Sunday, December 30, 2007

தந்தைபெரியாருக்கு தோன்றாத யோசனையா?

அரசியல்வாதிகளில் கொள்கைப் பிடிப்புள்ள, தேர்ந்த சிந்தனையாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.இத்தகைய சூழலில் நமக்கு பெரிய ஆறுதலாக இருந்துகொண்டு வருபவர்கள் தி.மு.க.வினர் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தினர்.அதிலும் குறிப்பாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நமது மதிப்பிற்கும்,மரியாதைக்கும்,என்றென்றும் போற்றுதலுக்கும் உரிய மாண்புமிகு ஆ.இராசா அவ்ர்கள் பெரியாரியக்கவாதியாகவே எப்போதும் செயல்படுபவர்.அதனால் அவர்மீது எப்போதும் நமக்கு(கொள்கைப்) பாசம் அதிகம் தான்.
பல பெரியாரியக்க மேடைகளில் அவர் பேசிய உரைகளைப் படிக்கும் போது ஒரு தேர்ந்த கொள்கைவாதியின் உரையைப் படித்த திருப்தி ஏற்படும்.அந்தவகையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் 2-12-2007 அன்று நடைபெற்ற தி.க.தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 75 -ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய பேச்சில் பலநாடுகளில்
நடைபெற்ற போராட்டங்கள் பற்றியும், பல தலைவர்களின் தியாகத்தைப் பற்றியும் மிகச்சிறப்பாக எடுத்துரைத்திருந்தார்கள்.சிறப்பான அவ்வுரையில் கீழ்காணும் அவருடைய பேச்சு எம்மை நெருட வைத்தது.அப்பேச்சை அப்படியே இங்கு தருகிறேன்.
"இந்த மேடைக்கு கலைஞர் அவர்கள் வந்த பொழுது'பெரியார் நெஞ்சில்தைத்த முள்ளை எடுத்த முதலமைச்சர் கலைஞர் அவர்களே' என்று சொன்னார்கள்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அடையாளம் இருக்கின்றது.பெரியாரைக்குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அருள்கூர்ந்து யாரும் என்னைக்கருதக்கூடாது.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று விரும்பியவர் பெரியார்.
பெரியார் நெஞ்சிலே தைத்தமுள்தான்.அதை எடுத்தவர் கலைஞர்.ஆனால்,பெரியார் செய்யாத ஒன்றையும் தலைவர் கலைஞர் செய்திருக்கின்றார்.
வரலாற்று ஆசிரியர்கள் யாராவது இங்கு இருந்தால் வரலாற்றை செய்யக்கூடிய மாணவர்கள் யாராவது இந்த இருபெரும் தலைவர்கள் உட்கார்ந்திருக்கிற மேடையைக் குறித்துக்கொண்டு அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.......
.........இந்த மண்ணில் பார்ப்பனஜாதியும், பறப்பள்ளுஜாதியும் ஒழித்துவிட்டு எல்லோரும் ஒரே ஒரு ஜாதி என்று சொல்லுகின்ற இந்த முயற்சிக்குப் பெயர் தேசத்துரோகிதான் என்றால், நான் சசகும்வரை தேசத்துரோகியாகத்தான் இருக்க விரும்புகிறேன் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டவர் பெரியார்.ஆனால்,அந்த பெரியார் பார்ப்பனஜாதியும் பறப்பள்ளுஜாதியும் ஒழிக்கப்படவேண்டும் என்கின்ற நான் உயர்வாக மதிக்கிற அய்யா அவர்களுக்கு தோன்றாத யோசனை பூகோளப்பரப்பில் உள்ள ஜாதிகளை எல்லாம் ஒன்றுபடுத்தி,ஒரே இடத்தில் என்னுடைய காலத்திலாவது நான் அய்யா அவர்களுக்கு செய்யப்போகின்ற கடமை பூகோளத்தில் ஒன்றாக ஆக்கி, ஒரேஇடத்தில் 100 வீடுகளைக் கட்டி அந்த 100வீட்டில் பிராமணனும் வாழ்வான்,வன்னியனும் வாழ்வான்,ஆதிதிராவிடனும் வாழ்வான்,முக்குலத்தோனும் வாழ்வான் என்ரு ஒருபுரட்சியை செய்து பெரியாருக்கு காணிக்கையாக்கிய மகத்தான தலைவர் கலைஞர் அவர்கள்".
-------"விடுதலை"-19,20-12-2007
கலைஞர் தொண்டையோ,அவர்கள் செய்த புரட்சிகரமான செயல்களையோ நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் கேட்டால் கலைஞரைப்போல் பெரியாருக்கு சிறப்பு செய்தவர்கள் யாரும் இல்லை என்றுகூட கூறலாம்.அதுமட்டுமல்லாது தன்குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஜாதிஒழிப்புத் திருமணம் செய்து வைத்தவர் கலைஞர்.இது எந்த அரசியல்வாதியும் செய்யாதது.இப்படி ஜாதிஒழிப்பில் கலைஞரின் பணி மகத்தானது இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
நம்முடைய மதிப்புக்குரிய மத்திய அமைச்சர் மான்புமிகு ஆ.இராசா அவர்கள் தம் உரையில் குறிப்பிடுவது என்னவெனில் கலைஞர் உருவாக்கிய"பெரியார் நினைவுச் சமத்துவபுரம்" திட்டம் பெரியாருக்கு தோன்றாதது என்கிறார்.
இது சரியா? என்று ஆய்வு செய்ததில் கீழ்காணும் உண்மை வெளிப்பட்டது. இதுகுறித்து பெரியார் தரும் செய்தி இதோ;
"எப்போதும் ஆதிதிராவிடர்களுக்கு ஊருக்கு வெளியே ஒரு மைல்,இரண்டு மைல் தூரத்தில்தான் வீடுகள் கட்டிக்கொடுக்கிறார்கள்.அதனால் அது பறையர் தெரு,பள்ளர் தெரு என்று அழைக்கப்பட்டு வருகிறதே தவிர,எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.ஊருக்குள் பெரிய சமுதாயம் வசிக்கிற தெருவில்,அக்கிரகாரத்தில் 4,5 வீடுகளை அரசாங்கமே பணம் கொடுத்து(அக்கொயர் செய்து)வாங்கி அந்த வீடுகளில் ஆதிதிராவிட மக்களைக் கொண்டு வந்து குடியேற்ற வேண்டும். அப்போது மற்ற மக்களோடு கலந்து பழக வாய்ப்பு ஏற்படும்.வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தால் கொஞ்சம் காலத்துக்குத்தான் இருப்பார்கள்.பிறகு போய்விடுவார்கள்.அதனால் பயன் ஏற்படாது.இதை அரசாங்கம் முன் வந்து செய்ய வேண்டும்"'
---------பெரியார்.-"விடுதலை"-27-01-1970
நமது போற்றுதலுக்குரிய மத்திய அமைச்சர் ஆ.இராஜா அவர்கள் இப்போது சொல்லட்டும்"இது பெரியாருக்கு தோன்றாத யோசனையா?". இதைச் சுட்டிக் காட்டுவதால் அமைச்சர் அவர்களை நாம் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதக்கூடாது.அவரைப்போல் இன்னும் பல (கொள்கை)இராசாக்கள் உருவாக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாம்.
பெரியாரின் சிந்தனையைப் பற்றி அவர் மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து எப்படியெல்லாம் தனித்து தனித்தன்மையாக விளங்கினார் என்பதை அறிஞர் அண்ணா அவர்கள் வெகுசிறப்பாக எடுத்துரைத்துள்ளார்கள்.அதே போல் பட்டுக்கோட்டைஅழகரி போன்ற என்னற்ற தலைவர்கள் பெரியாரின் தனித்தன்மையான நுட்பமான சிந்தனையை,புரட்சியை பற்றி விரிவாக விளக்கியுள்ளார்கள்.
பெரியாரின் புரட்சியைப் பற்றி கலைஞர் அவர்கள் கூறிய கருத்துடன் இதை நிறைவு செய்கிறேன். இதோ கலைஞர் பேசுகிறார்.
"இடமருகு என்ற எழுத்தாளரால் வரையப்பட்ட அருமையான நூல். நூலுக்குத்தலைப்பு
'இவர்தான் நாராயண குரு'.நாராயண குரு என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் அவர் கேரளத்தில் பெரியாருக்குச் சமமாக என்று சொல்லமாட்டேன். பெரியார் அளவுக்கு என்று நான் கூற மாட்டேன்.ஏனென்றால்,பெரியார் எனக்குத் தலைவர் என்ற காரணத்தால் அல்ல. பெரியார் செய்த புரட்சி உலகத்திலே எங்கும், யாரும் இதுவரையிலே செய்யவில்லை என்ற காரணத்தினால், யாரையும் நான் பெரியாருக்கு ஒப்பிட்டுக் கூற மாட்டேன்".
-----தஞ்சையில் 12-6-2006 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் டாகடர் கலைஞர் பேசியதிலிருந்து ஒரு பகுதி. தந்தைபெரியார் 128 ஆம் பிறந்த நாள் மலர் பக்கம்.189.
-----------------நன்றி:"தமிழ் ஓவியா" இணையதளம்

No comments: