதழ் 9, 1935