Thursday, April 17, 2008

அம்பேத்கர் மார்க்ஸியத்திற்கு எதிரானவரா?

அம்பேத்கர் மேல் எப்போது ஈடுபாடு வந்தது? அம்பேத்கரை முழுமையாய் படித்தல் - பவுத்தம் பற்றி....?

அம்பேத்கர் அரசியல் சட்டம் எழுதினார் என்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படிச்சுக்கிட்டு இருக்கோம். தலித் தலைவர்கள்ன்னு சொல்லிக்கிட்டு அம்பேத்கரை ஏமாற்றுகிறார்கள். அதிலிருந்துதான் அம்பேத்கரை முழுமையாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அம்பேத்கரை பொருத்தவரையில் போதுமான ethics அதாவது அறம் தொடர்பான விஷயங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள்?மார்க்சீய அணியில போதுமான ethics இல்லாம இருக்குதுல்ல. அதைத்தான் அம்பேத்கர் “மார்க்சியர்கள் புத்தரைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார். சோவியத் யூனியன் போன்று மற்ற இடங்களில் பெற்ற அனுபவங்களிலிருந்து அவர் இதைச் சொல்கிறார். சமூகவியல் என்பதில் தனி மனித வாழ்வியலும் சேர்ந்திருக்க வேண்டும் அல்லவா?

அம்பேத்கரைப் பற்றிய விமர்சனம் குறிப்பாக மார்க்ஸியத்திற்கு எதிரான கருத்துக்கள் பற்றி...?

இரத்தினம்: அம்பேத்கர் பற்றி சில விமர்சனங்கள் உண்டு. சில இடங்களில் மார்க்ஸை கடுமையாக சாடுகிறார். மார்க்ஸியம் ஒழிந்து விட்டது என்கிறார். டாங்கே போன்ற பார்ப்பனர்கள் பண்ற சேட்டைகளால் ஏற்பட்ட விரக்தியில் அவ்வாறு கூறுகிறார். கம்யூனிஸ்டுகளை விரட்டுவோம் என்று கூட எழுதுகிறார். அவர் சொல்வது போலி கம்யூனிஸ்டுகளை விரட்டுவோம் என்று. அது கொஞ்சம் emotional. அதையே நீங்க focus பண்ணினா வேற மாதிரி ஆகிவிடும். நாய் செத்ததுக்கு வருத்தப்பட்டு 1 மாதம் வீட்டை விட்டு வெளியே வரல. பையன் ஒருத்தன் இறந்ததற்கு அம்பேத்கர் மிகவும் பாதிக்கப்பட்டு 2, 3 மாதம் சாமியார் மாதிரியே ஆகிவிடுகிறார்.

காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் ஒரு similarity இருக்குது. அம்பேத்கரோட செகட்டரியின் பதிவுல, செகட்டரி கிளம்புற நேரத்துல இரவு 9 மணிக்கு படிச்சுக்கிட்டு இருப்பாராம். காலையிலே 8 மணிக்கு திரும்பி வந்தால் இன்னும் வீட்டுக்கு போகலயான்னு கேட்பாராம். நான் வீட்டுக்கு போய் தூங்கிட்டு வர்றேன்னு சொன்னபிறகு, அடடா இந்த புத்தகத்தை படிச்சி முடிச்சிரலாமுன்னு இருந்தேன். படிச்சிக் கிட்டே இருக்கிறேன். அப்படியிம்பாராம். அவ்வளவு ஈடுபாட்டோட இருந்தார். பாலி மொழி படிச்சார். சமஸ்கிருதத்தைப் படிச்சு ஆரியத்தை அம்பலமாக்கினார். ஆரிய ஒழுக்கக்கேடுகளை, சோமபானம், சுராபானம் அருந்தி பெண்கள் யாகங்களில் குதிரைகளைப் புணர்வார்கள் என்பதை அவங்க நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். வீணாய் போன கும்பல்னு அவங்கக்கிட்டேயிருந்து எடுத்து காட்டுகிறார். யாரும் அம்பேத்கர் பொய் சொல்லிட்டாருன்னு சொல்ல முடியாது.

அம்பேத்கரை படித்த அளவுக்கு பெரியாரை படித்தது உண்டா?

பெரியாரை படிச்சுகிட்டு இருக்கேன். ஆனா அம்பேத்கர் கொடுமைகளை நேரடியாக அனுபவிச்சவர். இந்து மதத்தை விட்டு வெளியேறணும் என்றால் இஸ்லாத்துக்குப் போங்கள் என்கிறார் பெரியார். அம்பேத்கர் ஆழமாக ஆய்வு பண்ணிதான் பவுத்தத்திற்கு செல்லும் முடிவை எடுக்கிறார்.

அம்பேத்கரிடம் மார்க்ஸியத்தின் மீது emotional ஆன ஒரு வெறுப்பு இருந்ததைப் போல இஸ்லாம் மீது இருந்ததாகப் படுகிறதே...?

இஸ்லாம் மீது அம்பேத்கர் வைக்கும் குற்றச்சாட்டு பெண்களை நடத்தும் விதந்தான். படையெடுப்புகளில் புத்த பிக்குகளும் கொலை செய்யப்பட்டார்கள். இஸ்லாம் உருவ வழிபாட்டை மறுக்கிறது. இருப்பினும் அம்பேத்கர் பார்ப்பனியத்தைச் சாடுவது மாதிரி இஸ்லாத்தைச் சாடவில்லை. பார்ப்பனீயந்தான் பவுத்தத்தை ஒழித்தது என்கிறார்.

அம்பேத்கர் இஸ்லாத்தில் சேராததன் காரணம்...?

ஒன்று இஸ்லாத்தில் இறை நம்பிக்கை இருக்கிறது. மற்றொன்று பெண்களை சமமானவர்களாகப் பார்க்க மறுக்கிறார்கள். பௌத்தத்தில் இவையிரண்டும் இல்லை. புத்த மதத்தை உருவாக்கியவர்களே பார்ப்பனர்கள் தான். இருந்தாலும், அப்ப இருந்த நிலையிலேயே மதத்திற்கு போகாமல் இயக்கமாக்கியிருக்க வேண்டும். அது தப்பா தெரியுது. கடவுள் இல்லாத மதம் ஒன்னு தேவைங்கிறார். புத்தர் அப்படிச் சொன்னார்ங்கிற மாதிரி கொண்டு வர்றார். ஆனால் புத்தர் ஒழுக்கமே தம்மம், தம்மமே ஒழுக்கம் என்றார். சமூகத்திற்கு வழி நடத்தக்கூடிய சமூகவியல் அடிப்படைத் தேவை என்பதே புத்தரின் பார்வை, மதமல்ல. கடவுள் இல்லை, மறுபிறப்பு இல்லை, உயிர் என்று எதுவும் இல்லை என்பதே புத்தரின் கருத்து.

பவுத்தத்தில் திருத்தங்கள் செய்து விட்டதாக அம்பேத்கர் மீது விமர்சனங்கள் கூட உண்டு.

புத்தர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். மதம் ஆதிக்கங்கள் உருவாக்கியது; பகுத்தறிவுக்கு எதிரான சதி என்பதே அவர் பார்வை. அதனால்தான் பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், அவரது தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள், அவரது இடுப்புப் பகுதியிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள், பிரம்மனின் பாதத்திலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்ற கட்டுக் கதைகளை உடைத்து மக்களைத் தெளிவாக்கினார்.

ஒரு millitant புத்தரை கட்டமைக்க வேண்டுமென்று நீங்கள் அடிக்கடி பேசுகிறீர்கள். புத்தருக்கு அறம் தானே முக்கிய பலம்?

அப்ப இருக்கிற சூழல்ல அவர் அரசக்குடும்பத்திலிருந்து பிரிந்து தனியே வருவதை சங்கக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கிறார். அடுத்த அரசை தாக்க வேண்டுமென்றும் மற்றவர்கள் சங்கத்தில் முடிவு செய்கிறார்கள். அப்ப அவர்கிட்ட தளர்வற்ற போக்கு இருக்கு. அதை அறிவு ரீதியான போர்க்குணம் என்றே நினைக்கிறேன்.

அறிவு ரீதியான millitant. ஒரு நல்ல புதிய விளக்கமாக உள்ளது.

அதனால்தான் சொல்கிறார். ஒவ்வொரு புத்த பிக்குக்கும் சமூகக் கடமை இருக்கிறது. தீமையை ஒழிப்பதற்கு ஆயுதம் எடுக்க வேண்டுமானால் தயங்கக் கூடாதுங்கிறார். அப்படி இருக்கிற சூழல்ல ரொம்ப millitancy ல இருந்தா regulate பண்ணமுடியாது.

புத்த கயாவில் கொஞ்ச நாட்கள் இருக்கப் போறேன்னு சொன்னதாக நினைவு...?

இல்லை நாக்பூர். நாக்பூர்ல அம்பேத்கர் இயக்கம் செயல்பட்ட முறையை யாரும் சரியாக வெளிக்கொண்டு வரவில்லை. ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் பவுத்த குடும்பங்கள் கூடுகிறார்கள். அந்த உறவு முறை பரவலாக இருக்கு. பவுர்ணமி வெளிச்சம் மக்கள் கூடுவதற்கு வசதியாகவும் இருக்கு. கயர்லாஞ்சி நிகழ்வுக்காக Spontaneous ஆக 10,000 பெண்கள் திரண்டார்கள். புத்தக் குடும்பங்களின் தொடர்புகள் மூலமாக ஆதிக்கம் செலுத்தும் தலித் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுகமாக இருப்பதற்காக ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் அம்பேத்கருடன் இணையாமல் காங்கிரஸில் சேர்ந்தனர்.

அவங்க எல்லாம் அம்பேத்கருடன் இணைந்து இருந்தால் மாபெரும் இயக்கமாகி இருப்பார்கள். அம்பேத்கர் இயக்க செயல்பாட்டை புரிந்து கொள்வதற்காக நாக்பூர் செல்வது குறித்து பேசியிருக்கிறேன். ஒவ்வொரு முறை தீட்சை பெற்ற நாள் வரும்போது கூப்பிடுவார்கள். சடங்குக்கு எல்லாம் நான் வரவில்லை. கும்பகோணத்துல போய் அழுக்குத் தண்ணியில மூழ்கிறாங்கல்ல அதுமாதிரி. மண்டை காய்ந்த, காலில் செருப்பு இல்லாத தலித் மக்கள் படிச்சவன் ஏதாவது செய்வான்னு நம்பி வருகிறார்கள். விடுதலைக்கான பணி நடக்கணும் என்ற ஆசையில் மக்கள் வர்றாங்க. பல வருசமாக போய்க்கிட்டு இருக்கேன்னு சொல்றது நல்லாவா இருக்கு.

இன்று பவுத்தத்தின் நிலைமை...?

பவுத்தத்தை மதமாக ஆக்கியதே பாப்பனர்கள்தான். பவுத்தம் சங்கமாக இருந்தது. பார்ப்பனர் அதை மதமாக்கினர். மொட்டையடித்து பவுத்த பிக்குவாக ஆக்கினர். உள்ளிலிருந்து அழிக்கிறது சுலபம். நான் புத்தரை விவேகானந்தர் மாதிரி கம்பீரமாக நிறுத்தனும்னு எல்லா ஓவியர்கிட்டேயும் கேட்டேன். ஓவியர் புகழேந்திக்கிட்டேயும் சொன்னேன். யாரும் வரையவில்லை. புத்தருக்கு கம்பீரமான உடல். அவரை எப்ப பார்த்தாலும் தியானத்துல இருக்கிற மாதிரி வரைந்து வைத்திருக்கிறார்கள். அவர் கொஞ்ச நேரந்தான் தியானம் பண்ணினார். மிகவும் கம்பீரமானவர். அவர் ஒரு great teacher.

இப்போது பவுத்தத்திற்கு, அதைப் பின்பற்றுபவர்கள் தடையாக இருக்கிறார்களா?

விரோதிகளாக இருக்கிறார்கள். பல வீடுகளில் தியான புத்தரை வச்சு பூசை பண்றாங்க. சென்னையில் ஒரு நண்பரிடம் விவேகானந்தர் மாதிரி புத்தரை நிறுத்தனும்ன்னு சொன்னேன். அவர் பதறிப்போய் அப்படியெல்லாம் செஞ்சிடாதிங்கய்யா. அவர் தியானமுல்ல பண்ணிக்கிட்டு இருந்தார்ன்னு சொல்றார். உங்களைவிட பவுத்தத்திற்கு துரோகி யாருமில்லைன்னு சொல்லிட்டு வந்தேன்.

---------------வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் "சஞ்சாரம்" மார்ச்- மே 2008 இதழுக்கு அளித்த நேர்காணலிலிருந்து

No comments: