Monday, February 25, 2008

எனக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது.

கேள்வி: தங்களைப் போல் 95 வயது வரையிலும்
வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில்: எப்போதும் ஆக்டிவ்வாக (சுறுசுறுப்பாக)
இருக்க வேண்டும்.

கேள்வி: இந்த வயதிலும் தாங்கள் பல மைல்கள்
சுற்றுப்பயணம் செய்கிறீர்களே, உடல் நலம்
பாதிக்காதா?

பதில்: வயதிற்கும், இதற்கும் எந்த வித சம்பந்தமும்
இல்லை. என்னைப் பொறுத்த வரை சும்மா
இருக்கப் பிடிக்காது. சுற்றுப்பயணம்
செய்தால் தான் நன்றாக இருக்கிறது.

கேள்வி: எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

பதில்: சாதாரணமாக இரவு 8, 9 மணிக்குத் தூங்கி
விடுவேன். பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள்
இருந்தால் இரவு 11 மணிக்கு 12 மணிக்குமேல்
தூங்குவேன். எப்படியும் 8 மணி நேரம்
தூங்கிவிடுவேன்.

கேள்வி: தங்கள் உணவு பழக்கம் என்னென்ன?

பதில்: எப்பொழுதும் காலை 6 மணிக்கு எழுந்து
விடுவேன். 8 மணிக்கு 2 இட்டிலி ஒரு
வாழைப்பழம் சாப்பிடுவேன்.
(முன்பெல்லாம் 4, 3 வாழைப் பழங்கள் சாப்பிட
முடிந்தது) அதன் பிறகு பார்வையாளர்களைச்
சந்திப்பேன். இடையிடையே சிறிது காப்பி,
பால், அருந்துவேன். மதியம் 12, 1 மணிக்குள்
ஒரு கரண்டி சாதம் சிறிதளவு மாமிசம்,
தயிர், குருமா, ஒரு வாழைப்பழம்
இதுதான் ஆகாரம், மாமிசம்
சாப்பிடாவிட்டால் அவ்வளவு திருப்திகரமாக
இருக்காது.

கேள்வி: மாமிசம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி
பாதிக்கப்படவில்லையா?

பதில்: என்னைப் பொறுத்த வரை மற்ற உணவு
பதார்த்தங்கள் விட மாமிசம் சாப்பிட்டால்
ஜீரணமாகி விடுகிறது. அதனால் எந்தவித
தொந்திரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால்
தான் தொந்தரவு. இரவு 7 மணியிலிருந்து
8 மணிக்குள் 2 இட்லி, ஒரு வாழைப்பழம்,
ஒரு டம்ளர் பால், அத்துடன் சரி.
காப்பியும் பாலும் தான் முக்கிய உணவு

கேள்வி: பொதுக் கூட்டங்கள், மற்ற நிகழ்ச்சிகள் உள்ள
நாட்களில் என்ன செய்வீர்கள்?
பதில்: பொதுக் கூட்டங்கள், இரவு 10, 11 மணிக்கு
முடிந்ததும் அதன் பின்புதான் சாப்பிடுவேன்.

கேள்வி: ஒரு நாள் பொழுதை எப்படி கழிக்கிறீர்கள்?
பதில்: முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் படிப்பேன்;
எழுதுவேன்.
ஆனால் இப்போது படிக்க கஷ்டமாக இருக்கிறது.
எழுதுவதற்கு சலிப்பாக இருக்கிறது.
அத்துடன் முன்பு மாதிரி மூளை தெளிவாக
இல்லை கஷ்டப்பட்டு சிந்திக்க வேண்டியிருக்கிறது.
முன்பெல்லாம் ஒன்றைப்பற்றி தொடர்ச்சியாக
வரும், ஆனால் இப்பொழுது நினைவாற்றல்
குறைந்து வருகிறது.

கேள்வி: மது அருந்தும் பழக்கம் பற்றித் தங்கள் கருத்து
என்ன?

பதில்: இது நாள் வரை நான்மதுவை அருந்தியதே
இல்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை
பலருக்கு வாங்கிக்கொடுத்து இருக்கிறேன்.
மது அருந்துவதால் கெடுதில்லை.
அளவுக்கு மேல் போனால் தான் எதுவும்
கெடுதலே தவிர, அளவோடு இருந்தால்
எந்த வித கெடுதலும் இல்லை.

கேள்வி: முன்பெல்லாம் மாலை நேரங்களில் கார் மூலம்
உலாவப் போவீர்களே, இப்போது போவதுண்டா?

பதில்: என்றைக்காவது ஒரு நாள் போவேன்.
முன்பு போல் இப்போது போக முடிவதில்லை.
பொழுது போகவே கஷ்டமாகத்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட சமயங்களில் போவதுண்டு.

கேள்வி: கிளர்ச்சி, போராட்டம் நடத்த வேண்டும்
என்கிறீர்களே அது எப்படியிருக்கும்?

பதில்: என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம்,
ஆனால், நான் எதிலும் நேரடியாகவே
ஈடுபட நினைக்கிறேன். நான் என்ன
சொல்லுகிறேனோ, அதை நானே முன்னின்று
செய்தால் தான் நன்றாக இருக்கும். ஒதுங்கிக்
கொள்வது என்பது எனக்கு பிடிக்காது.

கேள்வி: ஒரு குறிப்பிட்ட இனத்தார் மீது தங்களுக்கு
வெறுப்பு ஏற்பட காரணம், தாங்கள் அரசியலில்
ஈடுபட்ட சமயத்தில் முதன் முதலாக ஒரு விருந்தில்
தாங்கள் அலட்சியமாக நடத்தப்பட்டது
என்று தான் சொல்லப்படுகிறது.

பதில்:
எனக்கு யார் மீதும் வெறுப்பு கிடையாது.
நான் எதையும் லட்சியம் செய்யாமல் முரட்டுத்
தனமாக யதேச்சையாகத் திரிந்தவன்.
அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட
அனுபவங்களும் சமுதாயத்தில் இருந்த
மூடப்பழக்க வழக்கங்களும் தான் காரணமே
தவிர, வேறு காரணம் எதுவுமில்லை. ஆனால்,
அந்தக்காலத்தில் விருந்துகளில் கூட
நம்மை மிக இழிவாகவும், தரக்குறைவாகவும்
நடத்தி ஒதுக்கியே வந்தார்கள்.

-----தந்தைபெரியார் -"மாலைமுரசு" நாளிதழுக்கு அளித்த பேட்டி-16.9.1973

No comments: