Friday, April 18, 2008

பார்ப்பனுருக்கு கொடுப்பது புண்ணியமா?

உண்மையாக பார்ப்பனருக்குக் கொடுப்பது புண்ணியமானால் பார்ப்பனருக்குக் கொடுத்த குடும்பங்கள் எல்லாம் இன்று அரைக் கஞ்சிக்கு ஆவலாய் பறக்கக் காரணம் என்ன? உண்மையில் காங்கிரஸ் சுயராஜ்யமளிக்குமானால் நாட்டு மக்களுக்கு வரியும், அறியாமையும், விவகாரம் வில்லங்கங்களும், அடிமைப் போட்டியும், தரித்திரமும், தொழில் குறைவும் நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் வளரு வதற்குக் காரணம் என்ன? உதாரணமாக, தஞ்சாவூர் மகாராஜா செய்த தர்மமும் அவர்கள் அந்த ஜில்லா பார்ப்பனர் குடும்பங்களுக்கு விட்ட மானியமும், கட்டின சத்திரங்களும், அதில் சாப்பிடும் பார்ப்பனர்களின் எண்ணிக்கையையும் பார்த்தால் மகாத்மா காந்திக்கும்கூட வயிறு வேகும். அப்படிக் கொடுத்த தஞ்சாவூர் மகாராஜாவின் ராஜாங்கம் இன்று இருக்குமிடத்தைக் காணோம். சேரனும், சோழனும், பாண்டிய னும் செய்த தருமமும், கட்டிய கோவிலும், வெட்டிய ஆறுகளும், விட்ட மானியங்களும் இன்றும் பார்க்கலாம் நாளையும் பார்க்கலாம்; அவர்கள் அரசாங்கமெங்கே? சந்ததி எங்கே? இன்னும் எங்கள் குடும்பத்திலும் செய்த தர்மமும் சமாராதனையும் கொஞ்சமென்று சொல்ல முடியாது. குளிப்பும், பூஜையும், போடும் நாமமும் இன்னம் ஒரு ஐந்தாறு தலைமுறைக்கு எங்கள் பின் சந்ததியார் செய்யா விட்டாலும் தாங்கும்படி அவ்வளவு செய்திருக்கிறார்கள். என்ன ஆச்சுது? மாணிக்கம்போல் சீமைக்குப்போய் படித்துவிட்டு வந்த 22 வயதுள்ள ஒரே பையனும் மற்றும் ஒரே பெண்ணும் ட்சயரோகத்தால் முன் பின் மூன்று மாத வித்தியாசத்தில் இறந்துபோனார்கள். பார்ப்பனர்களுக்கு போளி, பேணி, லட்டு, ஜிலேபி, சேமியா பாயாசத் துடன் சமாராதனை செய்து என் தாயார் தகப்பனார் இடுப்பு கட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான எச்சிலைகளைத் தாங்களே எடுத்து எறிவார்கள். வேறு யாராவது எடுத்தால் அந்தப் புண்ணியத்தில் அவர் களுக்கும் பங்குபோய்விடுமாம். அவ்வளவு அழுத்தத்தன்மையோடு புண்ணியம் சம்பாதித்தார்கள். என்ன பலன் கண்டார்கள்? ஆயுள் வளர்ந்ததா? சந்தததி வளர்ந்ததா? செல்லம் வளர்ந்ததா? இரண்டு தங்கைகளுக்கும் உள்ள ஒரே பெண்ணுக்கு 10 வயதில் செல்வக் கலியாணம் செய்தார்கள். அது சரியாய் 60 வது நாளில் தாலி அறுத்தது. அதற்கு மறுபடியும் எங்கள் குலத்திலில்லாத வழக்கப்படி மறுவிவாகமும் செய்துவைத்தேன். மறுபடியும் 15-வது வயதில் தாலி அறுத்துவிட்டது. என்ன பாக்கியம் கிடைத்தது. இதை எல்லாம் சொன்னால் அவரவர் தலைவிதிக்கு யார் என்ன செய்வார்கள் என்று சொல்லிவிடுவார்கள். அவரவர் தலைவிதிப்படி நடக்கும் காரியத் திற்காக இந்த ஆட்களுக்கு சமாராதனை செய்வதும் சத்திரம் கோவில் கட்டுவதும் மானியம் விடுவதும்கல்விதானம் கன்னிகாதானம் பூமிதானம் செய்வதும் சக்கரவர்த்தி தலைபோட்ட தங்கப்பவுனால் பாதபூஜை அட்டோத்திரம் சஹஸ்திரோத்திரம் செய்து அவர்களது கால்கழுவி தீர்த்தம் சாப்பிடுவதும் எதற்காக என்றுதான் கேட்கிறேன்.

---------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 7.11.26

No comments: