Tuesday, April 05, 2011

வீட்டுக்கு வீடு ஆடுகளா?

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலைஞர் ஆட்சியில் நிகழ்த்தப்பட்டுள்ள கல்விப் புரட்சிபற்றி எடுத்துக் கூறி வருகிறார். அதே நேரத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் மனப் போக்கையும் வெளிப்படுத்துகிறார்.

வீட்டுக்கு நான்கு ஆடுகள் தருவதாக ஜெயலலிதா கூறுவதன் பின்னணியை அம்பலப்படுத்துகிறார்.

ஆடு, மாடுகள் மேய்த்துக் கிடந்த பஞ்சம, சூத்திர மக்களுக்குக் கல்வி வாய்ப்பும், உரிமையும் சட்டப்படி தேவை என்பதற்காகப் போராடி வருவது திராவிடர் இயக்கம் - நீதிக் கட்சி - திராவிடர் கழகம் தி.மு.க. போன்ற அமைப்புகள்.

காங்கிரசை ஒழித்தே தீருவேன் என்று சூளுரைத்து காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய தந்தை பெரியார் அவர்கள், காமராசரைப் பச்சைத் தமிழர் என்றும், கல்விக் கண்களைத் திறந்த இரட்சகர் என்றும் போற்றிப் புகழ்ந்தார் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் - ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாதாருக்குக் கல்விக் கண்களைத் திறந்து நாடெங்கும் கல்வி ஓடையை அந்தப் பெருமகன் திறந்து விட்ட ஒரே காரணத்துக்காகத்தானே!

உடம்பெல்லாம் மூளை என்று அக்கிரகாரம் போற்றிப் புகழ்ந்த சி.ஆர். ஆச்சாரியார் (ராஜாஜி) இரண்டு முறை சென்னை மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் எல்லாம் அவர் செய்த முதல் காரியம் என்ன?

1937-1939இல் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952-1954இல் 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படிப்பு, அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற வருணாசிரமக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாரே!

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம்?
இதனை எதிர்த்துத் துவக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கம் தமிழர்களுக்குக் கல்வி கிட்டச் செய்வதில் எப்பொழுதுமே கவனமாக இருந்து வந்திருக்கிறது.

காமராசர் அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வியை அறிவித்தார் என்றால், அண்ணா அவர்கள் அடுத்த கட்டமாக பி.யூ.சி. வரை இலவசக் கல்வி என்று ஆக்கினார்.

அடுத்த கட்டமாக முதுகலை வரை இலவசக் கல்வி என்னும் பெரும் புரட்சியைச் செய்தவர் நம்முடைய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆவார்.

இப்படி மேலும் மேலும் கல்வி வளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகள் இலவசமாகத் தருவேன் என்று ஜெயலலிதா கூறுவதன் தாத்பரியம் என்ன?

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில்கூட தி.மு.க. தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக +2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதே தவிர, அதற்கு மேலாக ஒன்றும் அறிவிக்கப்பட முடியவில்லையே!

2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் (னுசடியீ டிரவள) 3.81 சதவிகிதமாக இருந்தது. 2009-2010 தி.மு.க. ஆட்சியிலோ அது ஒரு சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதே!

இடைநிலைப் பள்ளிகளில் 2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் இடைநிற்றல் 7.58 சதவிகிதமாக இருந்தது. 2009-2010 தி.மு.க. ஆட்சியிலோ 1.79 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதே!

2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிகளில் படித்தோர் 2 லட்சத்து 82 ஆயிரத்து 802; 2010-2011ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியிலோ அது 6 லட்சத்து 9 ஆயிரத்து 421 ஆக உயர்ந்ததே!

நுழைவுத் தேர்வை ஒழித்ததில்கூட அ.தி.மு.க.வின் அணுகுமுறை காரணமாக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அறிமுகப்படுத்திய நுழைவுத் தேர்வு ரத்து தோல்வி அடைந்து விட்டதே! அதே நேரத்தில் அதே உயர்நீதிமன்றமும் அதற்கு அடுத்து உச்சநீதிமன்றமும் தி.மு.க. கொண்டுவந்த நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று தீர்ப்பு அளித்துவிட்டதே!

காரணம் என்ன? உள்ளார்ந்த உணர்வுடன், சரியான தீர்வைக் காண வேண்டும் என்ற கவலையுடன், உரிய சட்ட திட்டங்களை நுணுகி ஆய்வு செய்து தி.மு.க. செயல் பட்டதுதான்.

ஓர் ஆட்சியை ஆதரிப்பது - எதிர்ப்பது என்பதில் சமூக நீதியில் - கல்வி அளிப்பதில் ஓர் ஆட்சி எப்படி நடந்து கொள்கிறது என்பது திராவிடர் கழகத்திற்கு முக்கியமான பார்வையாகும்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் பற்றியெல்லாம் ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜெயலலிதா; திராவிடர் கழகத் தலைவரின் அணுகு முறையாலும், நிர்பந்தத்தாலும், அரசியல் சூழலாலும்தான் ஜெயலலிதா அம்மையார் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்னும் பாட்டைக்கு வந்தார் என்பதை மறக்கக் கூடாது.

ஜெயலலிதா மறுபடியும் ஆடு, மாடுகளை வீட்டுக்கு வீடு இலவசமாக அளிப்பேன் என்று கூறுவது ஒரு வகையான பிற்போக்குத்தனமான பார்வை என்பதில் அய்யமில்லை.

----------------”விடுதலை” தலையங்கம் 5-4-2011

தேர்தல் அறிக்கை

தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடு வதுண்டு. அந்த வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திரா விடர் இயக்க ஒப்பற்ற தலைவர்கள் சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி.நடேசன் ஆகியோரின் பெயர்கள் வரலாற்றுப் பெருமையோடு குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுத்தறிவு நெறி பற்றி யும் பதிவு செய்யப்பட் டுள்ளது.

ஆனால் அண்ணா தி.மு.க. என்னும் பெய ருள்ள ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும் அண்ணாவின் பெயரே பதிவு செய்யப்பட வில்லை என்கிற போது, பெரியார் பெயரும், திரா விடர் இயக்க முன்னோடி களின் பெயர்களும் இடம் பெறும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஜாதி பேதமற்ற சமத் துவ சமுதாயத்தை உரு வாக்க ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவ புரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் உருவாக் கப்படும் என்று தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற மறு மலர்ச்சி பற்றிய எந்த அறிவிப்பும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மருந் துக்கும் இடம் பெறவில்லை.

அதே நேரத்தில் தமிழ் மொழி மேம்பாடு என்னும் தலைப்பின் கீழ் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கீழ்க் கண்ட அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழி யினரும் உணர்ந்து, அதைப்பற்றி அறிய திருக் குறள், தமிழ்க் காப்பி யங்கள், இலக்கண- இலக் கியங்கள், புராண- இதி காச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற் றுப் புகழ் பெற்ற நூல் களைப் பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணைய தளத்தில் இடம் பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலக மெங்கும் பரவ வழிவகை செய்யப்படும்.

(அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, பக்கம் 17, 18)

பெரிய புராணத்தையும், கம்ப இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று இரா.பி.சேதுப் பிள்ளையோடும், நாவலர் சோமசுந்தர பாரதியா ரோடும் விவாதப் போரிட்டு வென்றவர் அறிஞர் அண்ணா.

அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரிலும்,உருவத்தைக் கொடியிலும் பொறித்து வைத்துள்ள அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக் கையில் தமிழில் உள்ள புராணங்களையும், இதிகா சங்களையும் மொழி மாற் றம் செய்யப்போகிறதாம் - வெட்கக்கேடு!

முதலாவதாகத் தமிழ் முன்னேற்ற மடைந்து, உலகப் பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழை யும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமி ழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

- தந்தை பெரியார் (குடிஅரசு 26-1-1936)

பெரியார், அண்ணா கருத்துகள் இவ்வாறு இருக்க அதற்கு மாறாக தமிழில் உள்ள புராண, இதிகாசங்களை மொழி மாற்றம் செய்வதாகக் கூறும் அ.தி.மு.க., பெரியார், அண்ணா பெயர்களை உச் சரிக்கத் தகுதி உடையது தானா?

------ மயிலாடன் --------”விடுதலை” 5-4-2011

Friday, April 01, 2011

சோவின் பார்வை - ஒரு பார்வை

திருவாளர் சோஇராமசாமி அய்யர் தேர்தல் களத்தில் பஞ்சக் கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு தனது பூணூல் மூளையை ஒரு கசக்குக் கசக்கிக் கொண்டு - விடையை முதலில் எழுதிக் கொண்டு கணக்குப் போடும் ஒரு வேலையை இந்த வார துக்ளக்கில் (6.4.2011 - பக்கம் 5,6) செய்துள்ளார்.

அடேயப்பா, அய்யங்கார் அம்மையாரை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றால் எவ்வளவு சாதுர்யமாகவும், வக்கணையாகவும் பேனா முனையை வளைய விடுகிறார்கள் என்ப தற்கு இந்த விமர்சனக் கட்டுரை ஒன்றே போதுமானது.

1) தேர்தல் கூட்டணியில் தி.மு.க.வோடு காங்கிரஸ் போட்ட கூட்டணியில் பிரச்சினைகள் ஏற்பட்டதால் காங் கிரஸின் ஓட்டு எந்த அளவுக்குக் கழக வேட்பாளர் களுக்குக் கிடைக்கும் என்பதும், கழகத்தினரின் ஓட்டு எந்த அளவுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பதும் நிச்சயமற்ற விஷயங்கள்.

இந்த உறவு மட்டுமல்ல; விடுதலைச் சிறுத்தை கள்; பா.ம.க.,வின் உறவும் இப்படிப்பட்டவைதான்; தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால் அவர வர்கள் ஓட்டு அந்தந்தக் கட்சிகளுக்கு போகுமே தவிர மற்றவர்களுக்குக் கிட்டாமல் போகும்.

இப்படி தி.மு.க. கூட்டணிபற்றி வரைந்து தள்ளும் துக்ளக் அ.தி.மு.க. கூட்டணியில் நடந்த நிகழ்வு களைப்பற்றி என்ன எழுதுகிறது?

யாரும் எதிர்பார்க்காத நிலையில் அ.தி.மு.க. தரப்பு, தான் போட்டியிடுகிற தொகுதிகளின் பட்டியலை வேட்பாளர்கள் பெயர்களுடன் வெளியிட்டது - அது அதிர்ச்சியைத் தந்தது என்றெல்லாம் எழுதிவிட்டு பார்ப்பனியத்துக்கே உரித்தான பம்மாத்து வேலையில் இறங்குகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வினரிடையே தொண்டர்கள் மத்தியில் தோன்றிவிட்ட கசப்புணர்வு, அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியை காங்கிரஸ் தொண்டர்கள் வெறுத்தனர். ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணியை இரு கட்சி தொண்டர்களும் முழுமையாக விரும்பினர் என்று கொஞ்சம்கூட அறிவு நாணயமற்ற முறையில் எழுதுகிறது துக்ளக்.

தங்களைக் கலக்காமல் பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களோடு 160 இடங்களுக்கு பட்டியலை அறிவித்தபோது என்ன நடந்தது?

இடதுசாரிகள் என்ன என்னவெல்லாம் பேசி னார்கள்? நடிகர் விஜயகாந்த் எப்படியெல்லாம் பேசினார்? இப்பொழுதே இந்த அம்மையார் இப்படி நடந்து கொள்கின்றாரே, தேர்தலுக்குப்பின் எப்படி நடந்து கொள்வார் என்றெல்லாம் பேசவில்லையா?

கூட்டணிக் கட்சியின் தலைவரான ஜெயலலிதா அம்மையாரின் கொடும்பாவி நாடெங்கும் கொளுத்தப் படவில்லையா? சடகோபம் (செருப்படி) சாத்துபடிகள் நடக்கவில்லையா?

இப்படியெல்லாம் அ.தி.மு.க. கூட்டணியில் சாங்கோ பாங்கமாக நடந்திருக்கிறது. அப்படியி ருக்கும் கூட்டணிக் கட்சிக்காரர்களிடம் ஏதும் பிரச்சினையே கிடையாதாம். ஒன்றுபட்டு தேர்தல் பணிகளைச் செய்வார்களாம் - மனம் ஒத்துப் போய் விட்டார்களாம்.
மனம் ஒத்துப் போக வேண்டும் என்றால் செருப்படி விழ வேண்டுமோ!

தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே பிரச் சினைகள் வெடித்தாலும் அது ஒரு விமர்சனம் என்கிற கட்டுக்குள்ளே மட்டுமே கண்ணியமாக இருந்தது. எந்தக் கட்சித் தொண்டரும் இன்னொரு கட்சித் தலைவரின் கொடும்பாவியைக் கொளுத்தவில்லை; கொடி மரத்தை வெட்டவில்லை. ஆனாலும் இந்தக் கூட்டணிக் கட்சி களின் தொண்டர்களிடத்தில் விரிசல் இருக்கிறதாம். இந்தக் கட்சிக்காரர்களின் வாக்குகள் ஒருவருக் கொருவர் கிடைக்காதாம்.

துக்ளக் சோவின் கருத்துப்படி ஒரு கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் மனமொத்து இருக்கின்றன என்பதற்கு அடையாளம் - அந்தக் கட்சிக்குள் மோதல் பகிரங்கமாக வெடிக்க வேண்டும் - கூட்டணிக் கட்சித் தலைவரின் கொடும்பாவியைக் கொளுத்த வேண்டும் - அசிங்கமான பொருள்களால் அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும்.

புரிகிறதா? இதுதான் சோராமசாமியின் விவாதப் புத்தியின் லட்சணம். அடேயப்பா, இவர்தான் அக்கிரகார அகராதியில் அறிவுக் கொழுந்தாம்!

2) தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கிடையாது என்று கலைஞர் அறிவித்து, ஒரு போலி மிரட்டலை விடுத்தபோது - அவருக்கு அழகிரி முதல் வீரமணி வரை பலர் பாராட்டுத் தெரிவித்து - இதுதான் சரி என்று கொண்டாடினர். அ.தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டபோது, இப்படி எந்தக் கட்சியும் மகிழவில்லை. இது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய வித்தியாசம். தி.மு.க. கூட்டணி வெறுப்புற்றவர்களின் ஒப்பந்தம். அ.தி.மு.க. கூட்டணி - விருப்பமுடையோரின் உறவு - என்று எழுதுகிறார் திரு. சோ. இதைவிட உண்மையைக் கவிழ்த்துப் போட்டு யாராலும் காயடிக்க முடியாது.

தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே பிரச்சினை வந்தபோது கருத்துகள் பரிமாறப்பட்டன. இன்னொரு கட்டத்தில் பிரச்சினைக்குத் தீர்வுக் காணப்பட்டுவிட்டது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணிக்குள் ஒன்றுமே நடக்கவில்லை என்று கோயபல்சு பாணியில் எழுதுகிறாரே - அது உண்மைதானா?

நடிகர் விஜயகாந்த் இருக்கும் திக்கு நோக்கி இடதுசாரிகள் படையெடுக்கவில்லையா? திருமண நிகழ்ச்சிக்குச் சென்று இருக்கும் திரு. வைகோ விரைந்து கொண்டு இருக்கிறார் - மூன்றாவது அணி உருவாக்கப்படும் என்று பேசப்பட வில்லையா?

உள்ளுக்குள் இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு வெளியில் வெளிப்புறக் காட்சிகள் (சினிமாக்காரர்கள் ஆயிற்றே) கண ஜோராக நடந்து கொண்டிருக்க வில்லையா?

துக்ளக் ராமசாமி அய்யரின் கணிப்புப்படியே அ.தி.மு.க கூட்டணியில் எல்லாம் சுமுகமாக நடந் தேறிவிட்டது. தலைவர்களுக்குள்ளும், தொண்டர் களுக்குள்ளும் எவ்வித வெறுப்பும் இல்லை என்பது உண்மையானால், ஒரே ஒரு தடவையாவது அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்து பொது மக்களைச் சந்திக்காதது ஏன்?
அம்மையார் ஜெயலலிதா தனிக்காட்டு ராணியாக யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்துப் படிக்கும் பிரச்சாரத்தைச் செய்வானேன்?

இதுதான் இந்தக் கூட்டணி ஒற்றுமையாகச் செயல்படுகிறது என்பதற்கு அடையாளமா?
அ.தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாகச் செயல் படுகிறது என்பதற்கு அடையாளம்தான் - தன்னை வரவேற்க அ.தி.மு.க. கொடியுடன் வந்த தொண்டர் களைப் பார்த்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எரிந்து விழுந்தது - வசைமாரி பொழிந்ததும் என்று சொல்லப் போகிறாரா?

தி.மு.க. கூட்டணி வெறுப்புற்றவர்களின் கூட்டணி என்பதற்கு அடையாளம் - இக் கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசுவது, பிரச்சாரம் செய்வது தான் என்கிறாரா?
ஜெயலலிதா அம்மையார்மீதான பார்ப்பனப் பாசம் - சூத்திரர் கலைஞரின் மீதான துவேஷம் இந்த இரண்டும் சேர்ந்து சோ போன்ற பார்ப் பனர்களைப் படாதபாடு படுத்துவதாகத் தெரி கிறது! ஆசை, வெட்கம் அறியாது என்பதை வெளிப்படுத்துகிறது. துக்ளக்கின் விமர்சனக் கட்டுரையைப் படிக்கும்போது ஓர் உண்மை மட்டும் வலிமையாக பளிச்சென்று தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையப் போவதை உணர்ந்த நிலையில், எதையாவது சப்பைக்கட்டுக் கட்டி, தமிழர்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியாவது - சுண்ணாம்பை வெண்ணெய் என்று காட்டியாவது அய்யங்கார் அம்மையாரை அரியணையில் ஏற்ற வேண்டும் என்கிற ஆத்திரத்தில் இருப்பதாகத் தெரிகிறது!

பார்ப்பனர்களின் பேனாவைக் சுழற்றியடிப்பது தான் தமிழர்களின் தலையாயக் கடமை என்பதை தந்தை பெரியார் அவர்கள் நாடி நரம்பில் ஊட்டிச் சென்றாரே - 1971 தேர்தலில்தான் நாடு அதனைக் கண்டதே! யார் அதனை மறந்திருந்தாலும் திருவாளர் சோ ராமசாமி அய்யர் கண்டிப்பாக மறந்திருக் கவே மாட்டார். இப்பொழுது போல அப்பொழுதும் பூணூலை முறுக்கிக் கொண்டு எழுதியவர் அவர்தானே! வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொண்டவர்தானே அந்த அய்யர்வாள் - மறந்திருக்க முடியாதே!

இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது - நாட்டை விட்டு வெளியேற மகா புருஷர்கள் தயாராகிவிட்டனர் என்று ஆச்சாரி யாரை (ராஜகோபாலாச்சாரியாரை) ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்க வைத்தாரே தந்தை பெரியார் - அதனை மறந்துவிட அவர்களால் முடியுமா? இன் னொரு அடியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. நாம் என்ன செய்ய!

ஒன்றுபடக் கூடாதா?

சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவியதாகச் சொல்வார்களே, அதுபோல சன்னமாக ஓர் ஏத்துவேலையைச் செய்கிறது துக்ளக்.

விடுதலைச் சிறுத்தைகள்; பா.ம.க.வின் உறவும் இப்படிப்பட்டதுதான்; (காங்கிரசுக்கும் - தி.மு.க.வுக்கும் இடையே உள்ள உறவு போன்றது தானாம்!) தலைவர்கள் செய்து கொண்ட சமாதானத்தைத் தொண்டர்கள் செய்து கொள்ளாததால் அவரவர்கள் ஓட்டு அந்தந்த கட்சிகளுக்குப் போகுமே தவிர, மற்றவர்களுக்கும் கிட்டாமல் போகும் - என்கிறார் திருவாளர் சோ. இது சோவின் ஆசையே தவிர, உண்மையல்ல. இதில் சன்னமாக கந்தப் பொடி தூவுவது என்பது விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க உறவும் இப்படித்தான் என்று குறிப்பிட்டு இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க., சேர்வது என்பதை சமூகரீ(நீ)தி கண்ணோட்டத்தில் கைகொடுத்து வரவேற்கக் கூடியவர்கள் நாம். தமிழன் ஒற்றுமை - ஜாதியால் சிதறுண்டுப் போகக் கூடாது என்ற கவலை நமக்கு. ஆனால் துக்ளக் பார்ப்பனப் பார்வையில் அது நடந்து விடக் கூடாது என்பதுதான்; அது நடந்து விட்டதே என்கிறபோது அது தங்கள் இனத்துக்கு ஆபத்து என்று உணர்ந்த நிலையில், கிண்டலாக விடுதலைச் சிறுத்தைகள் - பா.ம.க., உறவு பற்றிச் சிலாகிக்கிறது; 2011-லும் பார்ப்பனர்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உணர்வார்களாக!

ம.தி.மு.க.வை மறைத்தது - ஏன்?

அ.தி.மு.க. கூட்டணியின் விரிசலை மயிலிறகால் வருடும் துக்ளக் முழுப் பூசணிக் காயை பிடிசோற்றில் மறைத்ததுபோல ஒரு வேலையைச் செய்திருக்கிறது - நரியை நனையாமல் குளிப்பாட்டுவதாகச் சொல்லு வார்களே - அதுபோல!

கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் 35 இடங்களைக் கொடுத்து தன்வசம் வைத்துக் கொண்ட ம.தி.மு.க.வை இந்த முறை அ.தி.மு.க. தலைமை அவமானப்படுத்தி வெளியேற்றியதே - அதைப்பற்றி இந்த விமர்சனக் கட்டுரையில் ஒருவரிகூட எழுதாமல் இருட்டடித்தது ஏன்?

அதில் கை வைத்தால் குளவிக் கூட்டில் கை வைத்த கதையாக, ஆகி விடுமே - அதனால் தானா? தனக்கு வசதியாக இல்லாவிட்டால் அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்ற பார்ப்பனத் தந்திரம்தானே இது!
கடந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ம.தி.மு.க. வாக்குகளை அ.தி.மு.க. பெற்றதே - இந்தமுறை அதன் வாக்குகள் எங்கு போகும் என்று ஒரே ஒரு வரிகூட - எழுதாததன் மர்மம் என்ன? வைகோவின் பிரச்சாரம் அ.தி.மு.க.வுக்குக் கிடைக்காமல் போனதுபற்றி குறிப்பிடத் தவறியது ஏன்? இவற்றையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு தேர்தல் விமர்சனம் எழுதுகிறது துக்ளக் என்றால் அந்தப் பார்ப்பனத் தந்திரத்தை - யோக்கியதாம்சத்தை - துக்ளக் வாசகர்களும், வாக்காளர்களும்தான் கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்திக் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியம், நடமாடும் நாசம் என்றார் அறிஞர் அண்ணா. அதை இந்த இடத்தில் வட்டக் கோடிட்டுத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

------ கருஞ்சட்டை 1-4-2011 -"விடுதலை” யில் எழுதிய கட்டுரை