Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Tuesday, June 03, 2008

வாழ்க மானமிகு கலைஞர்!





85 ஆம் ஆண்டில் அடி பதிக்கும் அய்ந்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள், 95 ஆண்டு காலம் வாழ்ந்து - உடலால் மறைந்தாலும், தத்துவத்தால் என்றும் வாழக்கூடிய தந்தை பெரியாரின் அருமைமிகு சீடராவார்.

தன்னைப்பற்றி தன்னிலை விளக்கமாகக் கூறும்போது, நான் மிகமிக எத்தனை மிக வேண்டுமானாலும் சேர்த்துக் கொள் ளுங்கள் - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒரு சமூகப் போராளிதான் கலைஞர்.
இவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் - இந்த நிலையில் உள்ள ஒருவர்தான் ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றிய உணர்வு ரீதியான சிந்தனையாளராக - செயல்படுபவராக இருக்க முடியும் என்று கணித்து, தம் ஆதரவு என்னும் பெரும்பலத்தைத் தந்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் கணிப்பு நூறு விழுக்காடு சரி என்பதை அன்றாடம் தன் பணிகள் மூலம் மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் சமூகநீதிச் சான்றாளராகவே திகழ்ந்துகொண்டு இருக்கிறார்.
தொழு நோயாளிகள்பற்றியும், கிராமங்களில் வாழ்வோர் தொழிற்கல்லூரிகளில் சேர்வது குறித்தும் வேறு யாருக்கு கவலை ஏற்பட்டது?

பிற்படுத்தப்பட்டோரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறித்தும், சிறுபான்மையினர்க்கு இட ஒதுக்கீடு குறித்தும் எந்த மூளை சிந்தித்தது? அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற பிரச்சினை வந்தபோது, அலட்சியப்படுத்தாமல், அனைத்துக் கட்சிகளையும் கூட்டி, ஆலோசனை நடத்தி, அதற்குரிய செயல்பாட்டில் அடியெடுத்து வைத்த கால் எந்தக் கால்?
வெட்டியான் என்று கேவலப்படுத்தப்பட்டவர்களை மயான உதவியாளர் ஆக்கியது எந்த ஆட்சி? அவர்களை அரசு ஊழியர் களாகவும் அறிவித்தது யார்?

எத்தனையோ சொல்லலாம் - இடம் தராது ஏடு! இதன் காரணமாகத்தான் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என் பக்கம் இருக்கவேண்டும் என்று ஆதரவுக் கரம் நீட்டுகின்றார் இந்த அய்யாவின் சீடர் - அண்ணாவின் தம்பி.

தேர்தல் அறிக்கை என்றால் ஒரு சம்பிரதாயம் - ஒரு அரசியல் சடங்கு என்று கருதப்பட்ட ஒரு நிலையில், தேர்தல் அறிக்கை யையே மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக்கி, மக்கள் மன்றத்தில் விவாத மணத்தை உலவ விட்ட ஒரு மதியூகம் இந்த மானமிகுவுக்கல்லால் வேறு எவருக்கு உதித்தது?

தேர்தல் அறிக்கையைக் கையில் வைத்துக்கொண்டு அன்றாடம் வகுப்புப் பாடங்களை ஒழுங்காகப் படிக்கும் ஒரு நல்ல மாணவன் போல, ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்தி, செயல்படுத்தி, நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் முதல் மாணாக்கன்போல, தேர்தல் அறிக்கையில் கண்ட அம்சங்களை அம்சமாக நிறை வேற்றிவரும் நிறைகுடம் இவரன்றி வேறு யார்?

ஆளுநர் மாளிகைக்குள் பதவிப் பிரமாணம் எடுக்காமல், மக்கள் கடலின்முன் உறுதிமொழி எடுத்து, அந்த இடத்திலேயே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற ஆணைக்குக் கைசாற்று இட்டு, அமல்படுத்திய அந்த அதிசயத்தை இவரன்றி நிகழ்த்திக் காட்டியவர் யார்?

எந்நிலையிலும் ஈடு இணையற்ற கதிராக - முத்தாரமாக, முரசொலியாக, மறவன் மடலாக தமிழர் மத்தியில் மகத்தான ஆசனம் போட்டு, அமர்ந்திருக்கும் மாண்புமிகுவைவிட மானமிகுவை நேசிக்கும் - சுவாசிக்கும் ஒரு தலைவரின் பிறந்த நாள் ஜூன் 3.
அந்த மகுடத்திற்குப் புதிய நவரத்தினங்கள் தேவையில்லை - அதில் சிகரங்களைக் கடந்தவர்.
அவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது - தந்தை பெரியார்தம் தத்துவம் - அறிஞர் அண்ணாவின் அணுகுமுறை - இலட்சோப லட்ச சுயமரியாதைச் சுடரொளிகளின் தியாகம் - தமிழ் உணர்வு - தமிழின உணர்வு - பகுத்தறிவுச் சிந்தனைகள் - சமூகநீதிச் சங்க நாதம் - பெண்ணுரிமை - மனித உரிமை - மனித நேயம் - சமத் துவம் என்கிற கோட்பாடுகள்மீது நமது அக்கறையைச் செலுத்து வதற்கும் - அதன் தொடர்ச்சியில் வெற்றிகரமாகப் பயணிப்பதற்கு மான ஒரு வரலாற்றுக் குறிப்பின் குறியீடுதான் 85 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட இயக்கச் செம்மல் மானமிகு கலைஞர் அவர்களின் பிறந்த நாள்!
இளைஞர்களுக்கு அவ்வப்போது கலைஞர் அவர்கள் எச்சரிக்கையாகச் சொல்லிவரும் கருத்துகள், திராவிட இயக்கச் சிந்தனைகள் மீது இளைஞர்கள் அழுத்தமாகச் செலுத்தவேண்டிய அக்கறை, இளைஞர்களை அந்தப் பாட்டையில் ஆற்றுப்படுத்த வேண்டிய அவசியம் தத்துவ ரீதியாக - ராமராஜ்ஜியமா, பெரியார் ராமசாமி ராஜ்ஜியமா என்ற வினா எழும்பியிருக்கும் இக்காலகட்டத்தில் அகில இந்தியாவுக்கே நமது ஒளியைப் பரவச் செய்யும் கடப்பாடு - இவற்றை நம் இரத்த நாளங்களில் உரு ஏற்றிக் கொள்வதற்கும், அதனைச் செயலாக்க நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ளும் உணர்வுகளுக்கும் ஒரு சரியான உந்துதலைக் கொடுக்கும் விழாவாக இதனைக் கருதுவோம் - இந்தத் தள்ளாத வயதிலும் தள்ளாத இந்த உணர்வுகள்தான் அவரை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன என்பதை அவர்தம் அண்மைக்கால எழுத்துகளும், உரைகளும், உரையாடல்களும் வெளிப்படுத்துகின் றன. அந்த வெளிச்சத்தில் வீறுநடை போட இளைஞர்களே வாருங்கள் - இந்த உணர்வு பெருக பெருக கலைஞர் ஆயுளும் பெருகும் - வளரும் - வாழ்க மானமிகு கலைஞர்!

----------நன்றி: "விடுதலை" தலையங்கம் -02-06-2008