Friday, April 18, 2008

பெரியார் எனும் போராளி

நினைத்துப் பார்க்கிறோம்.

கடந்துபோன நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிற்கு இரண்டாயிரம் ரூபாய் வருமானம் தந்த வாணிபம் செய்து கொண்டிருந்த ஈ.வெ. இராமசாமி அதனைத் துறந்து காங்கிரசு கட்சியின் அழைப்பை ஏற்றுக் கதராடை அணிந்து ஊர்தோறும் கதராடைகளைச் சுமந்து விற்றுவந்தார்.
காங்கிரசு கட்சியில் நிலை கொண்டிருந்த மேட்டுக்குடிச் சிந்தனைகளால் வெறுப்புற்று அங்கிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் தொடங்கி ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பயணம் செய்து சமதருமப் பரப்புரை செய்கிறார். குலக்கல்வி முறையை நடைமுறைப்படுத்திய ராஜாஜிக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகக் காரணமாகிறார். காமராஜருக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார். இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து பேரராட்டங்கள் நடத்துகிறார். அண்ணாதுரை முதலமைச்சர் ஆனதும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்.

இப்படியான அரசியல் சுவடுகளோடு பெரியாரின் பாதையைப் பார்த்தோமானால் மனுதர்மங்களைச் கடுமையாகத் தாக்கி இருக்கிறார். சாதியையும் தீண்டாமையையும் எதிர்க்கிறார். பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். கடவுள் மறுப்புக் கொள்கையைத் தீவிரமாக ஏற்றிருக்கிறார். மதங்களை இகழ்ந்து காலம் முழுக்க வர்க்கபேதமுள்ள சமூகத்தில் தன்னை ஒரு போராளியாகவே அடையாளப் படுத்திக் கொண்டவர் தந்தை பெரியார்.

அவரின் பேச்சு, எழுத்து யாவற்றிலும் போராட்டக் களம் இருந்தது. உணர்ச்சி மிக்க சமூகத்தைத் துண்டாடும் அறைகூவல்கள் இல்லாத ரத்தம் சிந்தாத முறையில் மனச்சாட்சியைக் தட்டி எழுப்புகிற முறையில் அவரின் சிந்தனைகள் அமைந்தன.
அரசுக்கு எதிரான போராட்டங்களை விட அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களில் அவரின் கவனம் இருந்தது. அநீதிகளுக்கு எதிரான கலகங்கள் அனைத்தையும் அவர் செய்திருககிறார். நான் போராடுவது நியாயமா என்பதைக் காட்டிலும் நியாயம் பிறக்கும் என்பதற்காகவே போராடியவர்.

பெரியாரின் பேச்சிலும் போராட்டக் களங்களில் காணப்பட்ட உக்ரத்தையும் தாங்க முடியாமல் அரண்டுபோய்விட்டவர்கள் நாகரிகமற்ற பேச்சுகளும் செயல்களும்தான் பெரியாரின் அடையாளம் என்று இகழ்ந்ததுண்டு.

பெரியாரைப்பற்றி நிறைய விமர்சனங்கள் உண்டு. அவதூறுகள் உண்டு. கண்டனங்கள், கேலிகள் உண்டு. வெறும் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே என மட்டம் தட்டி உள்ளனர். நாடு உலகம் குறித்த விரிவான பார்வை அவருக்கில்லை எனச் சாடி இருக்கிறார்கள்.
பெரியார் எளிமையாக இருந்து எளிமையாக மக்களை அணுகியவர். பூடகமற்றவர். தத்துவ விசாரணைகளுக்குள் செல்லாமல் பாமர மொழி உவமைகளால் உண்மையின் வடிவங்களை உணர்த்தியவர். வர்க்க பேதத்தை முறியடிக்கும் முன்பாகச் சாதிமதப் பேதத்தை களைய வேண்டியது தேவை என்று அதற்கு அடிப்படையான கடவுள் வருணாசிரம தருமம், மனுதருமம் போன்ற பார்ப்பன சக்திகள் இருப்பதாய்ப் புரிந்துகொண்டு செயல்பட்டவர். தன்னை ஒரு போராளியாகவே சமூகத்தில் அடையாளப் படுத்திக் கொண்டவர்.

அவருக்குப் பிறகு தமிழ்நாடு எத்தனையோ தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால், பெரியாருக்கு இருந்ததுபோன்ற சமூக அக்கறையிலான போராட்டக் களங்களை தன்னலமற்ற சிந்தனையும் மனித நேயமும் சமூக விழிப்புணர்ச்சியின்பால், தொடர்ந்து ஈடுபாடும் காலத்தின் தேவையை உணர்ந்த மேதைமையும் இலட்சியமே வாழ்வாகக் கொண்ட நெறிகளும் வேறு யாருக்கேணும் இருந்தனவா? என்ற வினாவுக்கு விடை கிடைப்பது அரிதுதான். இன்று காணாமற் போய்விட்ட அரசியல் நாகரிகத்தைக் கட்டிக் காத்தவர்களுள் பெரியார் முதன்மையானவர்.

ராஜாஜிக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தாலும் அவருடன் ஆழ்ந்த நட்புக் கொண்டிருந்தார் பெரியார் ஒரு முறை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ராஜாஜியைக் காணச் சென்ற பெரியார் நாம் சண்டைப் போட்டுக் கொள்வதற்காக வேனும் உங்களுக்கு நீண்ட வாழ்நாள் வேண்டும் எனக் கண்கலங்கினாராம்.

1966 ஆம் ஆண்டு டில்லியில் காமராஜர் தங்கியிருந்த இடத்திற்குச் சதிக்கும்பல் ஒன்று தீ வைத்தது. பெரியார் அவர்கள் அந்த நிகழ்விற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு `1966 நவம்பர் 26ஆம் தேதியை காமராஜர் பாதுகாப்பு நாள் என்று அறிவித்தார். அரசியலில் பெரியாருக்கு என்ன நிலைப்பாடு இருந்தாலும் எல்லாரையும் அவர் நண்பர்களாக கருதினார்
பெரியாரின் இறப்பிற்குப் பிறகு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் அவரின் பிறந்தநாளைக் கொண்டாட அரசு தடை விதித்தது. அதே டில்லியில் பெரியார் நடுவம் இடிக்கப்பட்டது.

பெரியார் எனும் போராளிக்கு இச்சமூகம் எத்தனையோ வகையான இழிவுகளை இன்றளவும் செய்து கொண்டுதான் உள்ளது. அதனால் எல்லாம் அவரின் பெருமை மங்கிவிடாது என்பது உண்மை.

- நானா
நன்றி: "தமிழ்ஓசை", 11.4.2008

No comments: