Monday, April 21, 2008

பூனா பார்ப்பனரின் கர்மபலன்

பூனா பிராமணர்கள் பெரும்பாலும் லோகமானிய திலகர் என்றழைக்கப்படும் கடும் வர்ணாசிரமியான சிறீமான் திலகர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். மகாத்மா காங்கிரசுக்கு முந்திய காங்கிரசுகள் இப்போதைய காங்கிரசைப் போலவே பார்ப்பனக் காங்கிரசா யிருந்ததாலும் இப்போதைய 'தலைவர்கள்' சிறீமான்கள் பண்டித நேரு, பண்டித சரோஜினி, எஸ். சீனிவாசய்யங்கார்,எ.ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் இந்திய தேசத் தலைவர்களாயிருப்பது போலவே அப்போதும் சிறீமான்கள் திலகர், மாளவியா முதலிய பார்ப்பனர்களே தலைவர் களாயிருந்தார்கள். இப்போது இவர்கள் பார்ப்பனப் பத்திரிகைகளாலும் பிரசாரத்தாலும் படம் வைத்து கும்பிடத் தகுந்தவர்களாயிருந்த போதிலும், சமுதாய விஷயத்திலும் சமத்துவ விஷயத்திலும் சிறீமான் திலகர் நமது சிறீமான் எம்.கே. ஆச்சாரியாருக்கு ஒரு படி முன்னால் இருப்பவர். அப்பேர்பட்டவர் பத்திரிகை உலகத்திலும், பிரசார உலகத்திலும், அரசியல் உலகத்திலும் சிரேஷ்ட்டமாய் விளங்கி செல்வாக்கோடு வாழ்ந்த ஊராகிய பூனா நகரத்தில் பார்ப்பனாதிக்கம் எவ்வளவு வளர்ந்திருக்கும், எவ்வளவு குடி கொண்டிருக்கும் என்பது நாம் சொல்லாமலே விளங்கும்.

அதின் பலனாய் அவ்வூரில் உள்ள பார்ப்பனரல்லாதார் தீண்டப்படாதாரைப் போல் கருதப்படுவதுடன் தண்ணீர்க் குழாய் முதற்கொண்டு பார்ப்பனருக்கு தனித்தனியாய் ஏற்பட்டு வந்ததும், பார்ப்பனரல்லாதார் பார்ப்பனப் புரோகிதரைக் கொண்டே வைதீகச் சடங்குகள் நடத்த வேண்டும் என்கிற சட்டமிருக்கிறதுமான கொடுமைகள் நடத்த செளகரிய மேற்பட்டிருந்தது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதின் பலனாய் அவ்விடத்திய பார்ப்பனரல்லாதார் தங்கள் சுயமரியாதையை உணர ஆரம்பித்தார்கள். ஆரம்பித்து அவர்கள் மனோபாவம் எதுவரை சென்றது என்று தெரிய வேண்டுமானால் சென்ற வருஷம் மத்திய மாகாணத்தில் நடந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டு அக்கிராசனர் சிறீமான் பாக்தே அவர்களின் சொற்பொழிவையும் அங்கு நடந்த திருவிளையாடல் களையும் கவனித்தால் தெரியவரும். அதாவது, கொட்டகையில் கட்டியிருந்த திலகர் படத்தை எடுத்து எறிந்தும், சிறீமான் திலகரைப் பற்றி அக்கிராசனர் பேசும் போது அவரைக் கண்டித்ததும், பிராமணர்களை அடியோடு ஒழித்தால் அல்லது சுயராஜ்யம் வராது என்று சொன்னதும், சில பார்ப்பனரையும் அவர்களுக்கு அனுகூல மாயிருந்தவர்களையும் தடியினால் அடித்தும், கத்தியில் குத்தியும் உபத்திரவப்படுத்தியதும் ஆகிய இன்னும் பல காரியங்கள் நிகழ்ந்தன. அல்லாமலும் அது புகைந்து கொண்டே இருந்து இப்போது தெருவில் நடக்கும் பார்ப்பனப் பெண்களைக் கூட உபத்திரவப்படுத்துவதாகவும் தெரியவருகிறது. இவைகளை நாம் பலமாய் வெறுக்கிறோமானாலும் இதைக் கர்மபலன் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காக பூனா பார்ப்பனர்கள் சிவாஜி மந்திரத்தில் ஆறாயிரம் பேர் கூடி பார்ப்பனரல்லாதார் பார்ப்பனரிடம் துவேஷம் கொண்டிருப்பதையும், பார்ப்பன ஸ்திரீகளை பார்ப்பனரல்லாதார் அவமதிப்பாய்ப் பேசுவதையும், மானபங்கப்படுத்துவதையும் ஒரு வருஷ காலமாக நடந்து வருவதை கவர்ன்மெண்டார் பார்த்துக் கொண்டு தெரியாதவர்கள் போல் இருப்பதாயும் கூறி பார்ப்பனர் மீது துவேஷம் உண்டாகும்படி பார்ப்பனரல்லாதார் பிரசுரிக்கும் துண்டுப் பிரசுரங்களை நிறுத்த கவர்ன்மெண்டார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் பேசி, சிறீமான் திலகரின் மருமகப் பிள்ளையாகிய சிறீமான் கெல்கர் உள்பட கண்டனத் தீர்மானங்கள் செய்து கவர்ன்மெண்டை உதவிக்கழைத்திருப்பதாய் 31.8.26 æ மித்திரனால் தெரிகிறது. இதில் கவர்ன்மெண்டார் என்ன செய்யக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனரின் நடவடிக்கையை உள்ளபடி எடுத்துச் சொன்னால் யார் என்ன செய்ய முடியும்? இந்தப் பார்ப்பனர்கள் சர்க்காரை சகாயத்திற்கு கூப்பிடுவதைவிட ஏன் தங்களுடைய நடவடிக்கைகளை திருத்திக் கொள்ளக்கூடாது. ஒரு மனிதன் தனது கரும பலனை அடையாமல் இருக்கும்படி செய்ய கடவுளாலும் ஆகாதென்றால் இந்த சர்க்காரால் என்ன ஆய்விடும்? ஆதலால் இவைகளைப் பற்றி சிபார்சுக்கு ஆள்களைக் கூப்பிடுவதில் பிரயோஜனமில்லை.

பார்ப்பனர் புத்திசாலிகளாயிருந்தால் பூனா பார்ப்பனருக்கும் பார்ப்பன ஸ்திரீகளுக்கும் ஏற்பட்ட இந்த வியாதிக்குத் தக்க பிராயச்சித்தம் செய்து மற்ற நாடுகளுக்குப் பரவாமல் பந்தோபஸ்து செய்வதுதான் ஒருக்கால் முடியக்கூடிய காரியமாகலாம். அஃதில் லாமல் சிறீமான்கள் ரெங்கசாமி அய்யங்காரும், சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்களும் எம்.கே.ஆச்சாரியாரும் சீனிவாசய்யங்காரும் சி.ராஜ கோபாலாச்சாரியாரும், சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும் நடந்து கொள்ளுகிற மாதிரியும், பார்ப்பனரல்லாதாருக்குள்ளாகவே கட்சி ஏற்படுத்துவதும், பார்ப்பனரல்லாதார் கட்சியை அழிக்க சூழ்ச்சி செய்வதும் ஆகிய தந்திரங்கள் கண்டிப்பாய் பார்ப்பன சமூகத்தையே கர்மபலனை அடையச் செய்யுமென்று உறுதி கூறுகிறோம். இந்த பார்ப்பனத் தலைவர்கள் தங்களிடம் கூலி வாங்கிப் பிழைக்கும் ஆள்களுடையவும் தங்கள் தயவுக்குக் காத்திருக்கும் ஆள்களுடையவும் மனோபாவத்தை மாத்திரம் அறிந்திருக்கிறார்களே அல்லாமல் மற்றபடி சுதந்திரமுள்ள பார்ப்பனரல்லாதார் மனோபாவம் என்ன என்பதையே அறியாமலிருப்பதற்கு நாம் மிகவும் பரிதாபப்படுகிறோம்.


------------- தந்தைபெரியார் - "குடி அரசு" 5.9.26

No comments: