Friday, November 21, 2008

என் கையில் இருப்பது எழுதுகோல்! -தர்ப்பைப்புல் அல்ல! கலைவாணர் என்.எஸ்.கே. பதிலடி



கலைவாணர் - சீரிய பகுத்தறிவாளர்

அண்ணா அவர்களையும், பெரியாரையும் கவர்ந்த அந்த அற்புதமான நடிப்புத்தான் என்னே!

மாணிக்கவாசகர் எனும் படத்தில் அரண்மனை நிர்வாகியாகக் கலைவாணர் நடிக்கிறார். அவருக்கும் அரசருடைய குடும்பப் புரோகிதருக்கும் தகராறு ஏற்படுகிறது.

புரோகிதர் அரச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், நிர்வாகிக்கு உரிய மரியாதை கொடுக்க மறுத்து அவரை மிரட்டுகிறார். அதற்குச் சற்றும் பணியாத நிர்வாகி (கலைவாணர்) தம் நிர்வாக உடையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, மேசை முன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.

நிர்வாகி (கலைவாணர்) கால் மேல் கால் போட்டபடியே புரோகிதரைக் கீழும் மேலும் அலட்சியமாக முறைத்துப் பார்த்த வண்ணம் தலையை ஆட்டிக் கொண்டே என் கையில் இருக்கும் இது என்ன தெரியுமா? எழுதுகோல்! நினைவிருக்கட்டும். தருப்பைப்புல் அல்ல! தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு; ஜாக்கிரதை! என்று சொல்கிறார். இதுதான் மாணிக் கவாசகர் படத்தில் கலைவாணருக்குப் பாராட்டும் பெருமையும் பெற்றுக் கொடுத்த வசனமும் நடிப்பும். பெரியாரின் பழக்கம் ஏற்படக் காரணமாய் இருந்தவை.

***********************************************

கலைவாணரின் கலை உலகப் புகழை விண்முட்ட உயர்த்திய படம் சகுந்தலா. இந்தப் படத் தில் கலைவாணர் மீனவராக நடிக்கிறார். கதாநாயகி சகுந்தலை ஆற்றில் தவறவிட்ட மோதிரத்தை மீன் ஒன்று விழுங்கிவிடுகிறது. அடுத்த நாள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் அம்மீன் அகப்படுகிறது. மீனை அறுத்துப் பார்க்க மோதிரம் கிடைக்கிறது. மோதிரத்தை அரசனிடம் கொண்டு கொடுக்கிறார் மீனவர். இந்தப் படத்தில் கலைவாணர் மீனவராக நடித்த காட்சியும், பாடலும் நாட்டு மக்கள் அனை வரையும் கவர்ந்துவிட்டன. கலைவாணர் மீனவர் உருவத்தில் இருந்தபடி பானை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, பானை மீது தட்டி தாளம் போட்டவாறு பாடுகிறார்: காலையிலே எழுந்திருச்சி கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படுறேனே கடவுளே - நான் கஷ்டப் படுறேனே கடவுளே என்பதுதான் அந்தப் பாட்டின் பல்லவி. இவரது அந்தப் பாட்டிலும் நடிப்பிலும் அன்று மயங்காதவர்களே இல்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு அற்புதமாக அமைந்திருந்தது.

*******************************************

கலைவாணர் பிறந்த நாஞ்சில் நாட்டை உள்ளடக்கிய திருவிதாங்கூர் ராச்சியத்தை ஆண்டு வந்தவர் சித்திரைத் திருநாள் மகாராசா ஆவார். இவரும், அரச குடும்பத்தாரும் கலை வாணரின் மேலான ரசிகர்கள். கலைவாணர் நடித்த படங்களை அரண்மனையில் திரை யிட்டுப் பார்த்து மகிழ்வர்.

கலைவாணரின் சகுந்தலா படத்தைப் பார்த்த பிறகு சித்திரை மன்னருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. கலைவாணரை நேரில் பார்க்க வேண்டும். அவரைப் பாராட்ட வேண்டும். அவருக்குப் பரிசளிக்க வேண்டும் என்று எண்ணினார்.

சென்னைக்கு வந்தார். அப் போது சென்னையில் கலைவாணரும் மதுரமும் நியூடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். மன்னர் சித்திரைத் திருநாள் அங்கு சென்று அவர்களைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டார். மன்னரின் விருப்பப்படி மன்னர் நடுவில் அமர கலைவாணரும் மதுரமும் மன்னரின் இரு பக்கங்களிலும் அமர போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

மன்னாதி மன்னர்களும் மதிக்க, முடிசூடா மன்னராகப் பெருவாழ்வு வாழ்ந்த பெருமைக்கு உரியவர் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள்.

****************************************

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள் அவருடையவை. வாரி வாரி வழங்கிய வள்ளல் என வாழ்ந்த அவருடைய கைகள் நீண்டவைகளும்கூட.

அவர் அருள் உள்ளம் கொண்டவர். மனிதநேயம் மிக்கவர் என்பதற்கு இரண்டொரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

ஒரு நாள் அவரது வீட்டின் முன்புள்ள தெருவில் வெந்து அவிக்கும் வெயிலில், கையில் உண்டியலை ஏந்தியவாறு கோவிந்தா! கோவிந்தா! என்று கூறிக் கொண்டே தரையில் உருண்டு கொண்டிருந்தான் ஒரு கோவிந்தன்.

கலைவாணர் அவனைக் கூப்பிட்டு, இப்படி உருண்டு உடலைக் கெடுத்துக் கொள்கிறாயே உனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும்? என்று கேட்டார். அய்ந்து ரூபாய் கிடைக்கும் என்றான். அந்தக் காலத்தில் ரூபாய் அய்ம்பதைக் கொடுத்து இந்தத் தெருவிலாவது உருளாமல் போ. வேறு வேலை செய்து பிழைத்துக் கொள் என்றார்.


*************************************************

அவருடைய சிலை திறப்பு விழா நடக்கின்ற இந்த நேரத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய என் போன்றோர்க்கு ஆயிரத் தெட்டு எண்ணங்கள், நெஞ்சத்திலே அலைமோதத்தான் செய்யும். அவைகளையெல்லாம் எடுத்து விளக்கிக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. என்னுடைய உடல்நிலை அதற்குத் தகுந்ததாகவும் இல்லை. ஆனால் நெஞ்சத்திலே எண்ணி, எண்ணி இன்றல்ல என்றென்றும், நாம் மட்டும் அல்ல; நாட்டு மக்கள் அனைவரும் போற்றிப் பாராட்டத்தக்க தலைசிறந்த தமிழ்மகனாக வாழ்ந்தவர் நம்முடைய கலைவாணர் அவர்கள். அவருடைய சிலையினை உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலக் குழுவினர் அமைத்துக் கொடுத்திருப்பது மற்றொரு பொருத்தமானதாகும். அவர்கள் உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஒரு ஊர்வலத்தின் மூலம் சிறந்த மதிப்பினைத் தேடிக் கொடுத்தார்கள்.

அதைப் போலவே அவர்கள் ஏற்றுக் கொண்ட இந்தச் சிலையமைப்பின் காரியத்தின் மூலமும் அவர்கள் கலைத் துறைக்கு நிரந்தரமான ஒரு தொண்டினை நிறைவேற்றிக் கொடுத்திருக் கின்றார்கள். அந்தக் குழுவினருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றுபோல் என்றென்றும் கலை உலகத்திலே உள்ளவர்கள், கலையுலகத்தாலே பயன் பெற்ற வர்கள், சீர்திருத்த உலகத்திலுள்ளவர்கள். சமூகத்தின் தொண்டர்கள் அனைவரும் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களைப் போற்றுவார்களென்பதில் எனக்கு ஒரு துளி அய்யப்படும் இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டு, அவருடைய சிலையினை மகிழ்ச்சியாடும் பெருமிதத்தோடும் திறந்து வைக்கிறேன் என்று அறிஞர் அண்ணா பேசினார்.

****************************************


ரஷ்யா சென்று வந்த கலைவாணர் கூறிய செய்திகள்:

நான் நல்லதம்பி என்ற சினிமா படத்தின் மூலம் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தேன். ஆனால் அதற்காக நம் அரசாங்கத்திடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதம் கூட வரவில்லை. இதை எண்ணிப் பார்க்கும்போது வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

மேலும் நான் ரஷ்யா சென்று திரும்பியது குறித்து நம் அரசாங்கமும் காங்கிரசு நிறுவனமும் கவனிக்கவே இல்லை. ஒரு காங்கிரஸ்காரர் கூட என்னை விசாரிக்கவில்லை. இவர்கள் வெளிநாடு செல்லும் நம்நாட்டுக் கலைஞன் ஒருவனை வழியனுப்பவுமில்லை என்பதையும், அவன் திரும்பி வரும்போது வரவேற்கவுமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்கையில் நான் வெட்கித் தலை குனிய வேண்டியதாகின்றது.


--------------------நன்றி: "விடுதலை" 21-11-2008

Saturday, October 04, 2008

ஈழ நாட்டிலே பத்து பார்ப்பனக் குடும்பம் தாக்கப்பட்டு இருந்தால்!!

ஈழத்தமிழர் பிரச்சினையும் சுருதி பேதமும்!

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது நீண்ட காலமாக இருந்து வந்தாலும் 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு அது உக்கிரம் அடைந்திருக்கிறது. அந்த நாட்டுக்குரிய மக்களான தமிழர்களை - எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்தத் தீவு முழுக்க முழுக்க சிங்களவர்களுக்கே சொந்தம் என்கிற பாசிச வெறியில் தமிழர்களை முற்றாக ஒழித்துக் கட்டியே தீருவது என்கிற தீப்பந்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டனர்.

இதன் காரணமாக அத்தீவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாழ்பட்டுப் போனாலும், அதுபற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் அத்தீவில் சொந்த மண்ணில் வாழக்கூடிய இன்னொரு குறிப்பிடத்தக்க இனத்தைப் பூண்டோடு அழித்து முடிப்பதற்காக, இராணுவத்துக்குப் பெரும் நிதியைச் செலவு செய்து, ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது அந்த நாடு.

ஒரு பேரினவாத அரசின் முழுத் தாக்குதல்களுக்கும் ஈடு கொடுத்து அங்கு வாழும் தமிழர்களைப் பாதுகாக்கும் பெரும் பணியில் விடுதலைப்புலிகள் அமைப்பு உயிரைத் துச்சமாக மதித்து களத்தில் நின்று கொண்டிருக்கிறது. அதைக்கூட கொச்சைப்படுத்தும் மகானுபவர்கள் பத்திரிகைகள், எழுத்தாளர்களுக்குத் தமிழ் நாட்டில் பஞ்சமில்லை.

உலகத்தையே வளைத்து எழுதும் இந்தப் பார்ப்பன ஏடுகள், அய்.நா.வின் அலுவலகம் ஒன்றை கொழும்பில் தொடங்குவதற்குக் கூட தடை போடும் சிங்கள அரசின் போக்கினைப்பற்றி கண்டித்து எழுதிட அவர்களின் எழுதுகோல்கள் வேலை நிறுத்தம் செய் கின்றன.

ஈழ நாட்டிலே பத்து பார்ப்பனக் குடும்பம் தாக்கப்பட்டு இருந்தால், இந்நேரம் அய்.நா. மன்றமே அதிரும் அளவுக்கு எழுதுகோல் தேரை ஓட்டியிருப்பார்களே!

நரேந்திர மோடி என்ற நவீன நீரோ மன்னன் இனப்படு கொலைக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் சோ போன்ற பார்ப்பனர்கள், தம் இனத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தும் இடத்திற்குத் தள்ளப்பட்ட விடுதலைப்புலிகளைப் பார்த்து பலாத்காரவாதிகள் என்று பட்டம் சூட்டுவது வாயால் சிரிக்கக் கூடிய தகுதியையும் பெற்றதன்று.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் குறித்து அக்கறை கொண்ட கட்சிகள்தான் பெரும்பாலும். அவை தங்கள் தளத்தில் நின்று ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்படுவதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை தொடக்கத்தில் இந்தப் பிரச்சினையில் பார்வையைச் செலுத்தத் தவறியிருந்தாலும், அண்மைக்காலமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதே!

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் (1.10.2008), இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் சுருதி பேதம் வேண்டாம் - ஒத்த கருத்துடன் குரலை உயர்த்துவோம் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

இதுபோன்ற பொதுப் பிரச்சினைகளில் கருநாடகம், கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து கூட பாடம் கற்றுக்கொள்ள தமிழ் நாட்டுக் கட்சிகள் தவறுவது கெட்ட வாய்ப்பேயாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் - தேவையில்லாமல் தி.மு.க.வை யும், ஆட்சியையும் விமர்சனம் செய்துள்ளனர். அவரவர்களுக்கு இருக்கும் அரசியல் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள, ஒரு கட்சி அரும்பாடுபட்டு ஏற்பாடு செய்துள்ள மேடை தானா கிடைத்தது?

அப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி இருந்திருக்கவேண்டாமா? இந்தப் பிரச் சினையில் மாநில அரசுக்குக் கோரிக்கைகளை வைக்கலாம்; இந்தந்த வகையில் செயல்பட வேண்டும் என்று கூறலாம்; அதில் ஒன்றும் குற்றம் கிடையாது. ஆனால், குற்றப் பத்திரிகை படிப்பது - அக்கட்சியின் கற்பைப்பற்றி எல்லாம் ஆராய்வது தேவைதானா?

அதேநேரத்தில், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்களின் நிலையில் எந்த அளவு செய்ய முடியும் என்று ஒன்று இருக்கிறது - அதனை மறந்துவிட முடியுமா?

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் மனப்பாங்கு என்ன என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றுதானே. அதற்காக ஆட்சியையே கூட இழந்ததுண்டு. அரசியல் நோக்குக்காக எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று பேசுவது முதிர்ச்சிக்கு அடையாளமல்ல.


சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருப்பதுபோல தோன்றினாலும், அதெல்லாம் இங்கு ஒன்றும் கிடையாது; அரசியலில் பல நிலைகள் எடுத்திருந்தாலும், இந்தப் பிரச்சினையில் நாங்கள் ஒன்று திரண்டு நிற்கிறோம் என்று காட்ட முயலுவதுதான் எதிரிகளை நடுங்கச் செய்யும். இதுபற்றி ஆசாபாசமின்றி உரத்த முறையில் சிந்திப் பார்களாக!

--------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் - 4-10-2008

Saturday, September 13, 2008

நாடிஜோதிடத்தின் முறைகேடுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

நாடிஜோதிடத்தின் முறைகேடுகளை
எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு


மோசடி பற்றி தமிழாராய்ச்சி பேராசிரியர் வாக்குமூலம்

சீர்காழி, செப். 12- வைத்தீசுவரன் கோயில் பகுதியில் நாடி ஜோதி டத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ள தமிழாராய்ச்சிப் பேரா சிரியர் பரபரப்பான வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.

சீர்காழி வட்டம் திருக் கோலக்கா தெருவைச் சேர்ந்த பண்டரிநாதனின் மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த 21-9-2008 அன்று வைத்தீசுவரன் கோயிலில் உள்ள சிவசாமி நாடிஜோதிட நிலையத்துக்குச் சென்று நாடிஜோதிடம் பார்த் துள்ளார். அப்போது முன் னுக்குப் பின் முரணான சேதிகளை ஜோதிடம் கூறி யுள்ளார். திருமணமாகாத கோபாலகிருஷ்ணனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என் றும், உயிரோடு உள்ள அம் மாவை இறந்து விட்ர் என் றும், வேளாண்மைத் தொழில் செய்து வருபவரை மின் வாரியத்தில் பணிபுரிபவர் என் றும், பத்தாம் வகுப்பு படித்த வரைப் பட்டப்படிப்பு படித் துள்ளார் என்றும் கூறியுள் ளார். இதனால் ஆத்திரம டைந்த கோபாலகிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டில 35 வயதில் இறந்து போன தனது உறவினர் செங்குட்டுவனுக்கு நாடி ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அவர் 75 வயது வரை நலமோடும் வளமோடும் வாழ்வார் என ஜோதிடர் கூறியுள்ளார்.

இந்த முறைகேடுகள் குறித்து வழக்குரைஞர் சோம சுந்தரம் என்பவர் மூலம் சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோபால கிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நேற்று நடைபெற் றது. ஓலைச்சுவடிகள் பற்றி சாட்சியம் அளித்த சென்னை யைச் சேர்ந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் மகாலட்சுமி நீதி மன்றத்தில் அளித்த விளக்கமாவது:

ஓலைச்சுவடி என்பது பாடல் களை மனப்பாடம் செய்து பின்னர் அதனை ஓலைச்சுவடி களில் எழுதினர். களவியல் உரை 9 தலைமுறைகளாக மனப்பாடம் செய்த பின்னர் தான் ஓலைச்சுவடிகளில் எழு தப்பட்டது. ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டு ஏதோ ஒரு ஓலைச்சுவடியைப் படிப்பது போல் நாடிஜோதிடம் பார்க் கின்றனர். மாணிக்கவாசகர் அம்மானே என்ற இலக்கியப் புத்தகங்களை வைத்துக் கொண்டு பாடல்கள் பாடிக் கொண்டு ஜோதிடம் பார்க் கின்றனர். இவர்களே ஓலைச் சுவடிகளை உருவாக்கிக் கொள்கின்றனர். ஓலைச் சுவடி களில் எழுதும்போது ஏடு மட்டுமே நகரும். கை நகராது. நாடிஜோதிடத்தில் உள்ள ஓலைச்சுவடியில் உள்ள எழுத்து வடிவத்தைப் பற்றி ஓலைச்சுவடியை நன்கு அறிந்த வர்கள் கூடப் படிக்க இயல வில்லை. ஒரு சில எழுத்துக் களைக் கொண்டு இவர்களே திட்டமிட்டு ஓலைச்சுவடி களை உருவாக்குகின்றனர்.

இவ்வாறு பேராசிரியர் வாக்குமூலம் அளித்தார்.

நீதிபதி இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Thursday, August 28, 2008

நடைபாதையில் இருந்த கோயில் இடிப்பு






சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், அரசு பொது மருத்துவமனை நுழைவு வாயில் அருகே நடைபாதை யில் உள்ள அரசமரத்தடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் 2 ஆண்டுகளாக இருந் தது. இந்த கோயிலில் எப் போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களும், சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் இருந்து சுரங்கப் பாதை யில் இறங்கி வருபவர்களும் நடைபாதையில் உள்ள கோயிலில் கூடி இருக்கும் பக்தர் களின் நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். இந்நிலையில், நடை பாதையில் உள்ள கோயில்களை அகற்றும்படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

அதன்படி காலை சைதாப் பேட்டை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் கோயிலை அகற்றும் பணியில் ஈடுபட் டனர். இதற்காக வரவழைக்கப் பட்டிருந்த ஜேசிபி இயந்திரம் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே இருந்த கோயில் அகற்றப்பட்டு, லாரி யில் தூக்கி செல்லப்பட்டது. இதனால் சிறிது நேரம் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூக்கடை உதவி கமிஷனர் பாலச்சந்திரன் தலைமையில் போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, அரசு பொது மருத்துவ மனையின் மதில் சுவரையொட்டி நடைபாதையில் மேல் மலை யனூர் அங்காளம்மன் கோயில் இருந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்தக் கோயிலை இடித்துத் தள்ளினர்.


-------------- நன்றி: "விடுதலை" 27-8-08

Friday, June 27, 2008

தி.மு.க. வன்முறைக் கட்சியா? பா.ம.க. வன்முறைக் கட்சியா?

தி.மு.க.தான் வன்முறைக் கட்சி என்று ராமதாஸ் பேசியிருக்கிறாரே?

``தி.மு.க. வன்முறைக் கட்சியா? பா.ம.க. வன்முறைக் கட்சியா? என்ற வாதத்திற்கே நான் வரவில்லை. ஆனால் மற்றொரு கட்சியை வன்முறைக்கட்சி என்று சொல்லுகின்ற தகுதி ராமதாஸுக்கு இல்லை. தமிழக அரசியலில் நேரடித் தாக்குதல் என்ற வன்முறைக் கலாசாரத்திற்கு ஆரம்ப விதையே ராமதாஸ்தான். வன்னியர் சங்கத் தலைவரான வன்னிய அடிகளாரை விழுப்புரத்தில் ஆட்களை வைத்துத் தாக்குதல் நடத்தினார். வாழப்பாடி ராமமூர்த்தியிடம் பலகோடி ரூபாய் பணத்தை வாங்கி அனுபவித்துவிட்டு, கடைசியில் சேலத்தில் அவர் எம்.பி.க்கு நின்றபோது, அவரைத் தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்து அவரையும் அவரது ஆதரவாளர்களையும் ஆட்களை வைத்துத் தாக்கினார். பா.ம.க.விலிருந்து என்னை நீக்கிவிட்டு ஆட்களை ஏவி என்மீது தாக்குதல் நடத்தினார். பண்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களையெல்லாம் தாக்குவதுதான் ராமதாஸின் நோக்கமாகவே இருந்து வந்துள்ளது. அதேபோல், ராமதாஸின் வலதுகரமாக இருக்கும் காடுவெட்டி குருவோ, `வாழப்பாடி தலையை எடுத்துவிடுவேன், தீரன்தலையைஎடுத்துவிடுவேன்' என்று பேசியிருக்கிறார். இப்போது தி.மு.க. தலைவர்களைப் பேசி வருகிறார் குரு. அதையும் ராமதாஸ்அனுமதிக்கிறார்.''

------------------29-6-2008 "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் பேராசிரியர் தீரன் அவர்களின் நேர்காணலிலிருந்து.

Monday, June 16, 2008

இராணன் பெரிய வீரன்;சீதையைக் கடத்தவில்லை; அடைக்கலம் கொடுத்தான்

இராணன் பெரிய வீரன்;

சீதையைக் கடத்தவில்லை; அடைக்கலம் கொடுத்தான்

சிறீலங்கா, வங்காளத் தொன்மை இலக்கியம் கூறுகிறது



சிறீலங்காவிலும் மற்றும் வங்காளத்தில் வழங்கப்படும் ராமாயணத்தில், இராவணனைப்பற்றி மிகவும் உயர்வாகக் கூறப்பட்டிருக்கிறது.

இராவணன் சீதையை எடுத்துச் செல்லவில்லை; அதற்கு மாறாக, ராமனும், லட்சுமணனும் சீதையைப் பெருந்தொல்லைக்கு ஆட்படுத்தினார்கள்; ஆகையால், சீதை அடைக்கலம் தேடிச் சென்றாள். அவளுக்கு இராவணன் அடைக்கலம் அளித்தான்.

இவ்வாறு, இலங்கையில் உள்ள ராமாயணம் தெரிவிப்பதாக, பிலியந்தாலா எனும் இடத்தில் உள்ள நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த பபாலு விஜெகுணவர்தனெ தெரிவித்தார்.
கேரளத்தில் உள்ள கதக்களி நாட்டியத்தில் இராவணன் வில்லனாகக் காட்டப்பட்டாலும், அவனுடைய உயர்ந்த குணங்களும் வெளிப்படுகின்றன; அவனுடைய அறிவுத் திறமும், வீரமும் அதில் வெளிப்படு கின்றன.

மகா ராவணா

ஆனால், சிறீலங்காவில் தொன்மைக் காலத்தில் இருந்து சொல்லப்படும் கதையில் இராவணன் உயர்ந்த குணம் உடையவனாகச் சொல்லப்படுகிறது. அரிசென் அஹுபுது மற்றும் ஜயந்த்த பதிராரச்சி ஆகிய கற்ற புலவர்களை, விஜெகுணவர்தனெ கலந்து ஆலோசித்தார். பின்பு, லங்கா அவதார சூத்ரா எனும் நூலின் அடிப்படையில் ஒரு நாட்டிய நாடகத்தை உருவாக்கினார். அதற்கு மகா ராவணா எனப் பெயர். மே 30 இல் கொழும்புவில் அரங்கம் நிரம்பி வழிய இது அரங் கேற்றப்பட்டது.

மகா ராவணா எனும் நாட்டிய நாடகத்தில் ராமனும், லட்சுமணனும் வீரர்களாகவும், நேர்மையாளர்களாகவும் தோன்றுவதில்லை. ஆனால், இராவணன் நேர்மைமிக்க வீரனாகத் திகழ்கிறான்.

மறைக்கப்படும்
உண்மைகள்


வாலியும், சுக்ரீவனும் போரிடும்பொழுது, போர் அறத்திற்கு மாறாக, ராமன் பின்புறம் இருந்து அம்பு எய்துவது காட்டப்படுகிறது.இந்தியாவில் உள்ள இராமாயணத்தில் மறைக்கப்படும் உண்மைகளை தான் உலகத்திற்கு வெளிப்படுத்தியிருப்பதாக, விஜெகுணவர்தனெ கூறினார்.

---------- நன்றி: "விடுதலை" 16-6-08

Sunday, June 15, 2008

ஸ்டாலின் பலத்தை திருநெல்வேலி மாநாட்டில் நிரூபித்தார். இப்போது உங்கள் பலத்தை காட்ட இந்த மாநாடு நடத்தப்படுகிறதா? -கனிமொழி பேட்டி


கடலூரில் தி.மு.க. மகளிரணி முதல் மாநில மாநாட்டு கொடியேற்று விழா முடிந்த தும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

கேள்வி: இத்தனை வருடங்கள் கழித்து முதல் மகளிர் அணி மாநாடு நடத்த காரணம் என்ன?

பதில்: மகளிர் அணி சார்பில் மாநாடு நடத்த வேண்டும் என்று சில வருடங்களாகவே தலைவரிடம் கேட்டு வந்திருக்கிறோம். இப்போது தான் மாநாடு நடத்துவதற்கு அனு மதி தந்திருக்கிறார். மற்றபடி இப்போது மாநாடு நடத்து வதற்கு என்று முக்கிய காரணம் எதுவும் இல்லை.

கேள்வி: மாநாட்டின் நோக்கம் என்ன?

பதில்: பெண்கள் விழிப் புணர்வு அடைய வேண்டும், சட்டமன்றம், நாடாளுமன்றத் தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடாக இது இருக்கும். இதனை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த மாநாடு அந்த இட ஒதுக் கீட்டை பெற்றுத் தரும் என்று நம்புகிறோம். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும், எழுச்சியும், மகிழ்ச்சியும் இந்த மாநாடு ஏற்படுத்தும்.

கேள்வி: அ.தி.மு.க.விடம் பெண்கள் வாக்கு வங்கி உள்ளதால் உங்கள் பக்கமும் பெண்கள் வாக்கு வங்கியை இழுக்க நடக்கும் முயற்சியாக இந்த மாநாடு இருக்குமா?

பதில்: மற்ற கட்சிகளுக்கு தான் பெண்கள் ஆதரவு இருக்கிறது என்று கூறுவது ஒரு மாயை. தி.மு.க. ஆரம்பித்த காலத்தில் இருந்தே பெண்கள் ஆதரவு எங்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்னும் சொல் லப் போனால் பெண்களுக்கு அதிக உரிமைகளை பெற்றுத் தந்ததும், பெண்கள் மேம் பாட்டுக்கு பாடுபடுவது போன்ற செயல்களில் அதிக மாக ஈடுபடுவது தி.மு.க. தான். தி.மு.க.வை மேலும் அதிகமான பெண்களிடம் எடுத்துச் செல்வ தற்கும், பெண்கள் தி.மு.க.வில் அதிகமாக இணைவதற்கும் இந்த மாநாடு பெரிதும் உதவும்.

கேள்வி: உங்களாலும் ஆள் பலத்தை காட்ட முடியும் என்று காட்டுவதற்காக இந்த மாநாடா?

பதில்: அப்படி எந்த நிர்ப் பந்தமும் எங்களிடம் இல்லை. தி.மு.க.வில் ஏற்கெனவே நிறைய பெண் தலைவர்கள் இருக் கிறார்கள். எந்த குறிப்பிட்ட நபரையும் பிரபலப்படுத்த இந்த மாநாட்டை நடத்த வில்லை.

கேள்வி: உள்ளாட்சித்துறை அமைச்சர் அவரது பலத்தை திருநெல்வேலி மாநாட்டில் நிரூபித்தார். இப்போது உங்கள் பலத்தை காட்ட இந்த மாநாடு நடத்தப்படுகிறதா?


பதில்: மு.க.ஸ்டாலின் ஒரு தலைவர். நான் தலைவர் அல்ல. நெல்லை மாநாட்டுக்கும் கடலூர் மாநாட்டுக்கும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அந்த மாநாடு அவரது முடிவு. இந்த மாநாடு மகளிர் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் மாநாடு. அவரை என்னோடு ஒப்பிடக் கூடாது.

இவ்வாறு கனிமொழி பதில் அளித்தார்.