Wednesday, February 20, 2008

சமதர்மவாதிகள் தன் நெற்றியைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்

ஜனநாயகம் என்றால் மக்களாட்சி என்பதுதான் உண்மையான கருத்து. அப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கு மக்கள் அறிவாளிகளாகவும், ஓரளவிற்காவது யோக்கியர்களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

நமது ஜனநாயக மக்கள் இயற்கையில் மூடநம்பிக்கையுடைய காட்டுமிராண்டி மக்களென்ப தோடு அல்லாமல் கல்வி-எழுதப் படிக்கவே அறியாத நிலையில் தற்குறிகளாக, பகுத்தறிவென்பதே இன்னதென்றறியாத பாமர மக்களாக ஏராளமான பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குப் படிப்பில்லை என்பது மாத்திரமல்லாமல், பிடிவாத மூடநம்பிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மற்றபடி மக்கள், ஒழுக்கமென்பது மதம், அரசியல் காரணங்களால் ஒழுக்கத்தைப் பற்றிய கவலையே யில்லாமல் எந்தக் காரணத்தைக் கொண்டாவது பதவி பெற வேண்டும் என்பதையும், வயிறு வளர்க்க வேண்டுமென்பதையும், மூச்சாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மக்களுக்கு, வயிறு வளர்ப்பது, காசு சம்பாதிப்பது தான் ஜனநாயகம் என்பது கொள்கையாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட இவர்களிடையில் சமதர்மம் என்றால், அரசாங்கமும், மக்களும் சிறிதும் சுயநலமில்லாமல் எல்லாத்துறையிலும், எல்லா மக்ளுக்கு மொத்த சமநலம் ஏற்பட உழைக்க வேண்டியது என்கிற குணம் எப்படி ஏற்படமுடியம்?

ஒரே மனிதன் வைத்தியனாகவும், புரோகி-தனாகவும் இருக்க நேர்ந்தால் அவனுக்கு வியாதியஸ்தனைப் பிழைக்கவைப்பதைவிடச் சாகடிப்பதில் தானே ஆசையிருக்கும்? ஏனென்-றால், வியாதியஸ்தன் செத்தால் பசு தானம், கருமம், கருமாதி காரியம், திதி, திவசம் முதலாகிய காரியங்களில் செத்த விநாடி முதல் நீண்ட நாட்கள் வரை பயனடைய முடியும்.
வியாதியஸ்தன் குணம் பெற்றால் வைத்தியனுக்கு, வியாதி குணமாகித் தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது கொடுக்கப்படும் இரண்டு ரூபாயோ; நான்கு ரூபாயோ வரும்படியோடு விஷயம் முடிவு பெற்றுவிடும்.

ஆதலால், பதவி வேட்டைக்காரர்களும், பண வேட்டைக்காரர்களும், ஒரு நாளும் சம தர்மத்தை விரும்பமாட்டார்கள்.

மக்களைச் சமதர்மத்துக்குப் பக்குவப்-படுத்தும் பணிபற்றிச் சிந்திக்கத் தக்கதாகும் என்பது என் கருத்தானாலும், அதுவும் அவசரமான காரியமென்றே சொல்லுவேன்.

மூடநம்பிக்கை என்பவைகளில் முக்கியமானவை மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்-கையும் முதன்மையான வையாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு மனிதன் சிவனையோ, விஷ்ணுவையோ, இராமனையோ, கிருஷ்ணனையோ, கந்தனையோ, சுப்பனையோ இருப்பதாகவும், அவர்களைக் கடவுளர்களாகவும் நம்பிக்கொண்டு சாம்பலையோ, மண்ணையோ நெற்றியில் பட்டையடித்துக் கொள்வதன் மூலம் பக்தி செலுத்திக் கொண்டு, நான் சமதர்மவாதி என்று சொல்லுவா-னேயானால் அவன் உண்மையான, யோக்கிய-மான சமதர்மவாதியாக இருக்க முடியுமா? கொள்ள முடியுமா? முடியும் என்று கருது-கிறர்கள் அறிவாளிகளாக இருக்க முடியுமா?

ஒரு மனிதன்-முதலாவதாகத் தனது நெற்றியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் படியான அறிவில்லாத ஒரு மனிதன்-எப்படிச் சமதர்மத்திற்கேற்ற அறிவுடைய வனாகக் கருதப்பட முடியும்? அறிவின்மை என்பதைக் காட்டுவது-தானே நெற்றிக்குறி? நெற்றிக்குறியென்றால் மூளைக்குறி என்று தானே பொருள்?

நான் நெற்றிக்குறி என்று சொல்லுவதில் குறி மாத்திரமல்ல; அவற்றுள் அடங்கியிருக்கும் தத்துவங்களையே குறிகொண்டு சொல்லுகிறேன். அதாவது, மத சம்பந்தமான முட்டாள்-தனம், மூட நம்பிக்கைகள் யாவற்றையும் கசக்கிப் பிழிந்து, காய்ச்சிச் சுண்ட வைத்து இறக்கிய சத்துதான் நெற்றிக்குறி! அதற்கு வேறு பொருள் என்ன சொல்ல முடியும்?
சமதர்மம் பேசும் காங்கிரசுக்காரர்களோ, மற்ற கட்சிக்காரர்களோ, மதக் கருத்தென்ன? நெற்றிக்குறிக் கருத்தென்ன? என்பதைச் சிந்திக்கிறார்களா?

நான் ஒரு உண்மைச் சமதர்மவாதியென்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் கழகத்-தாரும், என்னை உண்மையாய்ப் பின்பற்றுகிறவருங்கூட சமதர்மப் போக்குக்காரர்கள் என்றே சொல்லுவேன். எங்கள் எல்லோருடைய நெற்றியும் சுத்தமாக இருக்கும்.
ஆகவே, உண்மையான சமதர்மவாதிகள் தன்னை-தன் அறிவை, தன் நெற்றியைச் சுத்தப்-படுத்திக்கொள்ள வேண்டும்.


-----------தந்தைபெரியார்- "விடுதலை" தலையங்கம்-15.12.1969

No comments: